வசந்தகுமாரின் கொரோனா வைரஸ் மருந்து.. 2 ரூபாய்தான்.. பரிசீலிக்க மத்திய அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் கண்டுபிடித்த '2 ரூபாய்' கொரோனா மருந்து குறித்து விரைவாக பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் டாக்டர் வசந்தகுமார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். அதில், கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளேன். இதுகுறித்த ஆராய்ச்சி கட்டுரைகளுடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு அனுப்பினேன்.
ஆனால் இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. எனது மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ்.. இந்தியாவில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு.. நாடு முழுக்க 606 பேர் பாதிப்பு!
வீடியோ விசாரணை
இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ் குமார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. காணொலிக்காட்சி மூலம் விசாரணை நடந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘பீட்டா அட்ரெனர்ஜிக் பிளாக்கர்ஸ்' என்று அழைக்கப்படக் கூடிய இந்த மருந்து, சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸ் உடல் செல்களில் நுழையவிடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.
ரூ.2 விலை
இந்த மருந்தின் விலை ரூ.2க்கு குறைவாக நிர்ணயிக்க முடியும். இந்த மருந்தை உட்கொண்டால் கொரோனா அறிகுறி, காய்ச்சலாக மாறாது. தடுத்துவிடும். ஏழை மக்களுக்கு பயனளிக்கும். இவ்வாறு வாதிட்டார்.
உத்தரவு
இதை கேட்டுக் கொண்ட, நீதிபதிகள், இந்த மருந்து குறித்து ஆய்வு செய்வதற்காக, இதன் மீதான ஆய்வு அறிக்கையை மனுதாரர் மீண்டும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும், மத்திய அரசுக்கும் அனுப்ப வேண்டும். ஆய்வு அறிக்கையை பரிசீலித்து மருத்துவ கவுன்சிலும், மத்திய அரசும் உரிய முடிவை விரைவாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
ஏழைகளுக்கு பலன்
ஒருவேளை, இந்த மருந்து பலனளிப்பதாக ஆய்வில் தெரியவந்தால், அது ஏழை எளியோருக்கும் வரப் பிரசாதமாக அமையும். ஏனெனில், கொரோனா சிகிச்சை செலவு என்பது மிக அதிகமாக இருப்பதுதான் இப்போதைக்கு பெரும்பாலான மக்களின் குமுறலாக உள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.