நீங்கள் இருப்பதே நீர்நிலை ஆக்கிரமிப்பில்தான்! சென்னை உயர்நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்த சிபிஎம்
கிருஷ்ணகிரி: நீர்நிலைகளில் உள்ள குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் நீதிமன்ற கட்டிடங்களே நீர்நிலைகளில்தான் இருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கிருஷ்ணகிரியில் நடந்த கட்சி பேரவை கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அதேபோல நீர்நிலை புறம்போக்கில் வீடு கட்டி உள்ளவர்களை வெளியேற்றி அந்த வீடுகளை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நீர்நிலைகளில் உள்ள குடியிருப்புகளை குறிப்பிட்ட காலத்திற்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் மக்கள் இதற்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் பல்வேறு வகையான புறம்போக்கு நிலங்களில் சுமார் 25 லட்சம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு இவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என மக்கள் ஆங்காங்கே போராட்தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து விமர்சித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "நீதிமன்ற கட்டிடங்களே நீர்நிலைகளில்தான் இருக்கிறது" என்று கூறியுள்ளார். கட்சியின் மத்திய குழு முடிவுகளை விளக்கி கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பேரவை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். பேட்டியின் போது இவ்வாறு கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் பேசியதாவது,
வாய்ப்பே இல்ல! ஸ்டாலின் பேசிய சில நிமிடங்களில்..
"நீர்நிலை புறம்போக்கில் வீடு கட்டி உள்ளவர்களை உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். அந்த வீடுகளை இடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் பல்வேறு இடங்களில் நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதி குடியிருப்புகள் நீர் நிலைகளில்தான் கட்டப்பட்டுள்ளன. இவற்றை இடிக்க யார் உத்தரவு போடுவார்கள். நீதிமன்றங்கள் இந்த விஷயத்தில் நியாயமாக நடந்து கொள்கிறதா? இதுபோன்ற போக்கினை வன்மையாக கண்டிக்கிறோம்.
இதே நிலை நீடித்தால் நீதிமன்றங்களை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறும். நாடாளுமன்றத்தின் நிலை குழுவுக்கு அனுப்பப்பட்ட மின்சார சட்டம் 2022
நிறைவேற்றக்கூடாது. இந்தச் சட்டம் இயற்றப்பட்டால் மின்சாரத் துறை தனியாரிடம் சென்று விடும், மேலும் தமிழ்நாட்டிலுள்ள 22 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் பாதிக்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் என்பது ரத்தாகும், மேலும் தனியார் சொல்லும் மின் கட்டணம் செலுத்தி ஆக வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்படும். இந்த மின்சார சட்டத்தை நிறைவேற்றக் கூடாது" என கூறியுள்ளார்.
நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள குடியிருப்புகளை அகற்றுவது சம்பந்தமான நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது சிபிஎம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.