காமராஜர் பயன்படுத்திய கார்...இப்ப எப்படி இருக்கு தெரியுமா?ஆச்சரியப்படும் மக்கள்
கிருஷ்ணகிரி: மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பயன்படுத்திய கார், கிருஷ்ணகிரியில் உள்ள கார் ஷெட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புத்தம் புதிது போல மினுமினுப்பாக மின்னுகிறது. காமராஜர் பிறந்தநாளையொட்டி சென்னை காமராஜர் அரங்கத்திற்கு கார் திரும்ப அனுப்பப்படுகிறது
தமிழ்நாட்டின் முதல்வராக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தாலும் கறை படியாத கைக்கு சொந்தக்காரர் என்று பெயர் பெற்றவர் காமராஜர். காமராஜர் ஆட்சி அமைப்போம் இன்று பலரும் சொல்கின்றனர். சிறப்பான ஆட்சியை கொடுத்தவர் கர்ம வீரர் காமராஜர். தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாதவர்.

காமராஜர் எம்.டி.டி.,2727 என்ற எண் கொண்ட, 1952ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட செவலர்ட் ஸ்டைல் லைன் டீலக்ஸ் கருப்பு நிற காரை பயன்படுத்தி வந்தார். இதை, தொழிலதிபர் டி.வி.சுந்தரம் அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜருக்கு வழங்கினார். பின்னாளில் காமராஜர் முதல்வரான பின்னும் இந்தக் காரையே பயன்படுத்தி வந்தார். முதலமைச்சர் ஆன பிறகும் அரசால் வழங்கப்படும் காரை பயன்படுத்தாமல் தனது செவர்லட் காரிலேயே தமிழகம் முழுவதும் பயணித்து பாமர மக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளைக் கேட்டறிந்தார் காமராஜர்.
1963ஆம் ஆண்டு முதல்வர் பதவியில் இருந்து விலகி கட்சிப் பணியில் ஈடுபட்ட போதும் எம்.டி.டி.,2727 இதே காரில்தான் தமிழகத்தை வலம் வந்தார் காமராஜர். பின்பு இந்திரா காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஸ்தாபன காங்கிரûஸ ஏற்படுத்தி, அதை வலுப்படுத்த அவர் எடுத்துக் கொண்ட முயற்சியின்போதும் இந்தக் காரில்தான் தமிழகம் முழுவதும் பயணம் செய்துள்ளார். 1975ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காமராஜர் மறைவுக்குப் பின், சென்னை காமராஜர் அரங்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்தக் கார் பராமரிப்பின்றி கிடந்தது.

தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல் கட்சிக்காக உழைத்தவர் காமராஜர். ஒரு கட்டத்தில் அவரது காரை விற்பனை செய்ய முடிவு செய்து விலையும் பேசி விட்டனர். அதைக்கேட்டு கண்ணதாசன் கோபத்தோடு எழுதவே, பின்னர் காரை விற்பனை செய்யாமல் பொக்கிஷமாக பாதுகாத்தனர்.
ஆட்சிகள் மாறியதும் காட்சிகள் மாறின. காமராஜரின் கார் சென்னையில் காமராஜர் அரங்கத்தின் பின் பக்க நுழைவாயில் அருகே பரிதாபமான நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கார் சிதிலமடையும் நிலைக்கு போகவே, ஏன் ஒரு மாமனிதர் பயன்படுத்திய காரை கூட சரியாக காங்கிரஸ் கட்சியினரால் பராமரிக்க முடியவில்லையா என்று கேள்வி எழுப்பினர். இதனையடுத்து கிருஷ்ணகிரியில் உள்ள டார்க் மேக்ஸ் என்ற கார் மெக்கானிக் ஷெட்டில் புனரமைக்கப்பட்டு இன்று பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தப்பட்டது. புதுப்பொலிவுடன் உள்ள காமராஜரின் காரை தற்போது பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் வந்து கார் அருகில் நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
நாங்கள் பாரம்பரியமாக காங்கிரஸ் குடும்பத்தினர் என்ற அடிப்படையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிதான் என்னிடம், காமராஜரின் காரை புதுப்பித்து தருமாறு கேட்டார். அதன்படி கடந்த, ஜூன் 1ஆம் தேதியில், காரை சென்னை காமராஜர் அரங்கத்திலிருந்து எடுத்து வந்து கிருஷ்ணகிரியில் புதுப்பொலிவுடன் தயார் செய்துள்ளோம் என்று கார் ஷெட் உரிமையாளர் அஷ்வின் ராஜ்வர்மா தெரிவித்தார்.
என் தாத்தா முனுசாமி கவுண்டர், காமராஜர் காலத்தில் கிருஷ்ணகிரியில் எம்.எல்.ஏ.வாக இருந்தார். என் தந்தை ராஜேந்திர வர்மா தனியார் பஸ்கள் வைத்து தொழில் நடத்துகிறார். நான் கிருஷ்ணகிரியில் கார்ஷெட் வைத்துள்ளேன். கார் கண்ணாடி, ரப்பர் உதிரி பாகங்கள், லைட்டுகள் அமெரிக்காவில் ஆர்டர் செய்து வரவழைத்தோம். அதேபோல சில்வர் பாகங்களை ஜோத்பூர் அரண்மனையில் பழைய கார்களை புனரமைக்கும் நிபுணர் அர்ஜூன் தலைமையிலான குழுவினரால் புதுப்பித்தோம் என்று கூறினார்.

வரும் 15ஆம் தேதி, காமராஜர் பிறந்தநாளையொட்டி சென்னை காமராஜர் அரங்கத்திற்கு கார் திரும்ப அனுப்பப்படுகிறது. இந்நிகழ்ச்சியை கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்.பி., செல்லகுமார் கொடியசைத்து துவக்கி வைக்கிறார் என்று அஷ்வின் ராஜ்வர்மா கூறியுள்ளார். எம்.டி.டி.,2727 என்ற கார் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. காமராஜரின் கையெழுத்து அந்த காருக்குள் உள்ளது. என்ன மக்களே நீங்களும் காமராஜர் பயன்படுத்திய காரை பார்க்க விரும்புகிறீர்களா. சென்னைக்கு வரும்போது காமராஜர் அரங்கத்திற்கு சென்று வாருங்கள்.












Click it and Unblock the Notifications