"ஏய் கொரோனா.. இப்ப புடிடா பாப்போம்..".. பூரண குணமடைந்த 99 வயது முதியவரின் வெற்றிக் கதை!
லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா பாதித்த 99 வயது முதியவர் அந்த நோய் தாக்குதலில் இருந்து மீண்டதை அடுத்து அவருக்கு செவிலியர்கள் உரிய மரியாதையை செலுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
வடக்கு இங்கிலாந்தை சேர்ந்தவர் ஆல்பர்ட் சாம்பர்ஸ் (99). இவர் கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் கீழே விழுந்துவிட்டார். இதனால் அவரது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் டான்காஸ்டர் பகுதியில் உள்ள டிக்ஹில் சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கொரோனா அறிகுறியும் தென்பட்டது. இதையடுத்து அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு கோவிட் 19 சோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.
பிழைப்பது
உலகில் கொரோனா வயதானவர்களையே அதிகம் பாதித்து வந்தது. அது போல் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் அவர்கள் உயிர் பிழைப்பதும் கடினம் என கூறப்பட்டு வந்ததால் ஆல்பர்ட்டின் உறவினர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டது. எனினும் நம்பிக்கை, தைரியம் காரணமாக அந்த முதியவர் கொரோனா நோயிலிருந்து மீண்டார்.
வீட்டுக்கு வழியனுப்புதல்
அவருக்கு மரியாதை செலுத்தும்விதமாக அவருக்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள் அனைவரும் வாசல் வரை வந்து முதியவரை அவரது வீட்டுக்கு வழியனுப்பி வைத்தனர். ஆல்பர்ட்டின் மனைவி இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். அன்றிலிருந்து தனியே வாழ்ந்து வருகிறார். ஒரு வீடியோவில் அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார் ஆல்பர்ட்.
இரண்டாம் உலக போர்
இதுகுறித்து அவரது பேரன் 49 வயதாகும் ஸ்டீபன் கேட்டர் கூறுகையில் தாத்தாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை அறிந்தவுடன் நாங்கள் எல்லாம் வேதனை அடைந்தோம். அவரது வலிமைதான் அவரை காப்பாற்றியது. அந்த வலிமை அவர் பிரிட்டிஷ் ராணுவ வீரராக இருந்ததிலிருந்து பெற்றது என்றார். அவர் இரண்டாம் உலகப் போரின் போது ராணுவ வீரராக இருந்தார்.
|
அரண்மனை
ஆல்பர்ட் வட ஆப்பிரிக்காவில் நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்து எதிரிகளால் பிடிக்கப்பட்டார். பின்னர் அவர் ஜெர்மனியில் உள்ள பாலிங்பாஸ்டலில் ஒரு சிறையில் 3 ஆண்டுகள் வைக்கப்பட்டார். இந்த போருக்கு பிறகு லண்டனின் அரண்மனையை இவர் பாதுகாத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.