பொம்மை ஆம்புலன்ஸ் உதவியால் தாயின் உயிரை காப்பாற்றிய குட்டிப்பையன்.. இந்தகால குழந்தைங்க செம ஸ்மார்ட்!
ஐந்து வயது சிறுவனின் சாமர்த்தியத்தால் அவனது தாயின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
லண்டன்: சாமர்த்தியமாக செயல்பட்டு தாயின் உயிரை காப்பாற்றிய ஐந்து வயது இங்கிலாந்து சிறுவனின் கதை சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
தற்போதைய ஸ்மார்ட் போன் யுகத்தில் பிறக்கும் குழந்தை கூட ஸ்மார்ட்டாக தான் பிறக்கிறது. அவர்களது சிந்தனை ஆற்றல் பல சமயங்களில் நம்மை மிரள வைக்கின்றன. அப்படி ஒரு மிரள வைக்கும் சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.

இங்கிலாந்தின் மேற்கு மெர்சியா காவல்துறை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த சம்பவம் கடந்த மாதம் நடந்தது. சம்பவத்தன்று நம் கதையின் ஹீரோவான ஐந்து வயது சிறுவன் ஜோஷ், தனது தாய் மற்றும் தம்பியுடன் வீட்டில் இருந்துள்ளான். அப்போது திடீரென அவனது தாய் மயங்கி கீழே விழுந்து விட்டார்.
இதைப்பார்த்து அதிர்ந்து போன ஜோஷ் சற்றும் தாமதிக்காமல் இங்கிலாந்து அவசர உதவி எண்ணான 112க்கு உடனடியாக அழைத்து தகவல் தெரிவித்துள்ளான். இதில் என்ன ஆச்சரியம் என்றால் அவன் அந்த எண்ணை பார்த்து எடுத்தது, அவனது பொம்மை ஆம்புலன்சில் இருந்து என்பது தான்.
உடனடியாக விரைந்து வந்த மருத்துவ பணியாளர்கள் ஜோஷின் தாயை மீட்டு சிகிச்சை அளித்தனர். இதனால் அவர் உயிர் பிழைத்தார். இந்த சம்பவம் இங்கிலாந்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. ஐந்து வயது சிறுவனின் சாமர்த்தியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
"இந்த புத்திசாலி சிறுவன் மிகவும் தைரியசாலியும் கூட. நாங்கள் அவர்களது வீட்டுக்கு போய் அவனது தாய்க்கு உதவும் வரை தொலைப்பேசி இணைப்பை துண்டிக்காமல் ஜோஷ் லைனிலேயே காத்திருந்தான். எதிர்காலத்தில் ஒரு திறமையான போலீஸ் அதிகாரியாக வருவதற்கான அத்தனை திறமையும் ஜோஷிடம் இருக்கிறது", என இங்கிலாந்து காவல்துறையினர் ஜோஷை புகழ்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications