இஸ்மாயிலி முஸ்லிம்களின் மத குரு.. ஏழை பங்காளர் ஆகா கான் மறைந்தார்!
லண்டன்: இஸ்மாயிலி முஸ்லிம்களின் ஆன்மீகத் தலைவரான பிரின்ஸ் கரிம் அல்-ஹுசைனி, (ஆகா கான் IV என்று அறியப்படுபவர்) போர்சுக்கலில் இன்று காலமானார். அவருக்கு வயது 88. அவரது உடல் லிஸ்பனில் அடக்கம் செய்யப்படும்.
1936 டிசம்பர் 13 ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் பிறந்த ஆகா கான் IV (Aga Khan), ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, 1957 இல் தனது 20 வயதில் ஷியா இஸ்மாயிலி முஸ்லிம்களின் 49 வது பரம்பரை இமாமானார்.
இஸ்மாயிலி முஸ்லிம் சமூகம் ஷியா இஸ்லாத்தின் ஒரு பிரிவாகும். இந்த சமூகத்தின் தலைவரை 'ஆகா கான்' என்று அழைப்பார்கள். அந்த வகையில், தற்போது காலமான கரிம் அல்-ஹுசைனி நான்காவது ஆகா கான் ஆவார்.
அவரது தலைமையில், ஆகா கான் மேம்பாட்டு நெட்வொர்க் (AKDN) சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி மற்றும் கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றில் 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் பல உதவிகளை செய்துள்ளது. ஆண்டுக்கு 1 பில்லியன் டாலர்கள் மதிப்பில் இந்த அமைப்பு உதவிகள் செய்துள்ளது. வங்கதேசம், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் பல நாடுகளில் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் செயல்பட இந்த அமைப்புதான் வழிவகுத்தது.

ஆகா கான் IV முஸ்லிம் சமூகங்களுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான நட்பையும், பேச்சுவார்த்தைகளின் அவசியத்தையும் ஆதரித்தே வந்தார். அதேபோல, இஸ்லாமிய கலாச்சாரம், கட்டிடக்கலை மற்றும் கலைகளை மேம்படுத்தினார். ஆகா கான் கட்டிடக்கலை விருதை தொடங்கி, உலகளவில் வரலாற்று சிறப்புமிக்க இஸ்லாமிய புராதான சின்னங்களை மீட்டெடுப்பதற்கு நிதி வழங்கி வந்தார். இவரது சமூகப் பணியை பாராட்டி 1957 இல், ராணி எலிசபெத் II அவருக்கு "ஹிஸ் ஹைனஸ்" என்ற பட்டத்தை வழங்கினார்.
ஆகா கான் மறைவுக்கு உலகின் பல நாட்டு தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ஆகா கானுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் மற்றும் பல பேரக்குழந்தைகள் உள்ளனர். அவரது வாரிசின் பெயர் அவரது விருப்ப உயில் வாசிக்கப்பட்ட பிறகு பொதுவில் வெளியிடப்படும். கல்வி, சுகாதாரம் மற்றும் கலாச்சார பாதுகாப்பில் அவரது பங்களிப்புகள் நீடித்த பாரம்பரியமாக நிலைத்திருக்கும்.












Click it and Unblock the Notifications