கணக்கு பாடம் ரொம்ப முக்கியம்.. மாணவர்களுக்கு ஆர்வம் இல்லை.. இனி 18 வயது வரை கட்டாயம்.. ரிஷி சுனக்
லண்டன்: இங்கிலாந்தில் 18-வயது வரை அனைத்து மாணவர்களுக்கும் கணக்கு பாடம் விரைவில் கட்டாயம் ஆக்கப்படும் என்று அந்த நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். 16 வயது வரை 60 சதவீத மாணவர்களுக்கு அடிப்படை கணக்குகள் கூட தெரியாத நிலை இருப்பதாலும், உலகின் சிறந்த கல்வி அமைப்புகளை கொண்ட நாடாக இங்கிலாந்தை கொண்டு வரும் நோக்கத்திலும் இந்த திட்டத்தை முன்னெடுக்க ரிஷி சுனக் முடிவு செய்துள்ளார்.
இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வசதி படைத்த நாடுகளில் கல்வியின் தரம் சிறப்பாக உள்ளது என்ற பொதுவான ஒரு கருத்து நிலவி வருகிறது.
இதற்காக பல லட்சங்களை கொட்டி கொடுத்து மேல் படிப்புக்காக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு படிக்க ஏராளமான மாணவர்கள் விரும்புகின்றனர்.
அலறவிடும் சீனா.. நடுங்கி கிடக்கும் நாடுகள்.. மேஜர் உத்தரவை பிறப்பித்த இங்கிலாந்து.. வேற வழியேயில்லை
கணக்கு பாடங்கள் சரியாக தெரியவில்லை
அங்குள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளும் புகழ்பெற்ற நிறுவனங்களில் கிடைப்பதால் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் கூட வெளிநாடுகளுக்கு சென்று கல்வி கற்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டுள்ளது. வசதி படைத்த நாடுகளில் சென்று கல்வி பயில வேண்டும் என பலரும் விரும்பும் சூழலில், இங்கிலாந்து மாணவர்கள் பலருக்கும் கணக்கு பாடங்கள் சரியாக தெரியவில்லை என்று அந்நாட்டு பிரதமரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது உரையில் கூறியிருப்பதாவது:-
18-வயது வரை..
இங்கிலாந்தில் உள்ள அனைத்து மாணவர்களும் 18-வயது வரை கணக்கு பாடத்தின் ஏதாவது ஒரு பிரிவை படிக்க வேண்டும். எனது வாழ்க்கையில் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பும் கல்வியின் மூலமே தொடங்கியது. ஒவ்வொரு குழந்தைக்கும் உயர்தரமான கல்வியை வழங்குவது ரிஷி சுனக் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்கான மிக முக்கிய காரணம் ஆகும். சரியான திட்டமிடல் மற்றும் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் உலகில் உள்ள சிறந்த கல்வி முறைகளை நம்மால் எதிர்த்து நிற்க முடியும்.
வீழ்ச்சிக்கு வழிவகுப்பதாக ஆகிவிடும்
கணிதவியல் பாடம் குறித்த நமது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்வது இன்றைய கல்வி முறையில் அவசியமாக உள்ளது. இன்றைய உலகத்தில் எங்கு பார்த்தாலும் அனைத்து வேலைகளிலும் தரவுகளும் புள்ளி விவரங்களுமே உள்ளன. எனவே நமது பிள்ளைகளில் வேலையானது முன்பை விட அதிக பகுப்பாய்வு திறன் (analytical skills) கொண்டதாக மாறும். எனவே இந்த திறன் இன்றி நமது பிள்ளைகளை வைத்திருப்பது அவர்களின் வீழ்ச்சிக்கு வழிவகுப்பதாக ஆகிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
கணித திறன்களை மேம்படுத்த
எனினும் இங்கிலாந்தில் சுமார் 80 லட்சம் மாணவர்கள் தொடக்க கல்வி மாணவர்களுக்கு உள்ள கணித திறன்களேயே கொண்டிருப்பது இந்த சீர்த்திருத்தத்தை கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு சவாலாக அமையும் என்றும் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் தற்போது 16-19 வயது வரம்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையில் பாதியளவு பேர் மட்டுமே கணக்கை ஒரு பாடமாக எடுத்து படித்து வருகிறார்கள். இதனால், 16 வயது வரை 60 சதவீத மாணவர்களுக்கு அடிப்படை கணக்குகள் கூட தெரியவில்லையாம். இதனால், மாணவர்களுக்கு கணித திறன்களை மேம்படுத்தும் வகையில் கணித பாடத்தை கட்டாயம் ஆக்கும் திட்டத்தை ரிஷி சுனக் முன்னெடுத்து இருப்பதாக தெரிகிறது.