பிரிட்டன் மட்டுமில்லை.. மொத்தம் 14 நாடுகளுக்கு எலிசபெத் தான் இப்போதும் ராணி.. அது எப்படி தெரியுமா
லண்டன்: பிரிட்டன் மட்டுமின்றி இன்றும் கூட கனடா உள்ளிட்ட உலகின் 14 நாடுகளின் தலைவர் ராணி எலிசபெத் தான் என்பது பலரும் அறிந்திடாத தகவல் ஆகும்.
பிரிட்டன் மகாராணியாக சுமார் 70 ஆண்டுகள் இருந்த ராணி எலிசபெத், நேற்றைய தினம் உடல்நலக்குறைவால் காலமானார். 96 வயதான ராணி எலிசபெத் ஸ்காட்லாந்தில் காலமானார்.
ராணி எலிசபெத் உடல்நிலை நேற்று மாலையே மோசமானது. இதையடுத்து அவரை நேரில் பார்க்க ராணி எலிசபெத்தின் நெருங்கிய உறவினர்கள் அனைவரும் ராணி எலிசபெத் இருந்த ஸ்காட்லாந்து அரண்மனைக்கு விரைந்தனர்.

எலிசபெத்
ஒரு காலத்தில் உலகின் பெரும்பாலான பகுதிகளை ஆட்சி செய்த பிரிட்டன். 1940கள் தொடங்கிப் பல நாடுகளுக்கு சுதந்திரம் அளித்து வந்தது. அதுபோன்ற ஒரு சமயத்தில் தான் பிரிட்டன் ராணியாக இரண்டாம் எலிசபெத் பதவியேற்றார். அவர் பதவியேற்ற சமயத்தில் இருந்து பிரிட்டன் செல்வாக்கு உலக அளவில் மெல்லக் குறையத் தொடங்கியது. இப்போது உலகின் 6வது பெரிய பொருளாதாரமாகத் தான் பிரிட்டன் உள்ளது.

14 நாடுகள்
அவர் ராணியாக இருந்த காலத்தில், பிரிட்டன் ஆட்சி செய்த நாடுகள் சுருங்கியது என்றாலும் கூட அவர் மரணமடையும் சமயத்தில் பிரிட்டன் தவிரக் கனடா, ஜமைக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட 14 நாடுகளுக்கு அவர் தலைவராக இருந்தார் என்பது பலருக்குத் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. ராணியாகப் பதவியேற்ற சமயத்தில் அவர் பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை என மொத்தம் ஏழு சுதந்திர நாடுகளுக்குத் தலைவராக இருந்தார்.

எப்படி
அதன் பின்னர் இந்த எண்ணிக்கை அதிகரிக்கவே செய்தது. ஏனென்றால், பிரிட்டன் ஆட்சியில் இருந்து பல்வேறு நாடுகள் சுதந்திரம் அடையத் தொடங்கியது. அவை புதிய சுதந்திர நாடுகளாக உருவெடுத்த சமயத்தில், சில நாடுகள் ராணி எலிசபெத்தையே நாட்டின் தலைவராக வைத்துக் கொண்டன. அவர் 14 நாடுகளுக்குத் தலைவராக இருந்தாலும், அது பெரும்பாலும் வெறும் சம்பிரதாயமாக இருந்தது. அவரது பணிகள் பெரும்பாலும் அந்தந்த நாடுகளில் உள்ள கவர்னர் ஜெனரல்களாலேயே மேற்கொள்ளப்படும்.

எந்த நாடுகள்
அதாவது பிரிட்டனுக்கு மட்டுமில்லை, அவர் வேறு பல்வேறு நாடுகளுக்கும் ராணியாகவே இருந்துள்ளார். அவர் உயிரிழக்கும் சமயத்தில், ஆன்டிகுவா மற்றும் பார்புடா, ஆஸ்திரேலியா, பஹாமாஸ், பெலிஸ், கனடா, கிரெனடா, ஜமைக்கா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினியா, செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயிண்ட் லூசியா, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், சாலமன் தீவுகள், துவாலு மற்றும் பிரிட்டனுக்கு அவர் ராணியாக இருந்தார்.

நீக்கம்
பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் அடையும் நாடுகள் எலிசபெத்தை ராணியாக ஏற்கும். இருப்பினும், பல்வேறு காரணங்களால் சில நாடுகள் எலிசபெத் ராணியைத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கியும் உள்ளது. அவர் மொத்தம் 32 நாடுகளின் தலைவராக இருந்தார். இருப்பினும், அதில் 17 நாடுகள் ஒவ்வொரு சமயங்களிலும் எலிசபெத்தை ராணி பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளனர்.

காரணம்
பிரிட்டன் ஆட்சி செய்த காலத்தில் பல்வேறு கொடுமைகள் நடந்துள்ளதாகவும் இதனால் சுதந்திரம் அடைந்த பின்னரும் அந்நாட்டில் இருந்து ஒருவரைத் தலைவராக வைத்துக் கொள்ள முடியாது என்பதே நீக்கிய பெரும்பாலான நாடுகளின் வாதம் ஆகும். இப்படித்தான் கடந்த 2021இல் பார்படாஸ் நாடு எலிசபெத்தைத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கியது.

ராணி
ராணி எலிசபெத் உயிரிழந்த சமயத்தில், குடும்பத்திற்கு வெளியே பிரிட்டன் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் எம்பிக்களுக்கு தெரிவிக்கப்படும். அதன் பின்னர் பிரிட்டன் ராணியாக இருக்கும் இந்த 14 நாடுகளின் பிரதமர் அல்லது அதிபர்களுக்கே முதலில் தெரிவிக்கப்படும். அதன் பின்னரே காமன்வெல்த் நாடுகளுக்கும் மற்ற இதர நாடுகளுக்கும் தகவல் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications