சூப்பர் பூமி.. முதல்முறையாக வாழும் சூழல் உள்ள கிரகம் கண்டுபிடிப்பு.. தண்ணீர் கூட இருக்காம்!
Recommended Video
லண்டன்: சூரிய குடும்பத்திற்கு வெளியே தண்ணீர் உள்ள புதிய அந்நிய கிரகத்தை விண்வெளி ஆய்வாளர்கள் முதல்முறையாக கண்டுபிடித்துள்ளனர். இங்கு பூமியை போல் வாழ்வதற்கு ஏற்ற வெப்ப சூழல் மற்றும் தண்ணீர் காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
K2-18b என்ற புதிய கிரகத்தை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2015ம் ஆண்டு கண்டுபிடித்தனர். அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் கெப்லர் விண்கலம் இந்த கிரகத்தை கண்டுபிடித்தது
சூப்பர் பூமி என்று அழைக்கப்படும் இந்த கிரகம் நமது சூரிய குடும்பத்தில்இருந்து 111 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்திருக்கிறது. ஹப்பிள் என்ற விண்வெளி தொலைநோக்கியின் வாயிலாக இந்த கிரகத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.
K2-18b கிரகம்
இந்த கிரகம் குறித்து நடந்த இரண்டு ஆராய்ச்சி முடிவுகளை இந்த வாரம் அறிஞர்கள் வெளியிட்டுள்ளனர். இதன்படி K2-18b கிரகத்தில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளனர். இந்த கிரகம் நமது சூரியனைவிட மிக சிறியதாக இருக்கும் ஒரு நட்சத்திரத்தை சுற்றி வந்தாலும் அங்கு காணப்படும் நீர் மற்றும் வெப்பம் வாழக்கூடிய சூழலுக்கு ஏற்ற வகையில் உள்ளதாக தெரிய வந்துள்ளது. பூமியைப்போல் உயிர்வாழ்வதற்கு ஏற்ற சூழலுடன் ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறையாகும்.
வளிமண்டல பிரதேசம்
மேலும் K2-18b கிரகம் நம் வசிக்கும் பூமியை போல் கிடையாது. நம் பூமியைவிட எட்டு மடங்கு பெரியது. அதாவது நெப்டியூன் கிரகத்தை போல் பனிப்பிரதேசமாகவோ அல்லது நைட்ரஜன் நிறைந்த வளி மண்டலத்தை கொண்ட பிரதேசமாக இருக்கலாம்.
ஏழு மடங்கு நெருக்கம்
பூமி சூரியனை சுற்றுவதைவிட ஏழு மடங்கு நெருக்கமாக K2-18b கிரகம் தனது நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. ஆனால் இது ஒரு வகை மங்கலான எம் குள்ளன் என்ற சிவப்பு நட்சத்திரத்தை சுற்றி வருவதால் அந்த குடும்பத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
பூமிக்கு சமமான வெப்பம்
K2-18b கிரகத்தின் வெப்பநிலை 100 முதல் 116 டிகிரி பாரன்ஹீட் வரை அங்கு இருக்கும் எனறு கணிக்கப்பட்டுள்ளது. இது பூமியை போல் பிரதிபலிக்கும் பட்சத்தில் நமது பூமியின் வெப்பநிலையைப்போல் சமமாக இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
உயிர்கள் வாழ ஏற்ற கிரகம்
லண்டன் பல்கலைக்கழக விண்வெளி பேராசிரியர் ஏஞ்செல்ஸ் டிசாரஸ் நடத்திய இரண்டு ஆராய்ச்சி முடிவுகளில் ஒரு ஆய்வு முடிவினை செய்தியாளர்கள் மத்தியில் அறிவித்தார்.இது தொடர்பாக அவர் கூறுகையில், K2-18b என்ற இந்த ஒரு கிரகம் தான் சூரிய குடும்பத்திற்கு அப்பால் பூமியைப் போல் சரியான வெப்பநிலை மற்றும் தண்ணீருடன் காணப்படுகிறது. . இதன் காரணமாக பூமியைப் போல் உயிரினங்கள் வசிக்க உகந்த கிரகமாக தெரிகிறது என்றார்.
வளி மண்டலம் அறிகுறிகள்
முன்னதாக 1992ம் ஆண்டு முதல் முதலில் எக்ஸோபிளானெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து விண்வெளி ஆய்வாளர்கள் தொலைத்தூரங்களில் உள்ள கிரங்களை ஆராய்ந்து வருகிறார்கள்.அப்படி ஆராய்ந்து வரும் கிரங்களில் சிலவற்றில் வளி மண்டலம் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால் அப்படி கண்டுபிடிக்கப்பட்ட கிரங்கள் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல்கள் இல்லாதவை ஆகும்.
2018ம் ஆண்டு கண்டுபிடிப்பு
உதாரணமாக 2018ம் ஆணடு WASP-39b என்ற கிரகத்தில் வளிமண்டலத்தில் நீராவி இருப்பதை கண்டுபிடித்து அறிவித்தது. இந்த கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரிய சனி அளவிலான கிரகம் ஆகும். அங்கு நாள் முழுவதும் 1,430 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் இருப்பது தெரியவந்தது.