கொரோனா 2வது அலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. ஐரோப்பிய நாடுகளில் துவங்கியது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
லண்டன்: கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கக் கூடிய நிலையில் உலகின் பல்வேறு நாடுகளும் பண்டிகையை உற்சாகமாக வரவேற்க தயாராகி வருகின்றன.
கொரோனா, காரணமாக ஐரோப்பிய நாடுகளின் பல பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு நிலை உள்ள போதிலும், கூட கிறிஸ்துமஸ் மரங்கள் உள்ளிட்ட பண்டிகை சார்ந்த பொருட்கள் விற்பனைக் கடைகளைத் திறந்து வைக்க அந்த பல நாட்டு அரசுகள் அனுமதி வழங்கியுள்ளனர்.
பல நாடுகளில் கிறிஸ்துமஸை ஒட்டி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின், தலைநகர் பாரிசில் உள்ள சாலைகள் முழுக்க வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பாரிஸ் நகர மேயர் விளக்குகளை ஒளிர விட்டு ஒரு மாத கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை இப்போதே துவக்கி வைத்து விட்டார்.
ஊரடங்கு உத்தரவு தளர்வு வழங்கப்பட்டு இருந்தாலும்கூட, கோடை காலம் போல முழு அளவில் அந்த தளர்வுகள் இருக்காது என்று ஐரோப்பிய நாடுகளின் அரசுகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் தற்போது இரண்டாவது அலை பரவல் இருப்பதால் அதற்கு மத்தியில் பண்டிகை கொண்டாட்டங்களையும் பாதுகாப்பாக நடத்த வேண்டுமென்ற இரட்டை முன்னெச்சரிக்கை நிலைகளை அந்தந்த அரசுகள் கையில் எடுத்துள்ளன.
கொரோனா நோய்த்தொற்று பரவியுள்ள பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 10 நாட்கள் முன்பாக கடை திறப்பதற்கு இத்தாலி அரசு அனுமதி வழங்கி உள்ளது. இருப்பினும் குறைந்த அளவுக்கான கூட்டம் மட்டுமே கடைகளில் ஒரே நேரத்தில் கூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
டிசம்பர் இரண்டாம் தேதி பிரிட்டனில் ஊரடங்கு உத்தரவு காலம் முடிவுக்கு வர உள்ளது. எனவே அடுத்த கட்டமாக எந்த மாதிரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றி வரும் திங்கள்கிழமை பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது.
பட்டு துணியை நெய்தவருக்கு புது துணி இல்லை.. சிவகாசி தொழிலாளி குழந்தைக்கு பட்டாசு இல்லை.. கொரோனா வடு
கொரோனா நோய்ப் பரவலின் முதல் அலையை வெற்றிகரமாக சமாளித்த நாடு ஜெர்மனி. ஆனால், அங்கு இப்போது இரண்டாவது அலை மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அங்கு இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு தொடரும் என்று தெரிகிறது.
பவாரியா நாட்டின் பிரதமர் மார்க்கஸ் கூறுகையில், கிறிஸ்துமஸ் விமரிசையாக கொண்டாடப்பட வேண்டும். அதே நேரம் லாக்டவுன் நடைமுறைகள் உறுதியாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.