கலர் மாறும் கடல் நீர்.. சத்தமில்லாமல் பூமியில் நடக்கும் மாற்றம்.! காரணத்தை கேட்டா ஸ்டன் ஆகிடுவீங்க
லண்டன்: பூமி என்பது நான்கில் சுமார் மூன்று பங்கு கடல்களால் சூழப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாகவே விண்வெளியில் இருந்து பார்த்தால் கூட நமது கிரகம் நீல நிறத்திலேயே தெரியும். மனிதர்கள் உயிர் வாழவும் கூட நீர் தான் மிக முக்கியமானதாக இருக்கிறது. ஆனால், இந்தக் கடல் நீர் எப்போதும் நீல நிறத்தில் இருந்தது இல்லை. இனி இருக்கப் போவதும் இல்லை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது பூமியில் உள்ள கடல்கள் எப்போதும் நீல நிறத்தில் இருந்தது இல்லை. இனி இருக்கப் போவதும் இல்லை. நமது கடல் நீர் கடந்த காலங்களில் பச்சை நிறத்தில் இருந்தது என்றால் நம்ப முடிகிறதா.. ஆனால், உண்மை அதுதான்!

பச்சை நிறக் கடல் நீர்
ஜப்பானைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நேச்சர் இதழில் இது குறித்த ஆய்வை வெளியிட்டுள்ளது. அதில் பூமியின் பெருங்கடல்கள் ஒரு காலத்தில் பச்சை நிறத்தில் இருந்தன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டைய காலத்தில் பூமியின் பெருங்கடல்கள் இதுபோல பச்சை நிறத்தில் தோன்ற அப்போது கடலில் இருந்த வேதியியல் மற்றும் ஒளிச்சேர்க்கையே காரணமாக இருந்துள்ளது.
சுமார் 3.8 முதல் 1.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது ஆர்க்கியன் மற்றும் பேலியோபுரோடெரோசோயிக் காலகட்டத்தில் இரும்பு தாதுக்கள் கடலில் படிந்தன. அப்போது பெருங்கடல்களில் ஒரு செல் உயிரினங்களுக்குள் மட்டுமே இருந்தது. கண்டங்கள் அனைத்தும் சாம்பல், பழுப்பு மற்றும் கருப்பு பாறைகள் மற்றும் வண்டல்களாலான ஒரு தரிசு நிலப்பரப்பாக இருந்தன.
என்ன காரணம்
அப்போது நிலப்பகுதிகளில் மழை பெய்யும்போது அந்தப் பாறைகளில் இருக்கும் இரும்புத் தாது கரைந்து, ஆறுகள் மூலம் அவை கடல்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதேபோல எரிமலை வெடிப்பின் போதும் எரிமலைகளில் இரும்பு தாதுக்கள் கலந்தன. இந்த இரும்பு தாதுக்கள் சிவப்பு மற்றும் நீல ஒளியை இழுத்துக் கொண்டு, பச்சை ஒளியைப் பிரதிபலிக்கும். இதன் காரணமாகவே அப்போது கடல் நீர் பச்சை நிறத்தில் தென்பட்டது.
ஆர்க்கியன் காலகட்டம் என்பது பூமியின் வளிமண்டலம் மற்றும் கடல் வாயு ஆக்ஸிஜன் இல்லாத காலமாகும். இருப்பினும், அப்போது தான் சூரிய ஒளியில் இருந்து ஆற்றலை உருவாக்கிய முதல் உயிரினங்கள் தோன்றிய காலமாகும். இந்த உயிரினங்கள் ஆக்ஸிஜன் இல்லாத நிலையிலும் ஒளிச்சேர்க்கையைச் செய்து தனக்கான உணவை உற்பத்தி செய்து கொண்டன. இந்த ஒளிச்சேர்க்கையின்போது விளைபொருளாக ஆக்ஸிஜன் வாயு உருவானது. அதுவே பல்வேறு முக்கிய மாற்றங்கள் உருவாகக் காரணமாக இருந்தது.
நீல நிறத்திற்கு என்ன காரணம்
இறுதியில், இந்த ஆரம்பக்கால ஒளிச்சேர்க்கை காரணமாகவே ஆக்ஸிஜன் இல்லாத பூமியிலிருந்து கடல் மற்றும் வளிமண்டலத்தில் அதிக அளவு ஆக்ஸிஜன் உருவானது. அதுவே இப்போது பூமியில் மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் இருக்கக் காரணமாக இருக்கிறது. மேலும், இந்த ஆக்சிஜன் கடலில் உள்ள இரும்புடன் வினை புரிந்து, அதன் இருப்பைக் குறைத்தது. இதனால் அது நீல ஒளியை அதிகமாகப் பிரதிபலிக்கத் தொடங்கியது. இதன் காரணமாகவே கடல் இப்போது நீல நிறத்தில் தெரிகிறது.
அதேநேரம் இந்த நீல நிறம் தான் கடலின் இறுதி நிறம் எனச் சொல்ல முடியாது. தண்ணீரில் ஏற்படும் கெமிக்கல் மாற்றம் & பூமியில் ஏற்படும் மாற்றங்களால் கடல் நீர் நிறம் மாறுவதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் காலங்களில் பூமியில் ஏற்படும் மாற்றங்களால் மீண்டும் கடல் நீரின் கலர் மாற வாய்ப்புகள் மிக மிக அதிகம்.
கலர் மாறும் கடல்நீர்
ஒருவேளை பூமியில் சல்பரின் அளவு அதிகமாக இருந்தால் ஊதா நிறக் கடல்களை நாம் பார்க்க முடியும். தீவிர எரிமலை செயல்பாடு மற்றும் வளிமண்டலத்தில் குறைந்த ஆக்ஸிஜன் இருந்தால், ஊதா நிற சல்பர் பாக்டீரியாக்களின் ஆதிக்கம் கடலில் அதிகரிக்கும். இதனால் கடல் ஊதா நிறத்தில் மாறும்.
மறுபுறம் பாறைகளின் சிதைவிலிருந்து சிவப்பு ஆக்ஸிடைஸ்டு இரும்பு அதிகளவில் ஆறுகள் மூலம் கடல்களுக்குக் கொண்டு செல்லப்படும் போது, தீவிர வெப்பமண்டலக் காலங்களில் கடல் சிவப்பு நிறமாகக் கூட மாற வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications