உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா! கடும் பதிலடி கொடுக்கும் நேட்டோ? அடுத்தகட்ட திட்டம் என்ன? பரபர தகவல்
லண்டன்: உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்துள்ள நிலையில், நேட்டோ அமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைன் எல்லையில் பல வாரங்களாகப் பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், இப்போது ரஷ்யா முழு வீச்சில் போரைத் தொடங்கியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளும் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்கனவே பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. வரும் நாட்களில் கூடுதல் பொருளாதாரத் தடைகளும் ரஷ்யா மீது விதிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

நேட்டோ
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக் கூடாது, கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் நேட்டோ படைகள் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும் என்பதையே ரஷ்யா வலியுறுத்தி இருந்தது. அதற்கு மேற்குலக நாடுகள் ஒப்புக்கொள்ளாத நிலையில், இப்போது போரைத் தொடங்கியுள்ளது ரஷ்யா! பிரச்சினையின் முக்கிய காரணமாக நேட்டோ உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் நேட்டோ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

தக்க பதிலடி
இந்நிலையில், நேட்டோ அமைப்பின் நாடுகள் இன்றைய தினம் உக்ரைன் - ரஷ்யா விவகாரம் தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தினர். மேலும், விரைவில் நேட்டோ உச்சி மாநாட்டை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இது சர்வதேச சட்டத்தின் கடுமையான விதி மீறல். ரஷ்யாவின் இந்த நடவடிக்கை யூரோ-அட்லாண்டிக் பாதுகாப்புக்குக் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ரஷ்யாவுக்குத் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

நேரடியாக உதவ முடியாது
நேட்டோ அமைப்பில் இணைவது தொடர்பாக உக்ரைன் மிகவும் ஆர்வமாக இருந்தது. மேலும், நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைந்தே செயல்பட்டு வந்தது. இருப்பினும், நேட்டோ அமைப்பின் உக்ரைன் இதுவரை அதிகாரப்பூர்வமாக இணையவில்லை. இதனால் உக்ரைனுக்கு நேட்டோ அமைப்பால் ராணுவ உதவிகளைச் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் நேட்டோ உறுப்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்ட ராணுவ உபகரணங்களை வழங்கி வருகிறது.

அடுத்து என்ன
உக்ரைனில் இப்போது இருண்ட காலம் நிலவுவதாகவும் இந்த இக்கட்டான நேரத்தில் உக்ரைன் மக்களுடன் துணை நிற்கிறோம் என்றும் நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், நேட்டோ அமைப்பின் நட்பு நாடுகளைக் காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நேட்டோ அமைப்பு எடுக்கும் என்றும் அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளான எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா மற்றும் போலந்து நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

கடும் நடவடிக்கை
ரஷ்யா கடந்த 2014ஆம் ஆண்டு உக்ரைன் நாட்டின் கிரிமியா தீபகற்பத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதன் பின்னர் தான், வடகிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகள் தனது செயல்பாடுகளை அதிகரித்து வருகிறது. இதுவே ரஷ்யாவை பத்திரப்படுத்த முக்கிய காரணமாக இருந்தது. இப்போது உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சில் போரைத் தொடங்கி உள்ள நிலையில், நேட்டோ கடும் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து என்ன
முதற்கட்டமாக நேட்டோ ரெஸ்பான்ஸ் ஃபோர்ஸை நேட்டோ அமைப்பு செயல்படுத்தலாம். இதில் மொத்தம் 40 ஆயிரம் வீரர்கள் உள்ள நிலையில், அது உக்ரைனுக்கு உதவினால் பெரிய திருப்பம் ஏற்படும். ஜெர்மனி, போலந்து, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் NRF படைகளின் 5,000 வீரர்கள் உள்ள நிலையில், முதற்கட்டமாக அவர்களைக் களமிறக்கலாம். ஏற்கனவே, முன்னெச்சரிக்கையாக சில நேட்டோ நாடுகள் பல்கேரியா, ருமேனியா மற்றும் துருக்கி நாடுகளுக்கு விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளன. அதேபோல அமெரிக்காவும் 8500 வீரர்களைத் தயார் நிலையில் வைத்துள்ளன.












Click it and Unblock the Notifications