அடேங்கப்பா! ராணி எலிசபெத் இறுதிச்சடங்கிற்கு இவ்வளவு கோடி செலவா! பிரிட்டனில் அதிகரிக்கும் விமர்சனம்
லண்டன்: பிரிட்டன் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத்திற்கு அரசு முறையில் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிரிட்டன் நாட்டில் கடந்த 1952 முதல் ராணியாக இருந்து வந்தவர் எலிசபெத். சுமார் 70 ஆண்டுகள் ராணியாக இருந்த அவரது உடல்நிலை சில மாதங்களாகவே மோசமடைந்து வந்தது.
வயது மூப்பு காரணமாக அவர் உடல்நிலை பாதிப்புகளை எதிர்கொண்டு இருந்தார். இதனால் அவரால் கொஞ்ச நேரத்திற்கு மேல் நிற்கவும் நடக்கவும் முடியவில்லை என்று கூறப்பட்டது.

ராணி எலிசபெத்
ராணி எலிசபெத் உடல்நிலை கடந்த வாரம் மோசமடைந்தது. ஸ்காட்லாந்து அரண்மனையில் அவர் ஓய்வெடுத்து வந்த நிலையில், ராணி எலிசபெத் உடல்நிலை மிக மோசமடைந்ததால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அங்கு விரைந்தனர். மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்த போதிலும், சிகிச்சை பலனின்றி இந்திய நேரப்படி வியாழன் இரவு அவர் உயிரிழந்தார். ராணியின் மறைவு பிரிட்டன் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீண்ட வரிசை
அவரது மூத்த மகன் சார்லஸ் மன்னராகப் பதவியேற்றார். ராணி எலிசபெத் மறைவைத் தொடர்ந்து பிரிட்டன் அரசு 10 நாட்கள் அரசு முறை துக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ராணி எலிசபெத் உடல் இப்போது பொதுமக்கள் மரியாதை அளிக்க வைக்கப்பட்டு உள்ளது. மக்கள் கூட்டம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால், இறுதி மரியாதை செலுத்த சுமார் 24 மணி நேரம் வரை பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.

இறுதிச் சடங்கு
பிரிட்டனின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி எலிசபெத் இறுதிச்சடங்கு நாளை மறுநாள் அதாவது செப்டம்பர் 19இல் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறுகிறது. 1965இல் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் சர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்குப் பின்னர், லண்டனில் நடைபெறும் முதல் அரசு இறுதிச் சடங்கு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. ராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து முக்கிய தலைவர்கள் அங்குச் செல்ல உள்ளனர்.

பாதுகாப்பு
இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இறுதிச்சடங்கில் கலந்து கொள்கிறார். உலகில் இருந்து பல முக்கிய தலைவர்கள் வருகை தருவதால் அங்கு உச்சபட்ச போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பாதுகாப்பு, விடுதி என பல்வேறு காரணங்களால் சமீப காலங்களில் அதிகப் பணம் செலவழிக்கப்படும் இறுதிச் சடங்காக ராணி எலிசபெத் இறுதி சடங்கு மாறியுள்ளது. பாதுகாப்பிற்கு மட்டும் சில மில்லியன் டாலர் செலவாகும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

செலவு
அதேபோல ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு நடக்கும் நாளில் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், செப். 19ஆம் தேதி அங்கு வங்கிகள், மருத்துவமனைகள் என அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பிரிட்டன் பொருளாதாரத்திற்கு சுாமர் $9 மில்லியன் (இந்திய மதிப்பில் 71 கோடி ரூபாய்) வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

மற்ற இறுதிச்சடங்கு
2002ஆம் ஆண்டில், ராணி எலிசபெத் தாயார் இறுதிச் சடங்கிற்கு சுமார் £5.4 மில்லியன் யூரோ செலவானது. இது இன்றைய மதிப்பில் கிட்டத்தட்ட $16 மில்லியன் டாலர் ஆகும். அதேபோல 1997இல் இளவரசி டயானாவின் இறுதிச் சடங்கிற்கு £3 மில்லியன் முதல் £5 மில்லியன் யூரோ வரை செலவானது. இது தற்போதைய மதிப்பில் தோராயமாக $10 மில்லியன் முதல் $17 மில்லியன் டாலர் ஆகும். இருப்பினும், இவர்களுக்கு அரசு முறைப்படி இறுதிச் சடங்கு நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விமர்சனம்
ராணி எலிசபெத் இறுதிச் சடங்கிற்கு சுமார் $9 மில்லியன் செலவாகும் எனக் கூறப்படுகிறது. ஒரு இறுதிச்சடங்கிற்கு இவ்வளவு அதிகம் செலவழிக்க வேண்டுமா என்ற விமர்சனமும் அதிகரித்து உள்ளது. பிரிட்டன் இப்போது பொருளாதார மந்தநிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், அங்குள்ள 13 லட்சம் மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு உதவும் திட்டங்களில் நிதியைச் செலவிடாமல் இறுதிச் சடங்கிற்கு இவ்வளவு செலவு செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.












Click it and Unblock the Notifications