தவறினை சரி செய்யவே நான் நியமிக்கப்பட்டுள்ளேன்..பேச்சு அல்ல செயலால் நாட்டை ஒன்றிணைப்பேன் -ரிஷி சுனக்
லண்டன்: இங்கிலாந்து நாட்டின் பிரதமராக நியமனம் செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தனது முதல் உரையில், "தவறுகளை சரி செய்யவே நான் நியமிக்கப்பட்டுள்ளேன் என்றும் நமது நாட்டை வார்த்தைகளால் இன்றி செயலால் ஒன்றிணைப்பேன்" என்றும் பேசியுள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் 57-வது பிரதமராக ரிஷிக் சுனக் பொறுப்பேற்றுள்ளார். இந்திய வம்சவளியை சேர்ந்த முதல் இங்கிலாந்து பிரதமர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.
பெரும் எதிபார்ப்புகளுக்கு மத்தியில் ரிஷி சுனக் பிரதமராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து பிரதமராக முதல் உரை
இங்கிலாந்து நாடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் ரிஷி சுனக் பிரதமராக பொறுப்பேற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சரி கட்ட ரிஷி சுனக் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எழுந்துள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டின் பிரதமராக நியமனம் செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக், தனது முதல் உரையை நிகழ்த்தினார். அப்போது ரிஷி சுனக் கூறியதாவது:-

லிஸ் டிரஸ் தவறு செய்யவில்லை
நமது நாடு தற்போது மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு இன்னமும் நீடிக்கிறது. உக்ரைன் மீது புதின் தொடுத்த போர், எரிசக்தி சந்தையையும் விநியோக சங்கிலியையும் சர்வதேச அளவில் நிலகுலைய வைத்துவிட்டது. எனது முன்னோடிகளுக்கு உரிய மரியாதை அளிக்க விரும்புகிறேன். லிஸ் டிரஸ் தவறு செய்யவில்லை.

பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும்
இந்த நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தவே அவர் நினைத்தார். இது ஒரு உன்னதமான நோக்கம். மாற்றத்தை உருவாக்க ஓய்வு இன்றி அவர் உழைத்ததை பார்த்து நான் வியப்பு அடைந்தேன். ஆனால், சிறு தவறுகள் நடந்து விட்டன. தவறான எண்ணங்களில் இந்த தவறுகள் நடக்கவில்லை. தற்போது நான் கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும்.

செயலால் ஒன்றிணைப்பேன்
இதற்காக பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டுள்ளன. பொருளாதார நிலைத்தன்மை மற்றும் திறனை இந்த அரசின் மைய திட்டமாக வைப்பேன். இதன் அர்த்தம் என்னவென்றால் கடினமான முடிவுகள் வர இருக்கின்றன என்பதே ஆகும். தவறுகளை சரி செய்யவே நான் நியமிக்கப்பட்டுள்ளேன். நமது நாட்டை வார்த்தைகளால் இன்றி செயலால் ஒன்றிணைப்பேன். இதற்காக நாள்தோறும் உழைப்பேன்.

போரீஸ் ஜான்சனுக்கு நன்றிக்கடனுடன் இருப்பேன்
ஒருமைப்பாடு, தொழில்முறை, பொறுப்புணர்வுடன் என அனைத்து மட்டத்திலும் இந்த அரசாங்கம் செயல்படும். பிரதமராக மிகப்பெரும் சாதனைகள் படைத்த போரீஸ் ஜான்சனுக்கு நான் எப்போதும் நன்றிக்கடனுடன் இருப்பேன். வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் நான் செயல்படுவேன். வலுவான சுகாதார சேவை, பாதுகாப்பான வீதிகள், எல்லைகளை கட்டுப்பாட்டில் வைப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நமது ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு, பொருளாதார கட்டமைப்பு, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளை சிறப்பாக செய்வேன்.

நம்மால் சாதிக்க முடியும்
நான் தலைமை வகிக்கும் இந்த அரசு வரும்கால தலைமுறையினரை கடனில் சிக்க வைக்கும் வகையில் இருக்காது. இந்த தருணம் எவ்வளவு கடினமானது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் செயல்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. ஒருங்கிணைந்து அசாத்திய விஷயங்களையும் நம்மால் சாதிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications