5 லட்சம் தொழிலாளர்கள்.. வேலை நிறுத்தத்தால் மூச்சு திணற உள்ள பிரிட்டன்! நெருக்கடியில் ரிஷி சுனக் அரசு
ஆசிரியர்களுக்கு 5% ஊதிய உயர்வு அறிவித்திருந்தாலும், இது தற்போதுள்ள பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் கடந்த 2010ம் ஆண்டைவிட 27% குறைவாகும்
லண்டன்: சமூக பாதுகாப்பான வேலை, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சுமார் 5 லட்சம் பேர் பிரிட்டனில் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமானதாகும்.
பிரிட்டனில் கடந்த சில ஆண்டுகளாக ஓய்வூதியம், சம்பள விகிதம், வேலை நீக்க நடைமுறைகள், வேலை பாதுகாப்பு போன்ற பிரச்னைகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். செவிலியர்கள், ரயில் ஓட்டுநர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரைவுரையாளர்கள் இதர அரசு ஊழியர்கள் அனைவரும் இந்த சிக்கலை எதிர்கொண்டு வருவதால் இவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இந்த போராட்டம் உச்சத்தை அடைந்துள்ளது.
இந்த போராட்டத்தில் சுமார் 48 தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளன. நாடு முழுவதும் பிரமாண்டமான அளவில் 75 பேரணிகள் நடக்க இருக்கிறது. இதானல் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றம் ரயில், பேருந்து போக்குவரத்துகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாக சுமார் 200 நோயாளிகள் வரை ஆம்புலன்ஸ் தாமதத்தால் உயிரிழந்துள்ளனர். மருத்துவத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பப்படாமல் இருந்ததே இதற்கு காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுதான் ரிஷி சுனக்.. விதியை மீறிய மூத்த அமைச்சர்.. ஒரேயடியாக தூக்கிய ரிஷி சுனக்! அதிரடி நடவடிக்கை
பணவீக்கம்
பிரிட்டனில் தற்போது பணவீக்கம் 10.5ஆக அதிகரித்துள்ளது. இதனால் தாங்கள் அதிக அளவு பாதித்துள்ளதாகவும் ஆனால் அரசு தங்களை பாதுகாக்க தவறி விட்டது என்று தொழிற்சங்கத்தினர் கூறுகின்றனர். இந்த போராட்டத்தில் அதிக அளவில் ஆசிரியர்களே பங்கேற்க இருக்கின்றனர். சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் இதில் பங்கேற் இருப்பதால் 23,400 பள்ளிகள் இன்று செயல்படாது. இதனால் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள 85% பள்ளிகள் பாதிக்கப்படும். இதேபோல பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள்/விரைவுரையாளர்கள் சுமார் 70 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
பள்ளி கல்லூரிகள்
இதன் காரணமாக 150 கல்லூரிகள் பாதிக்கப்படும். 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கான வகுப்புகள் முடங்கும். இவர்களோடு பிரிட்டனின் பொது மற்றும் வர்த்தக சேவைகள் சங்கத்தில் உருப்பினர்களாக உள்ள அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் சுமார் 1 லட்சம் பேர் இந்த போராட்டத்தில் இணைகின்றனர். ரயில் ஓட்டுநர்களும் இதில் ஈடுபட்டுள்ளதால் நாடு முழுவதும் இன்று வெறும் 30% ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என்று பிரிட்டனின் ரயில்வே நிறுவனமான ரயில் டெலிவரி குழு தெரிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டங்கள் பொருளாதாரத்தை மேலும் பலவீனப்படுத்தும் என்று ஐஎம்எஃப் கூறியுள்ளது.
பொருளாதாரம்
கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீளாத உலக நாடுகளின் வரிசையில் பிரிட்டனும் இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர். வேலை வாய்ப்பின்மை, குறைந்த அளவிலான உற்பத்தி, பணவீக்கம் போன்றவை ஒரு சுழற்சி போல பொருளாதாரத்தை பாதித்து வருவதாகவும் அவர்கள் விளக்கியுள்ளனர். கடந்த ஆண்டில் பணவீக்கம் 10 சதவிகிதமாக இருந்தாலும், நடப்பாண்டில் இது 8 சதவிகிதமாக குறையும் என்று ஐஎம்எஃப் கணித்துள்ளது. இவ்வளவு நெருக்கடியிலும் பிரிட்டன் அரசு ஆசிரியர்களுக்கு 5% ஊதிய உயர்வை அறிவித்திருக்கிறது. இருப்பினும் இரு தற்போதுள்ள பணவீக்கத்தை சமாளிக்க போதுமானதாக இல்லையென அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ரிஷி சுனக்
அதாவது பணவீக்கத்தில் கணக்கீடு செய்து பார்த்தாலர் கடந்த 2010 ஆண்டை விட தற்போது ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் 27% சதவிகிதம் வரை குறைவாக இருப்பதாக தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன. தொடர் நெருக்கடி காரணமாக பிரிட்டனில் பிரதமர் மாறி வந்த நிலையில், தற்போது இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் பிரதமராக பதவி வகித்து வருகிறார். இவர் பதவியேற்கும்போதே இந்த நெருக்கடி குறித்து சில வார்த்தைகள் கூறியிருந்தார். அதாவது, "இந்த நெருக்கடி 2023ம் ஆண்டு முற்றிலுமாக ஒழிந்துவிடும் என்று தான் கூறவில்லை. ஆனால் முந்தைய ஆண்டை விட இது குறையும்" என்று கூறியுள்ளார்.