பெரும் பதற்றம்! பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தில்.. மூவர்ணக் கொடியை அகற்றிய காலிஸ்தான் ஆதரவாளர்கள்
லண்டனில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தின் அருகே காலிஸ்தான் ஆதரவாளர்கள், பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால் சிங்கிற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். அப்போது அவர்கள் திடீரென அங்கிருந்த மூவர்ணக் கொடியை அகற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பஞ்சாபில் பிரிவினை கோஷம் எழுந்துள்ளது. பஞ்சாபைத் தனியாக நாடாகப் பிரித்து காலிஸ்தான் என்று அறிவிக்க வேண்டும் என்பதை அங்குள்ள சில பிரிவினைவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலரும் ஆயுதம் ஏந்தி தீவிரவாத செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர். காலிஸ்தான் பிரிவினைவாதிகள் பல்வேறு அமைப்புகளை நடத்தி வருகின்றனர். இதில் இப்போது 'வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பும் அதன் தலைவரும் பேசுபொருளாகியுள்ளனர்.

வாரிஸ் பஞ்சாப் டி
'வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பின் தலைவராக அம்ரித் பால் சிங் உள்ள நிலையில், அவரது உதவியாளரைப் பஞ்சாப் போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். அவருக்காகப் பயங்கர ஆயுதங்களுடன் அம்ரித் பால் சிங் போலீஸ் நிலையத்தைத் தனது ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார். இதனால் அப்போது நிலைமையை சமாளிக்க அம்ரித் பால் சிங் உதவியாளர் விடுவிக்கப்பட்டார். இருப்பினும், அப்போது முதலே அம்ரித் பால் சிங்கை போலீசார் தொடர்ந்து கண்காணிக்கத் தொடங்கினர். அதன்படி நேற்று முன்தினம் அவரை கைது செய்ய போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

78 பேர் கைது
இப்போது வரை வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பைச் சேர்ந்த 78 பேரை போலீசார் கைது செய்தனர். பலர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இப்போது வரை முக்கிய தலைவரான அம்ரித் பால் சிங்கை கைது செய்ய முடியவில்லை அவர் தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. அமிர்த் பால் சிங்கின் பாதுகாவலர்கள் உள்ளிட்ட நெருங்கிய உதவியாளர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவரை கைது செய்யும் நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் பஞ்சாபில் இணையச் சேவையும் முடக்கப்பட்டுள்ளது.

காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம்
இந்தியாவில் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், வெளிநாடுகளில் காலிஸ்தான் அமைப்புகளுக்குத் தடை இல்லை. இதனால் வெளிநாட்டில் இருக்கும் சிலரும் இதற்கு நிதியுதவி அளித்து வருகிறார்கள். இதற்கிடையே பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தின் அருகே காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் காலிஸ்தான் ஆதரவு கோடியை வைத்துக் கொண்டு காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால் சிங்கிற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.

மூவர்ணக் கொடி
அப்போது அங்கே பறந்த மூவர்ணக் கொடியை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அகற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அவர்கள் 'காலிஸ்தான் ஜிந்தாபாத்' உள்ளிட்ட கோஷங்களை எழுப்புவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்தியத் தேசியக் கொடியை அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போராட்டத்தைக் கலைக்க போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.

வெளியுறவுத் துறை அமைச்சகம்
இதையடுத்து வெளியுறவுத் துறை அமைச்சகம் இது குறித்து நிலைமையைக் கேட்டறிய இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் தூதருக்குச் சம்மன் அளித்தது. பிரிட்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மூவர்ணக் கொடி அகற்றப்பட்டதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவிற்கான இங்கிலாந்து தூதர் அலெக்ஸ் எல்லிஸ், இது குறித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். மேலும், பல்வேறு அரசியல் தலைவர்களும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் இந்தச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications