"இந்தியா மீது அணு குண்டு வீசுவேன்! இந்தியர்களை கண்டாலே.." பிரிட்டன் பிரபல யூடியூபர் சர்ச்சை
லண்டன்: பிரிட்டன் நாட்டை சேர்ந்த யூடியூபர் ஒருவர் இந்தியா குறித்து இனவெறி கருத்துகளைக் கூறியிருக்கிறார். இந்தியர்கள் அருகில் வந்தாலே தன்னால் உணர முடியும் என்றும் வேறு சில இனவெறி கருத்துகளை அவர் கூறினார். மேலும், இந்தியா மீது அணு குண்டை வீசப் போவதாகவும் அவர் கூறியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இப்போதெல்லாம் சினிமா பிரபலங்களுக்கு இணையாக யூடியூபர்களும் புகழ் பெற்று இருக்கிறார்கள். யூடியூபில் போடப்பட்டும் வீடியோக்களுக்கு அந்தளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இதற்கிடையே பிரிட்டன் நாட்டை சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர் இந்தியா உட்பட நாடுகள் மீது அணுகுண்டு வீசப்போவதாகக் கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அந்நாட்டைச் சேர்ந்த மைல்ஸ் ரூட்லெட்ஜ் என்பவர் தான் இந்தச் சர்ச்சை கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
அணு குண்டு: இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் பிரிட்டன் பிரதமரானால்.. பிரிட்டிஷ் நலன்களில் தலையிடும் எந்தவொரு வெளிநாட்டுச் சக்திக்கும் வெளிப்படையாக எச்சரிப்பேன். சம்பந்தப்பட்ட நாடுகள் மீது அணு குண்டுகளை வீசிவிடுவேன். பெரிய விதிமீறல்கள் குறித்து நான் பேசவில்லை. மிகச்சிறிய சிறியளவில் நமது நாட்டிற்குத் தொல்லை கொடுத்தாலும் அணு குண்டு வீசிவிடுவேன்" என்று கூறியிருந்தார்.
தான் பிரதமராக இருந்தால் இந்தியா மீது அணு குண்டை வீசிவிடுவேன் என்றும் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். இந்தியாவை அவருக்குப் பிடிக்காதாம்.. அதனால் அணு குண்டை வீசுவாராம். இது தொடர்பாக அவர் மிக மோசமான இனவெறி கருத்துகளையும் கூறியிருக்கிறார்..
இனவெறி: அதாவது அவர் கூறுகையில், "நீங்கள் நம்பினால் நம்புங்கள்.. எனக்கு இந்தியாவைச் சுத்தமாகப் பிடிக்காது. என்னால் இந்தியர் அருகே வந்தாலே உணர முடியும்.. இந்தியர் அவ்வளவுதான்" என்பது போலப் பதிவிட்டுள்ளார். அவரது இந்தக் கருத்துக்கு இந்தியர்கள் பலரும் மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுபோன்ற இனவெறி கருத்துகளைச் சொல்லக் கூடாது என்றும் சாடினர்.
ஆனால், அதற்கு இந்தியர்கள் மிரட்டுகிறார்கள்.. என்றும் தான் தவறாக எதுவும் சொல்லவில்லை என்றும் பலரும் பதிவிட்டனர். அவரது இந்த போஸ்ட்கள் மிகப் பெரிய சர்ச்சையான நிலையில், அதை அவர் டெலிட் செய்துவிட்டார். இருப்பினும், இந்தியா மீது அணு குண்டு போடுவேன் என்றும் இந்தியா குறித்து இனவெறி கருத்துகளையும் சொன்ன இவருக்கு எதிராக நெட்டிசன்கள் பொங்கி எழுந்து வருகிறார்கள்.
யார் இவர்: அதேநேரம் மைல்ஸ் ரூட்லெட்ஜ் சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறை இல்லை.. கடந்த 2021இல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிய போது, தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினர். அப்போது அங்கே நிலைமை மோசமாக இருந்ததால் அங்குச் செல்ல வேண்டாம் எனப் பல உலக நாடுகள் எச்சரித்தனர். பிரிட்டனும் தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.
இருப்பினும், அந்த எச்சரிக்கையைத் தாண்டி மைல்ஸ் ரூட்லெட்ஜ் அங்கே சென்றார். அங்கு என்ன நிலைமை என்பதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். ஆனால், பிரிட்டன் எச்சரித்தது போலவே அவர் அங்குச் சிக்கிக் கொண்டார். இதையடுத்து வேறு வழியின்றி இறுதியில் புர்கா அணிந்து அவரை பெண் வேடத்தில் பிரிட்டிஷ் ராணுவத்தினர் அழைத்து வந்திருந்தனர்.
பிரிட்டன் அரசின் எச்சரிக்கையைக் கூட மதிக்காமல் சென்று ஆபத்தில் மாட்டிக் கொண்ட இந்த யூடியூபர் தான் இந்தியா குறித்து இப்போது சர்ச்சை கருத்துகளைக் கூறியிருக்கிறார். இந்தியாவைச் சேர்ந்த நெட்டிசன்கள் மிகக் கடுமையாக அவருக்குப் பதிலளித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications