ஆட்டம் காட்டிய புயல்.. ஓடுபாதையை விட்டு புல்வெளிக்குள் பாய்ந்த விமானம்.. பிரிட்டனில் அலறிய பயணிகள்
லண்டன்: பிரிட்டனில் புயல் காரணமாக கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், விமானம் ஒன்று தரையிறங்கிய போது ஓடுபாதையில் இருந்து சறுக்கி அருகில் இருந்த புல்வெளியில் பாய்ந்தது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பீதியில் உறைந்தனர்.
பிரிட்டன் மற்றும் ஸ்காட்லாந்து நாட்டின் பல பகுதிகளில் 'பாபேட்' புயல் சூறையாடியுள்ளது. புயலால் பிரிட்டனில் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. புயல் பாதிப்புக்கு இதுவரை மூன்று பேர் பலியாகியுள்ளனர். பல இடங்களில் மின்சார சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கி கிடக்கிறது.

புயலால் பலத்த காற்றுகள் வீசியதால் பல இடங்களிலும் போக்குவரத்து அடியோடு முடங்கியது. இதற்கிடையே பிரிட்டனின் மேற்கு யார்க்ஷைர் நகரில் உள்ள லீட்ஸ் பிராட்ஃபோர்ட் விமான நிலையத்திற்கு கிரீஸ் நாட்டின் கோர்ஃபு தீவில் இருந்து பயணிகள் விமானம் வந்து கொண்டு இருந்தது. புயலினால் பெய்த பலத்த மழையால் விமான நிலையம் ஈரமாக இருந்தது. இது போக காற்றும் பலமாக வீசிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது.
புல்வெளியில் இறங்கிய விமானம்: அப்போது விமானம் தரையிறங்கியதால் விமானம் திடீரென சறுக்கியது. ஓடுபாதையில் இருந்து சறுக்கிய விமானம் அங்குள்ள புல்வெளி தரை நோக்கி சென்றது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பீதியில் உறைந்தனர். புல் வெளி தரையில் விமானம் நிற்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்த விமானத்தில் 100 பயணிகள் வரை இருந்துள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உடனடியாக விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் பயணிகளை பத்திரமாக மீட்டனர். உடனடியாக விமான நிலையம் மூடப்பட்டது. விமான நிலையத்திற்கு தரையிறங்க இருந்த பிற விமானங்கள் வேறு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.
புயல் காரணமாக: இது தொடர்பாக விமான நிலைய செய்தி தொடர்பாளர் கூறுகையில், விமானம் சறுக்கி ஓடுபாதையில் இருந்து விலகியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். தற்போது விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. விமான நிறுவனத்துடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறோம். முடிந்த வரை இயல்பு நிலைக்கு சேவையை கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.
புயல் காரணமாக கனமழை வெளுத்து வாங்கியதால் பிரிட்டன் முழுவதும் 353 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறிப்பாக வடகிழக்கு பகுதிகள், யார்க்ஷைர், வடமேற்கு, மிட்லாண்ட்ஸ் ஆகிய பகுதிகளில் அதிக இடங்கள் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications