பிரிட்டன் ராணி எலிசபெத்தின்.. மலைக்க வைக்கும் 2.2 லட்சம் கோடி சொத்து என்னவாகும்? யாருக்கு செல்லும்
லண்டன்: பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமான நிலையில். அவரது பல கோடி மதிப்பிலான சொத்து என்னவாகும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
பிரிட்டன் வரலாற்றில் மிக அதிக காலம் ஆட்சி செய்தவர் என்ற சிறப்பை பெற்றவர் மகாராணி இரண்டாம் எலிசபெத். இவர் சுமார் 75 ஆண்டுகள் பிரிட்டன் மகாராணியாக இருந்தவர்.
கடந்த சில மாதங்களாகவே உடல்நிலைப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த மகாராணி இரண்டாம் எலிசபெத், இந்திய நேரப்படி நேற்று இரவு காலமானார்.

ராணி எலிசபெத்
ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனையில் அவர் காலமான நிலையில், அவரது உடலை பக்கிங்காம் அரண்மனைக்கு எடுத்து வரும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் அவரிடம் இருக்கும் 500 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 4 ஆயிரம் கோடி) சொத்துகள் என்னவாகும், அவை யாருக்குச் செல்லும் என்பது பலரது கேள்வி. எலிசபெத் ராணி மறைவுக்குப் பின்னர், சார்லஸ் அரசராகப் பதவியேற்றுள்ள நிலையில், அவருக்கே சொத்துகள் செல்லும் என நீங்கள் நினைக்கலாம்.

அரசு குடும்ப சொத்து
ஆனால், உண்மையில் அனைத்து சொத்துகளும் நேரடியாக அவருக்குச் செல்லாது. ஏனென்றால் எலிசபெத் ராணிக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் பெரும்பாலான சொத்துகள் Royal Firm என்று அழைக்கப்படும் அரசு குடும்பத்தின் சொத்தாகும். அரசு குடும்பத்தில் இருக்கும் அனைவரது சொத்துகளும் இதில் தான் வரும். இந்த Royal Firmஇன் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 28 பில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் ரூ. 2.2 லட்சம் கோடி) இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதில் பல்வேறு சொத்துகள் மற்றும் முதலீடுகள் அடக்கம். அரசு குடும்பத்திற்கு ராணி தான் தலைமை என்றாலும், இவை அவரது தனிப்பட்ட சொத்துகள் இல்லை.

பராமரிப்பு செலவு
சரி, இப்போது விஷயத்திற்கு வரும் ராணி உயிரிழந்துள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்று பார்க்கலாம். பிரிட்டிஷ் அரச குடும்பத்தினரின் செலவுகளுக்கு ஆண்டுதோறும் Sovereign Grant வழங்கப்படும். பிரிட்டிஷ் மன்னராட்சியைத் துறந்து, மக்களாட்சிக்கு மாறிய சமயத்தில், தனக்காகவும் எதிர்காலத்தில் அரச குடும்பத்தினருக்கும் நிலையான வருமானத்தை உறுதி செய்ய கிங் ஜார்ஜ் III அரசுடன் போட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்த தொகை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும்.

26 மில்லியன் பவுண்டு
கடந்த 2021, 2022களில் அரசு குடும்பத்தினருக்கு 26 மில்லியன் பவுண்டு (சுமார் 800 கோடி ரூபாய்) வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அரசு குடும்பத்தினர் அதிகாரப்பூர்வ பயணம், சொத்து பராமரிப்பு, பராமரிப்பு செலவுகளுக்கு இந்த தொகையை அவர்கள் பயன்படுத்தலாம். பக்கிங்ஹாம் அரண்மனையைப் பராமரிப்பு செலவுகளுக்கும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கிரவுன் எஸ்டேட்
பிரிட்டன் மன்னர் குடும்பத்திற்குச் சொந்தமான நிலங்களின் மதிப்பு மட்டும் 19.5 மில்லின் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.5 லட்சம் கோடி) ஆகும். மன்னர் குடும்பத்திற்கு ராணி எலிசபெத் தான் தலைவர் என்றாலும், இது அவரது சொத்து இல்லை. கிரவுன் எஸ்டேட் எனப்படும் இந்த சொத்தை பொது வாரியம் ஒன்றே நிர்வகிக்கிறது. சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு முறைகளில் இதற்கு வருமானம் வரும்.

எவ்வளவு
கடந்த 2021-2022 நிதியாண்டில் $312.7 மில்லியன் நிகர லாபம் கிடைத்துள்ளது. இதில் ஒரு பகுதி தான் Sovereign Grantஆக அளிக்கப்படும். ராணி எலிசபெத் இறந்தாலும் கூட இந்த முறை தொடரும். அதாவது இதன் பின்னரும் மன்னர் குடும்பத்திற்கு Sovereign Grant தொடர்ந்து வழங்கப்படும். இப்போது வரும் வருமானத்தில் 25% அரசு குடும்பத்திற்கு அளிக்கப்படும் நிலையில், 2028 முதல் 15% அளிக்கப்படும்.

தனிப்பட்ட சொத்து யாருக்கு
இது தவிர ராணி எலிசபெத்திற்கு எனத் தனியாகவும் 500 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 4 ஆயிரம் கோடி) சொத்துகள் உள்ளன. இவை பெரும்பாலும், முதலீடுகள், கலை சேகரிப்பு, நகைகள் மற்றும் ரியல் எஸ்டேட் சொத்துக்கள் ஆகும். இப்போது அவள் இறந்துவிட்டதால், இளவரசர் சார்லஸுக்கு இந்த சொத்துகள் செல்லும். ராணி எலிசபெத் தனது தாயாரிடம் இருந்து $70 மில்லியன் (ரூ. 550 கோடி) மட்டுமே பெற்று இருந்தார். இது தான் இப்போது 500 மில்லியன் டாலராக அதிகரித்து இருக்கிறது.

வரி ஒரு ரூபாய் கூட இல்லை
பிரிட்டன் நாட்டில் பெற்றோரிடம் இருந்து பிள்ளைகள் சொத்துகளைப் பெறும்போது, அதற்கு வாரிசு வரியாக 40% விதிக்கப்படுகிறது. இருப்பினும், அரசு குடும்பத்தின் சொத்துகள் கரைந்துவிடாமல் இருக்க அரசு குடும்பத்திற்கு மட்டும் இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஒரு பவுண்ட் கூட வரி செலுத்தாமல், ராணி எலிசபெத்தின் 500 மில்லியன் டாலர் சொத்துகள் அவரது மகன் சார்லஸுக்கு செல்லும். Royal Firmஇன் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 28 பில்லியன் டாலராக இருந்தாலும், ராணி எலிசபெத்தின் தனிப்பட்ட சொத்து மட்டுமே சார்லஸுக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications