பாஜக நாடு முழுக்க மண்ணெண்ணை ஊற்றிவிட்டது.. ஒரு தீப்பொறி போதும்.. லண்டனில் நின்றபடி ராகுல் வார்னிங்
லண்டன்: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பாஜகவைக் கடுமையாகத் தாக்கி பேசிய ராகுல் காந்தி, இந்தியா- சீனா விவகாரம் குறித்தும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த ஐடியாஸ் ஃபார் இந்தியா மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவரும் வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்தக் கூட்டத்தில் இந்தியாவில் இருந்து ராகுல் காந்தி மட்டுமின்றி சீதாராம் யெச்சூரி, சல்மான் குர்ஷித், தேஜஸ்வி யாதவ், மஹுவா மொய்த்ரா, மனோஜ் ஜா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
மன்னிக்க கற்றுக்கொடுத்தவர்...இரக்கமுள்ள கனிவான மனிதர்... தந்தை ராஜிவ் பற்றி ராகுல் உருக்கம்
ராகுல் காந்தி
அங்குப் பேசிய ராகுல் காந்தி, "இந்தியா என்பது அதன் மக்கள் தான் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் அதை புவியியல் ரீதியாக பார்க்கிறார்கள். நாங்கள் பாஜகவுடன் மட்டும் போராடவில்லை; இது இனியும் வெறும் அரசியல் சண்டை மட்டுமில்லை. இந்தியாவில் உள்ள ஊடகங்கள் அனைத்தையும் பாஜக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டது.
போராடுகிறோம்
காங்கிரஸ் இந்தியாவை மீட்கப் போராடுகிறது. இது இப்போது ஒரு கருத்தியல் போர்- ஒரு தேசிய கருத்தியல் போர். பாகிஸ்தானில் நடந்ததைப் போல, இந்தியாவில் மெல்ல நடக்கத் தொடங்குகிறது. வேலைவாய்ப்பின்மை நாட்டில் அதிகரித்து வரும் போதிலும், வெறுப்புவாத அரசியல் மற்றும் ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதால் பாஜக இந்தியாவில் தொடர்ந்து ஆட்சியில் உள்ளது.
இந்தியா
இந்தியா இப்போது நல்ல இடத்தில் இல்லை. பாஜகவின் விஷ பிரசாரம் நாட்டை பாதித்துள்ளது. வகுப்புவாத பிரசாரம் மூலம் நாடு முழுவதும் பாஜக மண்ணெண்ணெய் ஊற்றிவிட்டது. இப்போது ஒரு தீப்பொறி போதும். இந்தியா என்பது வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டது. இங்கு நாங்கள் அனைவரும் அமர்ந்து பேசி ஒருமித்த முடிவை எடுப்போம். இதைத்தான் நாங்கள் நம்புகிறோம். பாஜகவைப் போல நாங்கள் இல்லை. மக்கள் குரல்களை பாஜக அடக்குகிறது. ஆனால், நாங்கள் கேட்கிறோம். மக்கள் சொல்வதைக் கேட்டு அதைச் சட்டமாக்குவதே எங்கள் பணி.
ஜனநாயகம்
இந்தியாவில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. இது குறித்து அமெரிக்கா எங்களிடம் கூறத் தேவையில்லை. நாங்கள் ஏற்கனவே வெறுப்புவாத மற்றும் மக்களைப் பிளவுபடுத்தும் அரசியலுக்கு எதிராகப் போராடித் தான் வருகிறோம். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதைச் செய்கின்றன. இந்தியாவில் ஜனநாயகம் இருப்பது சர்வதேச பொது நலன். நம்மிடம் இருக்கும் ஜனநாயகத்தை நாம் தான் இத்தனை ஆண்டுகளாக நிர்வகித்து வந்தோம். இந்த ஜனநாயகம் சிதைந்ததால், அது உலக அளவில் பிரச்சினையை ஏற்படுத்தும்" என்றார்.
சீனா
அமெரிக்காவும் ரஷ்யாவும் இரண்டு பெரிய சக்திகளாக இருந்தன. ஆனால் இப்போது சீனா எழுச்சி பெற்றுள்ள நிலையில், இந்தியா இரு நாடுகளுக்கு நடுவில் உள்ளது. இப்போது இந்தியா நிலைமையை எப்படிக் கையாள வேண்டும் என்ற கேள்விக்குப் பதிலளித்த ராகுல் காந்தி, "மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். முதலில் நிலத்திலும், அடுத்து நீரிலும் சீனா பிரச்சினை தந்தது.
மாற்று வழி
சீனாவைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் அனைத்தும் சொல்கின்றன. ஆனால், அதற்கு மாற்றான திட்டம் எதையும் அவர்கள் முன்மொழிவதில்லை. இதைத்தான் இந்தியா செய்ய வேண்டும். 1990 முதல் 2012 வரை, நம் நாட்டிற்கான ஒரு வெற்றிகரமான திட்டத்தை நாம் கொண்டிருந்தோம். இந்திய மக்களுக்கு ஒரு புதிய பார்வையை வழங்குவதே எதிர்க்கட்சிகளின் பணி" என்றார்.
காஷ்மீர்
உக்ரைன் போரையும் சீனாவையும் ஒப்பிட்டுப் பேசிய ராகுல் காந்தி, "நேட்டோ மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து இருப்பதால், உங்கள் மீது தாக்குதல் நடத்தப் போகிறோம் என்று ரஷ்யாவின் புதின் கூறுகிறார். இதைக் காஷ்மீர் உடன் இணைத்துப் பார்க்க வேண்டும். உங்கள் (இந்தியாவின்) பிராந்தியத்தை நாங்கள் ஏற்கவில்லை என்று சீனா கூறுகிறது. எல்லையில் ஒரு பிரச்சனை இருக்கிறது.
மறந்துவிடக்கூடாது
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், பிரச்சனை எதிர்கொள்ளவும் அதற்குத் தீர்வு காணவும் தயாராக வேண்டும். இப்போதுள்ள மத்திய அரசு உடன் என்ன பிரச்சினை என்றால், அவர்கள் விவாதங்களை அனுமதிப்பதில்லை. இப்போது சீன படைகள் இந்தியாவில் உள்ளது. இதே தான் உக்ரைன் நாட்டிலும் நடந்தது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது
இந்தியா சிதைந்துவிடும்
இந்திய அரசியலமைப்புச் சட்டம் தான் மனுஸ்மிருதி மீதான மிகப்பெரிய தாக்குதல் ஆகும். காங்கிரஸ், அதன் நடவடிக்கைகளால், நாட்டின் சமூக அமைப்பைத் தாக்கி வருகிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரே மாதிரியான உரிமைகள் மற்றும் அதே வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இதைத் தான் காங்கிரஸ் கட்சி நம்புகிறது. அப்படிச் செய்தால் மட்டுமே இந்தியா பிழைக்கும். இல்லையெனில், இந்தியா சிதைந்துவிடும்" என்று அவர் தெரிவித்தார்.