இளமை திரும்புதே! ட்ரிம் செய்த தாடி.. கோட் ஷூட் - லண்டனில் இருந்து ராகுல் காந்தியின் ஸ்டைலான போட்டோ
ஒற்றுமை யாத்திரையில் தான் வைத்து இருந்த நீளமான தாடி மற்றும் தலைமுடியை வெட்டிய ராகுல் காந்தி, கோட் ஷூட்டுடன் ஸ்டைலாக போட்டோவுக்கு போஸ் கொடுத்து உள்ளார்
லண்டன்: உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சிறப்புரை ஆற்றுவதற்காக பிரிட்டன் சென்று இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ஒற்றுமை யாத்திரையில் தான் வைத்து இருந்த நீளமான தாடி மற்றும் தலைமுடியை வெட்டி, கோட் ஷூட்டுடன் ஸ்டைலாக போட்டோவுக்கு போஸ் கொடுத்து உள்ளார்.
உலகின் புகழ்பெற்ற மற்றும் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று பிரிட்டனில் இருக்கும் கேம்பிரிட்ஜ் பல்கலை. இந்த பல்கலைக்கழகத்தின் மேலாண்மை துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்ற ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில் "21 ஆம் நூற்றாண்டில் கேட்க கற்றுக்கொள்வது" என்ற தலைப்பில் ராகுல் காந்தி மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது இந்தியாவில் தான் மேற்கொண்ட பாரத் ஜோடா யாத்திரை, 2 விதமான கொள்கைகள் மற்றும் உலகளாவிய உரையாடலுக்கான தேவை என 3 விசயங்கள் குறித்து அவர் பேசினார்.

ஸ்டைலான ராகுல் காந்தி
இந்த நிகழ்வில் கோட் ஷூட் அணிந்து கலந்துகொண்ட ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரையின்போது வளர்த்த நீளமான தாடி மற்றும் தலை முடியை வெட்டி மீண்டும் இளமையாக மாறினார். அந்த புகைப்படங்களை காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகிறார்கள்.

புலம்பெயர் இந்தியர்களுடன் சந்திப்பு
பிரிட்டனுக்கு ஒருவார சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் ராகுல் காந்தி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிகழ்வுக்கு பிறகு அந்நாட்டின் தலைநகர் லண்டனில் வரும் மார்ச் 5 ஆம் தேதி புலம்பெயர்ந்த இந்தியர்களை சந்தித்து பேச உள்ளார். அத்துடன் லண்டனில் இருக்கும் இந்திய அயலக காங்கிரஸ் (IOC) உறுப்பினர்களை சந்தித்து பேச உள்ளார்.

தொழிலதிபர்களை சந்திக்க வாய்ப்பு
ஐஓசி என்பது காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு பிரிவாகும். இந்த பிரிட்டன் பயணத்தில் ராகுல் காந்தி பல்வேறு தொழிலதிபர்களையும் சந்தித்து பேச்சு வார்த்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார்.

இந்திய ஒற்றுமை யாத்திரை
அங்கிருந்து காந்தி, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கு நடந்தே யாத்திரை மேற்கொண்டார். 12 மாநிலங்களில் வழியாக 136 நாட்களில் 4,080 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி பல்வேறு தரப்பட்ட மக்களை சந்தித்து பேசினார்.

டிரெண்டான ராகுல் தாடி
கன்னியாகுமரியில் தன்னுடைய யாத்திரை நன்கு டிரிம் செய்த தாடியுடன் தொடங்கிய ராகுல் காந்தி கேரளாவை தாண்டி கர்நாடக எல்லைக்குள் நுழைந்தபோது அதிக தாடியுடன் காணப்பட்டார். அடுத்து மகாராஷ்டிராவை தாண்டியபோதெல்லாம் அவரது முகத்தை மறைக்கும் அளவுக்கு தாடி இருந்தது. ராகுல் காந்தியின் அந்த தாடியே கடைசியில் டிரெண்டாக மாறியது.

2 வது யாத்திரை
ஒற்றுமையை யாத்திரை முடிந்த பிறகும் அதே தாடி மற்றும் தலைமுடியுடன் இருந்த ராகுல் காந்தி, சமீபத்தில் சத்தீஸ்கரில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அருணாச்சல பிரதேசம் முதல் குஜராத்தின் போர்பந்தர் வரை 2 வது யாத்திரையை தொடங்க உள்ளதாக அறிவித்தார். இந்த நிலையில் அவர் பிரிட்டன் பயணம் மேற்கொண்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications