இங்கிலாந்து ராணியை விட அதிக சொத்து.. இன்போசிஸ் நாராயணமூர்த்தி மகளுக்கு.. அதில் இப்ப சிக்கல்!
லண்டன்: இன்போசிஸ் நிறுவனர் நாராயாணமூர்த்தியின் மருமகனும், இங்கிலாந்து நாட்டின் நிதி அமைச்சருமான ரிஷி சுனாக், தனது மனைவியின் பல மில்லியன் சொத்துக்கள் குறித்த விவரங்களை அரசிடம் அறிவிக்கவில்லை என தி கார்டியன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அரசு நெறிமுறைகள் கண்காணிப்புக் குழு விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. ரிஷி சுனாக் மனைவியான அக்ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு சுமார் ரூ .4,200 கோடி என கூறப்படுகிறது. இது இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் தனிப்பட்ட சொத்து மதிப்பான ரூ 3,400 கோடியை விட அதிகம் என கூறப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாக இன்போசிஸ் விளங்குகிறது. இதன் நிறுவனர் நாராயாணமூர்த்தி ஆவார். இவரது மகள் அக்ஷதா மூர்த்தியை, ரிஷி சுனாக் திருமணம் செய்துள்ளார். ரிஷி சுனாக் சில மாதங்களுக்கு முன்னர் பிரிட்டன் நாட்டின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவர் தனது மனைவியும், நாராயாணமூர்த்தியின் மகளுமான அக் ஷதா மூர்த்தியின் பல மில்லியன் கணக்கான சொத்துக்கள் குறித்த விவரங்களை அரசிடம் சமர்ப்பிக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து இங்கிலாந்தின் புகழ் பெற்ற தி கார்டியன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் கூறியிருப்பதாவது:-
இங்கிலாந்து நாட்டின் சட்டத்தின்படி, அனைத்து அமைச்சர்களும் தங்களது சொத்துக்களையும், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களையும் முறையாக அரசிடமும், பகிரங்கமாகவும் வெளியிட வேண்டும்.
ஆனால் ரிஷி சுனாக் மனையிடம் இருக்கும் பல மில்லியன் கணக்கான சொத்து விவரங்களை வெளியிடவில்லை. ரிஷி சுனாக் மந்திரி என்னும் பொறுப்பில் இருக்கிறார். எனவே தனது பொறுப்பினை உணர்ந்து அவர் தன்னிடம் இருக்கும் எந்தவொரு நிதி நலன்களையும், குடும்ப உறுப்பினர்களின் நிதி விவரங்களையும் அறிவிக்க வேண்டும். தற்போதைய ரிஷி சுனாகின் செயல் பொதுமக்களுக்கு அவர் செய்ய வேண்டிய கடமையுடன் முரண்படக்கூடும் என்று தி கார்டியன் கூறியுள்ளது.
அக் ஷதா மூர்த்தியுடன் தொடர்புடைய ஆறு இங்கிலாந்து நிறுவனங்களிலும் பங்குகளையும் ரிஷி சுனாக் அறிவிக்கவில்லை என்றும் கார்டியன் குற்றம் சாட்டி உள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க இங்கிலாந்து அரசாங்க நெறிமுறைகள் கண்காணிப்புக் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனாலும் இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சனின் தனிப்பட்ட ஆலோசகர்கள், ரிஷி சுனாகின் நிதி அறிவிப்பு குறித்து திருப்தி தெரிவித்ததாகவும், மந்திரி நடத்தை விதிகளை பின்பற்றுவதாகவும் கூறியதாகவும் கூறப்படுகிறது.
தற்போது அக் ஷதா மூர்த்தி இன்போசிஸில் 430 மில்லியன் டாலர் (சுமார் ரூ .4,200 கோடி) மதிப்புள்ள பங்குகளை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.இது இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் தனிப்பட்ட சொத்துக்களை விட அதிகம். எலிசபெத் ராணியின் தனிப்பட்ட சொத்து சுமார் 350 மில்லியன் டாலர் (தோராயமாக ரூ .3,400 கோடி) இருக்கும் என கூறப்படுகிறது.