திரும்பிய இடமெல்லாம் விழுந்த அடி.. ரிஷி சுனக் கட்சி படுதோல்வி.. பிரதமர் பதவி பறிபோகும் ஆபத்து
லண்டன்: பிரிட்டனில் சமீபத்தில் நடந்த தேர்தல்களில் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், ரிஷி சுனக் இந்தாண்டு இறுதியில் நடக்கும் அந்நாட்டு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே சொல்கிறார்கள்.
பிரிட்டன் கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. கடந்த 2022இல் அடுத்தடுத்து இரண்டு பிரதமர்கள் ராஜினாமா செய்த நிலையில், இக்கட்டான சூழலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவிக்கு வந்தார்.

அதன் பிறகு பிரிட்டன் பொருளாதாரத்தை மேம்படுத்த ரிஷி சுனக் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். அங்கு நிலைமை சற்று மேம்பட்டு இருக்கிறது என்ற போதிலும் நிலைமை இன்னும் சீராகவில்லை.
கொந்தளிப்பு: இதனால் பிரிட்டன் மக்கள் ஆளும் தரப்பு மீது கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இது அங்கு நடக்கும் ஒவ்வொரு இடைத்தேர்தல்களிலும் தெரிய வருகிறது. இதே நிலை தொடர்ந்து வரும் நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் ரிஷி சுனக் தோல்வி அடைவது உறுதி என்றே கூறப்படுகிறது.
இதற்கிடையே ரிஷி சுனக்கிற்கு மிகப் பெரிய பின்னடைவாக அவரது கன்சர்வேடிவ் கட்சி உள்ளூர் தேர்தலில் மிக மோசமான தோல்வியை எதிர்கொண்டுள்ளது. தற்போதைய சூழலை வைத்துப் பார்த்தால் இந்தாண்டு நடக்கும் பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வென்று ஆட்சியைப் பிடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே சொல்லலாம்.
தொழிலாளர் கட்சி: பிரிட்டன் நாட்டில் சமீபத்தில் கவுன்சிலர்களை தேர்வு செய்ய தேர்தல் நடைபெற்றது. அங்கு கவுன்சிலர் தேர்தலில் எப்போதும் கன்சர்வேடிவ் கட்சியை அதிக இடங்களில் வெல்லும்.. தொழிலாளர் கட்சி அங்கு பெரும்பான்மை இடங்களில் வென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தச் சூழலில் தான் தொழிலாளர் கட்சி அந்தத் தேர்தலிலும் வென்றுள்ளது.
இது மட்டுமின்றி அங்கு எம்பி தொகுதி ஒன்றிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதிலும் கூட தொழிலாளர் கட்சியே வெற்றி பெற்றது. அதாவது இங்கிலாந்தின் வடமேற்கில் உள்ள பிளாக்பூல் சவுத் நாடாளுமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அங்கு கன்சர்வேடிவ் கட்சி கடந்த தேர்தலில் வென்றிருந்த நிலையில், இந்த இடைத்தேர்தலில் மீண்டும் அந்த சீட் தொழிலாளர் கட்சியின் வசம் சென்றுள்ளது.
ஒரே ஆறுதல்: இந்தத் தேர்தலில் தொழிலாளர் கட்சியின் கிறிஸ் வெப் 10,825 வாக்குகளைப் பெற்றார்.. அதேநேரம் கன்சர்வேடிவ் வேட்பாளரால் வெறும் 3,218 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தொழிலாளர் கட்சி இவ்வளவு பெரிய வெற்றியைப் பதிவு செய்வது இதுவே முதல்முறையாகும். இதில் ரிஷி சுனக்கிற்கு ஒரே ஆறுதல் என்றால் அது இங்கிலாந்தின் வடகிழக்கில் உள்ள டீஸ் வேலி பகுதியில் கன்சர்வேடிவ் மேயர் மீண்டும் வென்றது தான்.
அடுத்து என்ன: பிரிட்டன் மக்கள் மட்டுமின்றி கன்சர்வேடிவ் கட்சி நிர்வாகிகள் கூட ரிஷி சுனக் மீது அதிருப்தியில் இருக்கிறார்களாம். இதனால் தேர்தலுக்கு முன்பே ரிஷி சுனக்கை பிரதமர் பதவியில் இருந்து நீக்க கன்சர்வேடிவ் கட்சியினரே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வரலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், டீஸ் வேலி பகுதியில் கன்சர்வேடிவ் வேட்பாளர் வென்றுள்ளது ரிஷி சுனக்கிற்கு வரும் ஆபத்தைச் சற்று தள்ளி வைத்துள்ளது என்று சொல்லலாம்.
பிரிட்டன் நாட்டில் ஆகஸ்ட் அல்லது டிச. மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடக்கலாம் என கூறப்படுகிறது. இப்போது பிரிட்டன் மக்கள் ஆளும் கன்சர்வேடிவ் தரப்பு மீது கடும் எதிர்ப்பில் இருப்பதால் தேர்தல் வந்தால் ரிஷி சுனக் வெல்வது மிக மிக கடினம் என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications