குறையும் கச்சா எண்ணெய் விலை.. உலக நாடுகள் இந்தியாவுக்கு நன்றி சொல்லணும்.. அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
லண்டன்: இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இப்போது பிரிட்டன் சென்றுள்ள நிலையில், சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைவது தொடர்பாக அவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இப்போது பிரிட்டன் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கே உள்ள இந்தியத் தூதரக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் கூறிய சில கருத்துக்கள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், அப்போது இந்தியாவின் நடவடிக்கை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த உதவியதாக அவர் குறிப்பிட்டார்.
ஜெய்சங்கர்: ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் திட்டமிட்ட கொள்முதல் மூலம் சர்வதேச எண்ணெய் மற்றும் கேஸ் சந்தைகளில் விலையைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகித்ததாக வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்தார். இந்தியாவின் இந்த கொள்முதல் கொள்கைகள் சர்வதேச பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவியதாக அவர் குறிப்பிட்டார். இப்படி சர்வதேசச் சந்தையில் இந்தியாவின் பங்கு முக்கியமான ஒன்றாக மாறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நன்றி சொல்லணும்: இது குறித்து ஜெய்சங்கர் மேலும் கூறுகையில், "எங்கள் கொள்முதல் கொள்கைகள் மூலம் சர்வதேச எண்ணெய் சந்தையில் விலையேற்றத்தைத் தடுத்துள்ளோம். இதன் மூலம் சர்வதேச பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவியுள்ளோம். இதற்காக நீங்கள் தான் எங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அதற்குக் காத்திருக்கிறேன். எண்ணெய் கொள்முதலில் இந்தியாவின் அணுகுமுறை கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தடுத்தது..
நாங்கள் வேறு விதமாக நிலைமையைக் கையாண்டிருந்தால்.. ஐரோப்பா எங்குக் கச்சா எண்ணெய்யை வாங்குகிறதோ அதே சப்ளையர்களிடம் நாங்களும் சென்றிருப்போம். அது விலையேற்றத்திற்கு வழிவகுத்திருக்கும். இப்போது உலகளாவிய சந்தையில் இந்தியாவுக்கு முக்கிய இடம் இருக்கிறது. கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி சந்தையில் ஆசியாவுக்கு வரும் பல பொருட்கள் ஐரோப்பாவிற்குச் செல்ல தொடங்கியுள்ளன.
அதிக விலை கொடுக்க ரெடி: இந்தியா ஒரு மிகப் பெரிய நாடாக இருப்பதால் சந்தையில் எங்களால் ஓரளவுக்குத் தேவையான சரக்குகளை வாங்க முடிகிறது. எங்களை விட சிறியதாக இருக்கும் ஆசிய நாடுகளால் இதைக் கூடச் செய்ய முடிவதில்லை. கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் நாடுகள் இவர்களுக்குக் கச்சா எண்ணெய் கொடுக்கவே தயாராக இருப்பதில்லை. ஏனென்றால் ஐரோப்பிய நாடுகள் அதைக் காட்டிலும் அதிக தொகையைக் கொடுக்க ரெடியாக உள்ளனர்" என்றார்.
தொடர்ந்து சர்வதேச அரசியல் குறித்துப் பேசிய ஜெய்சங்கர், "ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியா அதன் கொள்கைகள் மற்றும் நலன்களுக்கு இடையே உள்ள சமநிலையைக் கொண்டுள்ளது. இந்த குறிப்பிட்ட விஷயத்தில், ரஷ்யா உடன் எங்களுக்கு நல்லுறவு இருக்கிறது. அதைப் பேணுவது முக்கியம். புவிசார் அரசியலில் மேற்குலக நாடுகளுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையே ஒரு இடத்தில் இந்தியா இருப்பதாகத் தெரிகிறது. இந்த நிலையில், இருந்து என்ன செய்ய வேண்டுமோ அதை இந்தியா சரியாகவே செய்து வருகிறது" என்றார்.
இந்தியாவின் சாதனைகள்: கடந்த சில ஆண்டுகளாக இந்தியா பல முக்கிய சாதனைகளைச் செய்துள்ளதாகத் தெரிவித்த அவர், "கொரோனாவால் ஏற்பட்ட சிக்கல், பொருளாதார மாற்றங்கள், வங்கிகள் விகாரம், ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான முயற்சி, முதலீட்டாளர்கள் இடையே நம்பிக்கை, டிஜிட்டல் தொழில்நுட்பம் எனக் கடந்த காலங்களில் நாங்கள் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications