லண்டனில் வெளிநாட்டினர் குடியேற்றத்திற்கு எதிராக போராட்டம்.. இந்தியர்கள் பற்றி டாமி ராபின்சன் நிலைப்பாடு என்ன?
லண்டன்: இங்கிலாந்தில் வெளிநாட்டினர் குடியேற்றத்தை தடுக்க வேண்டும் என்று கூறி, அந்நாட்டின் தலைநகர் லண்டனில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். லண்டன் வரலாற்றில் வலதுசாரி ஆதரவாளர்கள் இவ்வளவு பேர் திரண்டு பேரணி சென்றது இதுதான் முதல் முறையாகும்.
வெளிநாட்டு குடியேற்றத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்திற்கு டாமி ராபின்சன் என்பவர் தலைமை தாங்கினார். இந்தியர்கள் பற்றி கடந்த காலங்களில் இவர் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்.

லண்டன் நகரே குலுங்கியது
இங்கிலாந்தில் வெளிநாட்டினர் குடியேற்றத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இப்போராட்டத்தை வலதுசாரி ஆதரவாளர்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தலைநகர் லண்டனில் வெளிநாட்டினர் குடியேற்றத்துக்கு எதிராக பிரமாண்ட பேரணி-போராட்டம் நடைபெற்றது. தீவிர வலதுசாரி ஆதரவாளரான டாமி ராபின்சன் தலைமையில் நடந்த பேரணியில் சுமார் 1.10 லட்சம் பேர் திரண்டனர். இதனால் லண்டன் நகரம் குலுங்கியது.
போட்டி போட்டுக் கோஷமிட்டனர்
போராட்டக்காரர்கள் தேசியக் கொடி மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் கொடிகளை கைகளில் வைத்திருந்தனர். மேலும், பலர் அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் அணியும் தொப்பி அணிந்திருந்தனர். "வெளிநாட்டினரை அவர்களின் நாட்டுக்கு அனுப்புங்கள்" என்ற பதாகைகளை கையில் வைத்திருந்தனர். பிரதமர் கெயர் ஸ்டார்மரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதற்கிடையே, டாமி ராபின்சனின் பேரணிக்கு எதிராக டைனி அபோட், சாரா சுல்தானா ஆகிய எம்.பிக்களால் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இரு தரப்பினரும் ஒரே இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது போட்டி போட்டுக் கோஷமிட்டனர்.
இந்தியர்கள் குறித்து மென்மையான கருத்து
இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அப்போது டாமி ராபின்சனின் ஆதரவாளர்களில் ஒரு பகுதி திடீரென்று எதிர்தரப்பினரின் போராட்டத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தபோது மோதல் ஏற்பட்டது. போலீசாரை போராட்டக்காரர்கள் கடுமையாக தாக்கினர். இதில் 26 போலீசார் காயம் அடைந்தனர். இருந்தபோதிலும் போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும், 25 பேரை கைது செய்தனர். இங்கிலாந்து வரலாற்றில் வலதுசாரி ஆதரவாளர்கள் நடத்திய பெரிய போராட்டமாக இது அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டனில் நடைபெற்ற இந்த போராட்டத்தை முன்னின்று நடத்திய ராபின்சன், இஸ்லாமியர்களுக்கு எதிரான கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதே வேளையில், இந்தியர்கள் குறித்து மென்மையான அணுகுமுறையையே கடைபிடித்து வருகிறார்.
இந்தியர்கள் அமைதியானவர்கள்
குறிப்பாக, இந்தியர்கள் அமைதியானவர்கள், அமைதியை விரும்பும் புலம்பெயர் சமூகம் என்றும், பிரதமர் மோடியை பாராட்டியும் அவர் பேசியிருக்கிறார். கடந்த 2022ஆம் ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில், இனப் பதற்றங்களின் போது பிரிட்டன் இந்துக்களுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியதோடு மட்டுமின்றி, ஆதரவாக பேரணி நடத்தவும் முன்வந்தார். இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டுடனும், இந்துக்களுக்கு ஆதரவான கருத்துக்களை கொண்டவராகவும் அவரது பேட்டிகள் காட்டுகின்றன.












Click it and Unblock the Notifications