விஜய் மல்லையாவுக்கு டைம் ஓவர்.. ரூ.200 கோடி பங்களாவை விட்டு வெளியேற லண்டன் கோர்ட் உத்தரவு..!
சொகுசு பங்களாவை விட்டு வெளியேற மல்லையாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
லண்டன்: தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ரூபாய் 200 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களாவை கைப்பற்ற, லண்டன் கோர்ட் உத்தரவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
9,000 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கி மோசடி செய்தது தொடர்பாக, லண்டனுக்கு தப்பி சென்ற விஜய் மல்லையாவை கடந்த 2017ம் ஆண்டு, கர்நாடக ஹைகோர்ட் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்திருந்தது.
இதற்கிடையே நீதிமன்ற உத்தரவை மீறி, சுமார் 300 கோடி ரூபாய் அளவுக்கு தன்னுடைய வாரிசுகளுக்கு விஜய் மல்லையா சொத்துகளை மாற்றியதை தொடர்ந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது.

அமலாக்கத்துறை
ஆனால், ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல், லண்டனுக்கு சென்ற அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதையடுத்து அவரை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது..

இங்கிலாந்து அரசு
ஒருகட்டத்தில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று விஜய் மல்லையாவை இங்கிலாந்து அரசு கைது செய்தது. ஆனாலும் மல்லையா அவர் ஜாமீனில் வெளிவந்தார்.. அவரை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இங்கிலாந்து அரசும், விஜய் மல்லையாவை நாடு கடத்தும் நடவடிக்கைகளை எடுத்து வரவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து சுப்ரீம்கோர்ட்டின் உதவியை மல்லையா நாடினார். இது தொடர்பாக வழக்கு விசாரணையும் நடந்து வருகிறது.

பங்களா
இதனிடையே வேறு ஒரு வழக்கில் அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.. லண்டனில் விஜய் மல்லையாவுக்கு 20 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள, அதாவது நம் இந்திய மதிப்பில் 200 கோடி மதிப்புள்ள பங்களா ஒன்று இருக்கிறது.. ரிஜென்ட் பார்க் நகரில் இந்த வீடு பங்களா இருக்கிறது.. இந்த பங்களாவை சுவிட்சர்லாந்து பேங்க்கில் அடமானம் வைத்து 2012-ல் மல்லையா கடன் வாங்கியிருந்தார்.. ஆனால் அந்த கடனையும் அவர் கட்டவில்லை.. எனவே, கடனை 2017ம் ஆண்டுக்குள் கட்ட வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டது..

வழக்கு
5 ஆண்டுக்குள் கடனை திருப்பி செலுத்த வேண்டிய நிலையில், தொடர்ந்து மல்லையா பணம் கட்டாமலேயே இருக்கவும், இது குறித்து வழக்கு தொடரப்பட்டது.. சொகுசு பங்களாவை விட்டு விஜய் மல்லையா, வெளியேறுமாறு கடந்தாண்டு அக்டோபரில் நீதிமன்றத்தில் ரிட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது... இந்த மனுவை விசாரித்த கோர்ட், லண்டன் சொகுசு பங்களாவை விட்டு மல்லையா, குடும்பத்தோடு வெளியேற வேண்டும் என்றும், அதை சுவிஸ் வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

பரபரப்பு
அவருடைய பங்களாவை கைப்பற்ற இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடியான இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளதுடன், பங்களாவை கைப்பற்றுவதற்கான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ரூபாய் 7,000 கோடி வங்கி மோசடி செய்த விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான வழக்கின் விசாரணை லண்டன் கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், இப்போது லண்டனில் உள்ள அவரது பங்களாவை கைப்பற்ற லண்டன் கோர்ட் உத்தரவிட்டு இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications