பிரிட்டன் வகை கொரோனா.. இரட்டிப்பாக அதிகரிக்கும் உயிரிழப்புகள்... அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்
லண்டன்: கடந்தாண்டு பிரிட்டன் நாட்டில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா இரண்டு மடங்கு அதிக உயிரிழப்பை ஏற்படுத்துவது புதிய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென்று கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. இதுகுறித்து ஆய்வாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில் புதிய உருமாறிய கொரோனாவை கண்டுபிடித்தனர்.
இந்த உருமாறிய கொரோனா மிக விரைவில் பிரிட்டன் நாடு முழுவதும் பரவியது. இதன் காரணமாக டிசம்பர் மாதம் பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
பிரிட்டன் உருமாறிய கொரோனா
இந்த உருமாறிய கொரோனா வைரஸ் மற்ற வகைகளை விட 40 முதல் 70% வரை வேகமாகப் பரவும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இருப்பினும் இது அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்றே முதலில் தெரிவிக்கப்பட்டது. புதிய பிரிட்டன் வகை கொரோனா குறித்து ஆய்வுகளைப் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டனர்.
உயிரிழப்பு அதிகரிப்பு
இந்நிலையில், இந்த பிரிட்டன் வகை கொரோனா பற்றிய புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. முன்பு பிரிட்டன் வகை கொரோனா அதிக உயிரிழப்பை ஏற்படுத்தாது என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கு நேர்மாறாக முடிவுகள் வெளியாகியுள்ளது. அதாவது பிரிட்டன் கொரோன வைரஸ் மற்ற வகைகளை விட 30 முதல் 100% வரை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் கொரோனா பரவல்
பிரிட்டன் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,766 பேரும் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் பிரிட்டன் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அங்கு இதுவரை 42.28 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல நேற்று ஒரே நாளில் மட்டும் 231 பிரிட்டன் நாட்டில் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகள் அச்சம்
பிரிட்டன் வகை உருமாறிய கொரோனா முதலில் ஐரோப்பிய நாடு முழுவதும் வேகமாகப் பரவியது. அதன் பின்னர் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கண்டறியப்பட்டது. இதுவரை 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த உருமாறிய கொரோனா பரவி உள்ளது. தற்போது வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகள் உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.