‛‛பிரதமராகும் கீர் ஸ்டார்மர்’’.. ஜெயிச்சதுமே சொன்ன முதல் வார்த்தை.. பிரிட்டனில் ஆட்சி மாற்றம்
லண்டன்: பிரிட்டன் தேர்தலில் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியடைந்துள்ளது. ரிஷி சுனக்கின் கட்சியை வீழ்த்தி கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி தனி மெஜாரிட்டி பெற்றுள்ளது. இதனால் பிரிட்டனில் ஆட்சி மாற்றம் நிகழ்வதோடு, புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ள கீர் ஸ்டார்மரின் முதல் பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் உள்ளார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இதையடுத்து நேற்று பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 650 தொகுதிகளிலும் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இதையடுத்து தேர்தல் முடிந்த கையோடு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

பிரிட்டனில் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 326 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இத்தகைய சூழலில் தான் பிரிட்டனில் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியை வீழ்த்தி கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
காலை 10 மணி நிலவரப்படி தொழிலாளர் கட்சி தனி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதாவது கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி 359 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மாறாக பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 79 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும் லிபரல் டெமாக்ட்ரட்ஸ் கட்சி 48 இடங்களிலும், எஸ்எஸ் 6 இடங்களிலும் மற்றவர்கள் 23 தொகுதிகளிலும் முன்னிலை வகித்துள்ளன.
இதன்மூலம் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியை இழக்கிறது. தொழிலாளர் கட்சி வென்ற நிலையில் அதன் தலைவர் கீர் ஸ்டார்மர் பிரதமராகிறார். மேலும் தேர்தல் தோல்வியை தொடர்ந்து ரிஷி சுனக் தனது பிரதமர் பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளார். இந்நிலையில் தான் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரும், எதிர்கால பிரதமருமான கீர் ஸ்டார்மர் தேர்தல் முடிவு பற்றி முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
14 ஆண்டுகளுக்கு பிறகு கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் இருந்து நாடு மீண்டுள்ளது. மீண்டும் பிரிட்டன் நல்ல எதிர்காலத்தை பெற்றுள்ளது. நாட்டை புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொள்வேன். உண்மையிலேயே இந்த தருணத்தில் அனைவருக்கும் நன்றி. ஏனென்றால் நம் நாட்டை மாற்றிவிட்டீர்கள்.
இந்த பெரிய வெற்றியால் பெரிய பொறுப்பு வருகிறது. இதனால் நாம் இன்று முதல் புதிய அத்தியாத்தை தொடங்குவோம். மாற்றத்துக்கான வேலையை தொடங்குவோம். நாட்டை புதுப்பித்து மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பணியை தொடங்குவோம். அதேவேளையில் பொது சேவையை மையப்படுத்தும் அரசியலை நாம் முன்னெடுத்து, அரசு என்பது மக்களுக்கு நன்மை செய்யும் அரசாக இருக்க வேண்டும் என்பதை காட்ட வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications