லண்டனில் தொடங்கிய இந்தியா - இங்கிலாந்து 2022 வாரக் கொண்டாட்டம்.. பல்வேறு வல்லுனர்கள் பங்கேற்பு!
லண்டன்: இந்திய குளோபல் ஃபோரம் உச்சி மாநாட்டில் கிரியேட்டிவ் இண்டஸ்ட்ரி & கலாசாரப் பொருளாதாரக் கருத்தரங்கு கூட்டம் மூத்த அமைச்சர்கள், கொள்கை வகுப்பாளர்களுடன் தொடங்கியுள்ளது.
இந்திய குளோபல் ஃபோரம் சார்பாக இந்தியா - இங்கிலாந்து நாடுகளின் இடையிலான உறவின் எண்ணற்ற அம்சங்களின் கொண்டாட்டமாக ஆண்டுதோறும் இங்கிலாந்து - இந்தியா வாரம் ஏற்பாடு செய்யப்படுகிறது. 2022ஆம் ஆண்டு ஜூன் 27 முதல் ஜூலை 1 வரை நடைபெறும் இந்தக் கொண்டாட்டத்தில், வர்த்தகம் மற்றும் பொருளாதார பரிமாற்றங்கள், காலநிலை நடவடிக்கை, சுகாதாரம், தொழில்நுட்பம் என பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று தொடங்கிய முதல் நாள் கருத்தரங்க நிகழ்ச்சி இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை நினைவுகூறும் வகையிலும், இந்தியா - இங்கிலாந்து இடையிலான 75 ஆண்டுகள் உறவை நினைவுகூறும் வகையில் தொடங்கப்பட்டது.
இந்த கருத்தரங்கின் தொடக்கத்தில் பேசிய இந்தியா குளோபல் ஃபோரம் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மனோஜ் லத்வா, இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திரத்தை கொண்டாடும் அதே வேளையில், இத்தனை ஆண்டு கால உறவைக் கொண்டாடுவதற்கு இது ஒரு சிறந்த தருணம். இந்த உறவின் மையமாக இருப்பது, ஆழமான மற்றும் மாறுபட்ட கலாச்சாரம் தான். பண்பாட்டுத் துறையில் ஏராளமான வாய்ப்புகளை மையமாகக் கொண்ட ஒரு கருத்தரங்குடன் 2022-ம் ஆண்டு இங்கிலாந்து-இந்தியா வாரம் தொடங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து லண்டனில் உள்ள நேரு மையத்தில் நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கில், இரு நாடுகளுக்கு இடையிலான தொழில்களுக்கு ஒத்துழைப்பு, கலாச்சாரத் துறையில் நிலையான வளர்ச்சி, கலாச்சாரத்துறையில் பொது மற்றும் தனியார் இடையே கூட்டணியை உருவாக்குதல் உள்ளிட்ட தலைப்புகளில் நிபுணர்களை பேசினர்.
இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சிலின் தலைவர் வினய் சஹஸ்ரபுத்தே உடனான உரையாடலின் போது, இந்திய அரசின் பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால், நமது வரலாறு இரு தரப்பினருக்கும் பகிரப்பட்டிருக்கலாம். ஆனால் அனுபவமும், நினைவாற்றலும் பகிர்ந்து கொள்ளப்படாமல் போக வாய்ப்புகள் உள்ளது. இந்தியாவின் கண்ணோட்டத்தில் உரையாடல் மூலம் அனுபவத்தை அடைய விரும்புகிறோம். 21 ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எல்லாவற்றையும் பார்ப்பது முக்கியம் என்று தெரிவித்தார்.
அதேபோல் செரண்டிபிட்டி ஆர்ட்ஸ் அறக்கட்டளையின் தலைவரும் நிறுவனருமான சுனில் காந்த் முன்ஜால் கூறுகையில், நம்மிடம் இருக்கும் ஒரே சொத்து மக்கள் மட்டுமே. சமூகத்தில் கலாச்சாரத்திற்கு என்று அற்புதமான திறன் மற்றும் பிரத்யேக குணம் உள்ளது. எனவே அதனை தொடர்ந்து மாற்றியமைப்பது முக்கியம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து சர்வதேச அளவில் வளமான பாரம்பரியத்தை இந்தியா கொண்டுள்ளது. நமது கலைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் காலத்தின் முக்கிய சோதனையாக நிற்கும். எல்லா நிறுவனங்களுக்கான செய்தியும் ஒன்றுதான். அதும் மக்களுக்கு எல்லா நேரத்திலும் நியாயமாக இருக்க முயற்சி செய்யுங்கள் என்பது தான் என்று தெரிவித்தார்.
நேரு மையத்தின் இயக்குநர் அமிஷ் திரிபாதி கூறுகையில், இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்கனவே வலுவான கலாச்சார பிணைப்புகள் உள்ளன. இரு நாடுகளிலும் உள்ள திரைப்படங்கள், புத்தகங்கள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு தொழில்கள் உருவாகியுள்ளன. இங்கிலாந்தில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் , நமது இரு நாடுகளுக்கும் இடையே வாழும் பாலம் என்று கூறினார்.
தொடர்ந்து, இந்தியா மாபெரும் சந்தையைக் கொண்டுள்ளது. மேலும் அதன் கலாச்சார தயாரிப்புகளில் ஆழமான பன்முகத்தன்மை மற்றும் ஒப்பிடமுடியாத மரபுகள் இன்னும் உயிருடன் இருக்கும் நாகரி சமூகமாக உள்ளது. இந்தியாவும் இங்கிலாந்தும் இணைந்து, பல தசாப்தங்களுக்கு முழு உலகையும் ஆழமாகவும் நேர்மறையாகவும் பாதிக்கக்கூடிய ஒரு கலாச்சார முன்னுதாரணத்தை உருவாக்க முடியும் என்று கூறினார்.
இதேபோல் பிரிட்டிஷ் கவுன்சிலின் திருவிழாக்கள் இயக்குநர் ரெபேக்கா சிமோர் கூறுகையில், இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில் ஒத்துழைப்பை பிரிட்டிஷ் கவுன்சில் ஆதரிக்க விரும்புகிறது என்று தெரிவித்தார்.