கிட்டதட்ட "திவால்" ஆகும் நிலையில் பிரிட்டன்.. காரணமே ரிஷி சுனக் தான்.. வெளியான பகீர் ரிப்போர்ட்
லண்டன்: பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் கிட்டதட்ட திவால் ஆகும் நிலையில் இருப்பதாகவும் அங்குப் புதிதாக ஆட்சியை அமைத்துள்ள தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது. மேலும், பொருளாதாரம் இந்தளவுக்கு மிக மோசமான நிலைக்குச் செல்ல முந்தைய ரிஷி சுனக் அரசே காரணம் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர். நிதி நிலையைச் சமாளிக்க புதிய அரசு வரிகளை உயர்த்தும் எனக் கூறப்படும் நிலையில், இந்த அறிவிப்பு ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
பிரிட்டன் நாட்டில் இம்மாத தொடக்கத்தில் பொதுத் தேர்தல் நடந்தது. அங்கு ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் இருந்த நிலையில், இந்தத் தேர்தலில் அவர்கள் படுதோல்வியை எதிர்கொண்டனர்.

திவால் ஆகும் நிலை: சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்த நிலையில், அக்கட்சித் தலைவர் கீர் ஸ்டார்மர் பிரதமராகப் பதவியேற்றார். ஆட்சி அமைத்து மூன்று வாரங்களே ஆகும் நிலையில், இப்போது அவரது அரசுத் துறை வாரியாக பகுப்பாய்வு செய்து ஒவ்வொரு துறையிலும் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை விளக்கி ரிப்போர்ட்டை வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இப்போது பிரிட்டன் பொருளாதாரம் கிட்டதட்ட திவால் ஆகும் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டின் அமைச்சர் பாட் மெக்ஃபேடன் கூறுகையில், "முந்தைய அரசு எந்த நிதி நிலையை எங்கே விட்டுச் சென்று இருக்கிறது என்ற உண்மையை நாங்கள் பொதுமக்களிடம் நேர்மையாகப் பகிர்கிறோம். இதற்காக நாங்கள் வெட்கப்பட மாட்டோம். இத்தனை காலம் பிரிட்டன் மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வந்துள்ளனர். இப்போது பிரிட்டனைச் சரி செய்வதற்கான நேரம்" என்று தெரிவித்துள்ளார்.
பொருளாதார நிலை: பிரிட்டன் மிக மோசமான பொருளாதார சிக்கலில் இருப்பது அங்குள்ள வல்லுநர்கள் அனைவருக்குமே தெரியும். ஆனால், அது இந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று தான். அதேநேரம் பிரச்சாரத்தின் போது தொழிலாளர் கட்சி, உழைக்கும் மக்கள் மீது வரிகளை உயர்த்த மாட்டோம் என்று உறுதியளித்து இருந்தது. எனவே, இப்போது அவர்கள் யாருடைய வரியை உயர்த்தப்போகிறார்கள் என்பது பெரிய கேள்வி தான்.
தொழிலாளர் கட்சி வெளியிட்டுள்ள இந்த விரிவான ரிப்போர்ட்டில் முந்தைய கன்சர்வேடிவ் கட்சியைக் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த நிதியாண்டிற்குப் பணம் எங்கிருந்து வரும் என்று தெரியாமல் பல்வேறு திட்டங்களுக்கு கன்சர்வேடிவ் கட்சி நிதிகளைச் செலவிடத் தொடங்கிவிட்டதாகத் தொழிலாளர் கட்சி விமர்சித்துள்ளது. மேலும், சர்வதேச அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், ராணுவத்தை முழுமையாக முந்தைய அரசு கைவிட்டுவிட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
பலன் இல்லை: மேலும், தேசிய சுகாதார மையத்தின் நிலைமையும் மோசமாக இருப்பதாகவும் பல லட்சம் பேர் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் சூழலே நிலவுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. சட்ட விரோதமாகப் பிரிட்டிஷ் கால்வாய் வழியாகப் பிரிட்டனுக்குள் ஆபத்தான வழியில் படகுகளின் மூலம் அகதிகளை அழைத்து வரும் கிரிமினல் கும்பலைத் தடுக்க பல பில்லியன்கள் செலவழிக்கப்பட்ட போதிலும், இதுபோல ஆபத்தான முறையில் பிரிட்டனுக்குள் வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
மிக மோசம்: இந்தாண்டு ஏற்கனவே இதுபோல சுமார் 15,832 பேர் கால்வாயைக் கடந்துள்ளனர் என்றும் இது முந்தைய 2023ஆம் ஆண்டின் இதே காலத்தை விட 9% அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது. கன்சர்வேடிவ் அரசு செலவழித்துள்ள தொகை எங்கே போகிறது என்றே தெரியவில்லை என்றும் சட்டவிரோதமாக நாட்டில் நுழைவோரைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. பிரிட்டன் பொருளாதாரம் மிக மோசமாக கிட்டதட்ட திவால் ஆகும் நிலையில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications