"புதிய தலைவலி.!" கையை பிசையும் ரிஷி சுனக்! பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு இப்படியொரு பிரச்சினையா
லண்டன்: பிரிட்டன் பிரமதர் ரிஷி சுனக் தொடர்ந்து பல பிரச்சினைகளைச் சந்தித்து வரும் நிலையில், இப்போது மற்றொரு பிரச்சினை கிளம்பியுள்ளது. அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் நிலை குறித்து குழு ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.
பிரிட்டன் நாட்டின் பிரதமராக இப்போது ரிஷி சுனக் இருக்கிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், பிரிட்டனில் பிரதமர் பதவிக்கு வந்த இளம் வயதானவர், முதல் இந்து என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்டவர்.

அவர் பிரதமராகப் பொறுப்பேற்றதே ஒரு இக்கட்டான சூழலில் தான். வெறும் 60 நாட்களில் இருவர் பிரதமர் பதவியில் இருந்து விலகிய நிலையில், ரிஷி சுனக் பிரதமர் பதவிக்கு வந்தார். அப்போது முதலே அவர் தொடர்ச்சியாகப் பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறார்.
பிரிட்டன்: இதற்கிடையே இப்போது புதிய சிக்கலை அவர் எதிர்கொண்டுள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றம் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் மறுசீரமைப்புத் திட்டம் தாமதமானால், 147 ஆண்டுகள் பழமையான வளாகம் இடிந்து விழுந்து பேரழிவு ஏற்படலாம் என்று அந்நாட்டின் நாடாளுமன்ற குழு பிரிட்டிஷ் அரசை எச்சரித்தது. கட்டிடக்கலையில் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படும் இந்த வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும் இருக்கிறது.
இங்கே தான் பிரிட்டன் நாடாளுமன்றம் நடைபெற்று வருகிறது. இருப்பினும், இந்த பாரம்பரிய கட்டிடம் இப்போது ஆபத்தில் உள்ளதாகவும் கட்டிடத்தில் பல ஆபத்துகள் இருப்பதாகவும் கட்டிடமே இடிந்து விழும் அபாயம் உள்ளதாக அந்த நாடாளுமன்ற குழு எச்சரித்துள்ளது.
பிரிட்டன் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு இது குறித்துக் கூறுகையில், "வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையைச் சரிசெய்து மீட்டெடுக்க வேண்டும் என்று ஒருமித்த கருத்து நிலவினாலும் அதில் பல காலமாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பல்வேறு காரணங்களால் சீரமைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சீரமைப்பு பணிகள்: இன்று வரை, எம்பிகள் மீதே கவனம் செலுத்தி வருகின்றனரோ தவிர ஊழியர்கள் மீது எந்தவொரு கவனமும் இல்லை. நாடாளுமன்றம் இருக்கும் அரண்மனையைச் சீரமைக்க வேண்டும் என்று முடிவு எடுத்து 5 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இன்னும் என்ன சீரமைப்பு பணிகள் செய்ய வேண்டும் என்று கூட முடிவெடுக்கவில்லை.

காலக்கெடு மற்றும் செலவு நிச்சயமற்றதாகவே உள்ளது. சீரமைப்பு பணிகளைத் தொடர்ந்து தாமதமாக்கினால் செலவு அதிகரிக்கும். அது வரி செலுத்துவோருக்கே பிரச்சினையைத் தரும்.. சின்ன சின்ன சீரமைப்பு பணிகளுக்குப் பிரிட்டன் நாடாளுமன்றம் ஒரு வாரத்திற்கு 2 மில்லியன் பவுண்டுகள் (ரூ. 20,56,92,200) செலவழிக்கிறது. ஆனாலும், இங்கே இருக்கும் பிரச்சினைகள் அதிகரித்தே வருகிறது. எனவே இந்த பிரச்சினையில் நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரிஷி சுனக் தான் பிரதமராகப் பதவியேற்றது முதல் பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறார். முதலில் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி இன்போசிஸில் இருந்து கிடைக்கும் வருமானத்திற்கு வரி செலுத்துவதில்லை என்று சர்ச்சை எழுந்தது. அது ஓய்ந்த பிறகு சீட் பெல்ட் அணியாமல் பயணித்தது, பார்கில் விதிமீறல் என வரிசையாகச் சர்ச்சையில் சிக்கினார்.
இந்தச் சூழலில் தான் நாடாளுமன்ற சீரமைப்பிலும் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என புதிய பிரச்சினை கிளம்பியுள்ளது.












Click it and Unblock the Notifications