ஆக்ஷன் மோடில் ரிஷி சுனக்.. பிரிட்டனில் ஒரே நாளில் 105 வெளிநாட்டினர் கைது! வியக்கும் நெட்டிசன்கள்
லண்டன்: பிரிட்டன் நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் திடீரென அதிகாரிகளுடன் களத்தில் இறங்கித் தேடுதல் வேட்டையில் அதிரடி காட்டினார். இது குறித்த படங்கள் இணையத்தில் இப்போது டிரெண்டாகியுள்ளது.
பிரிட்டன் பிரதமராக இப்போது ரிஷி சுனக் இருக்கிறார். கடந்தாண்டு சில வார இடைவெளியில் இரண்டு பிரதமர்கள் ராஜினாமா செய்த நிலையில், இக்கட்டான ஒரு சூழலில் ரிஷி சுனக் பிரதமர் பதவிக்கு வந்தார்.

அப்போது பிரிட்டன் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்த சூழலில், அதை மேம்படுத்த ரிஷி சுனக் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்கு ஓரளவுக்கு நல்ல பலனைக் கிடைத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பிரிட்டன் உள் துறை அதிகாரிகளுடன் இணைந்து அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இங்கிலாந்து உள்துறை அதிகாரிகளுடன் இணைந்த ரிஷி சுனக் சட்டவிரோதமாகக் குடியேறிய நபர்களைப் பிடிக்கும் ஆப்ரேஷனில் ஈடுபட்டார். அதன் ஒரு பகுதியாகப் பிரிட்டனில் சட்ட விரோதமாகக் குடியேறிய 20 நாடுகளைச் சேர்ந்த 105 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
நாடு முழுக்க நடந்த இந்த அதிரடி ஆப்ரேஷனில் குண்டு துளைக்காத ஆடையை அணிந்த ரிஷி சுனக், வடக்கு லண்டனில் உள்ள ப்ரெண்டில் நடந்த ஒரு ஆப்ரேஷனில் அதிகாரிகளுடன் இணைந்து களத்தில் இறங்கி அதிரடி காட்டினார். அவர் பிரதமர் பதவிக்கு வரும் போதே, சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அங்கே அடுத்தாண்டு தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ரிஷி சுனக் அரசு சட்டவிரோத குடியேற்ற விவகாரத்தில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறது.
இது குறித்து பிரிட்டன் உள் துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் கூறுகையில், "சட்டவிரோதமாக நாட்டில் வருவோரால் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. நேர்மையான தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதை இது பாதிக்கிறது. மேலும், அவர்கள் வரியையும் செலுத்துவதில்லை என்பதால் பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள். பிரதமர் அளித்த வாக்குறுதியின்படி இதில் நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.
இங்கே சட்ட விரோதமாகக் குடியேறும் நபர்களுக்கு பிளாக் மார்க்கெட்டில் ஒரு வேலை வாய்ப்பு சந்தையே உருவாகியுள்ளது. இதன் காரணமாகவே பலர் ஆபத்தான மற்றும் சட்டவிரோத பயணங்களை மேற்கொள்கிறார்கள். இதுபோன்ற சட்ட விரோத செயல்களுக்கு நாங்கள் ஒரு போதும் ஆதரவாக இருக்க மாட்டோம். கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
கடந்த வியாழக்கிழமை நடந்த இந்த அதிரடி ஆப்ரேஷனில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வேலை செய்த 105 வெளிநாட்டினரை அதிகாரிகள் கைது செய்தனர். உணவகங்கள், கார் வாஷிங், பார்கள், கடைகள் எனப் பல இடங்களிலும் போலீசார் அதிரடி ரெய்டை நடத்தினர். உரிய ஆவணங்கள் இல்லாமல் வேலை செய்வது, தவறான ஆவணங்களை வைத்திருந்தது என அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில், 40க்கும் மேற்பட்டோரை பிரிட்டனில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள், பிணையில் விடுவிக்கப்பட்டனர். பிரிட்டன் அதிகாரிகள் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து அங்குச் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் தானாக நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என அந்நாட்டு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த அதிரடி ஆப்ரேஷனில் மொத்தம் 20 நாடுகளைச் சேர்ந்தோர் கைது செய்யப்பட்டனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் வேலை செய்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்கள் எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தோர் என்பது குறித்த தகவல் அறிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications