சிறுவர்களிடமும் ஈஸியாக பரவுகிறது.. உருமாற்றம் அடைந்த கொரோனா அறிகுறி என்ன? தடுப்பூசி பலன் தருமா?
லண்டன்: இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் எந்த மாதிரியான அறிகுறிகளுடன் இருக்கும்? எப்படி பரவும்? என்பது போன்ற தகவல்களை உலக அளவிலான விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
புதிய வகை கொரோனா வைரஸ் 70% வேகத்தில் பரவுவதாக இங்கிலாந்து அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது. ஆனால் இது பற்றிய மேலதிக தகவல்களை தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதன் அறிகுறிகள் என்ன? தடுப்பூசிக்கு கட்டுப்படுமா? என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி அவர்கள் முதல் கட்ட ஆய்வில் சில விஷயங்களை கண்டறிந்துள்ளனர். இதோ அது பற்றிய ஒரு விழிப்புணர்வு தொகுப்பு:
கைவிடப்பட்ட கரு திசுக்களில் இருந்து தடுப்பு மருந்து.... போப் ஆண்டவர் புதிய யோசனை
புதிய வகை வைரஸ்
கொரோனா வைரஸ் பல வகைப்படும். அதில் இப்போது உலகை ஆட்டுவிப்பது, SARS-CoV-2 வகையாகும். அது இதுவரை பல்வேறு உரு மாற்றங்களை அடைந்துள்ளது. தற்போது அடைந்துள்ள உரு மாற்றத்தின் பெயர் B.1.1.7 என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இதுவரை உருமாற்றம் அடைந்த வைரஸ்களை விடவும் இது ஆபத்தாக பார்க்கப்படுகிறது. இதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.
தோற்றத்தில் மாற்றம்
தெற்கு மற்றும் கிழக்கு இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள இந்த புதிய வகை வைரஸ் 17 வகையாக மாற்றம் அடையக் கூடியது. இதனால் அந்த வைரஸின் தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. மரபு கூட மாற்றத்தை சந்திக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். மனித செல்களுக்குள் இந்த வகை வைரஸ்கள் எளிதாக நுழையும் வாய்ப்பு இருக்கிறது. பெரியவர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்களோ அதே அளவுக்கு இந்த உருமாற்றம் பெற்ற வைரஸ் காரணமாக குழந்தைகளும் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. இதுவரை பரவிய கொரோனா வைரஸ் குழந்தைகளை பெரிதும் பாதிக்காது. ஒருவேளை பெரியவர்களிடமிருந்து குழந்தைகளுக்கு பரவினாலும் கூட அவர்களுக்கு பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
அறிகுறிகள்
மேலும் 50 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை இந்த வகை வைரஸ் வேகமாக பரவக்கூடியது என்கிறார்கள். உருமாற்றம் பெற்ற வைரஸ் தாக்குதலுக்கு பிறகு உடலில் எந்த மாதிரியான அறிகுறிகள் தென்படும் என்பது பற்றியும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ப்ளூ வைரஸ் காய்ச்சல் உடலில் ஏற்படும் போது எந்த மாதிரி அறிகுறிகள் இருக்குமோ அதே மாதிரியான அறிகுறிகள் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
தசை வலி, மூட்டு வலி
தசை வலி ஒரு பொதுவான அறிகுறியாகும். மூட்டு இணைப்புகளில் சில்லிட்டுப் போவது, முதுகு வலி, மூட்டு இணைப்புகளில் வலி வீக்கம் போன்றவை பொதுவான அறிகுறிகள் ஆகும். ரத்த நரம்புகள் அதிகமாக இணையக் கூடிய பகுதிகளில் வலி அதிகமாக இருக்கும். ஏனெனில் இந்த வகை வைரஸ் ரத்தத்தின் வழியாக உடல் முழுக்க பரவுகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
ரத்த அழுத்தம்
உடல் சோர்வு, எடை குறைவது, ரத்த அழுத்தத்தின் அளவு மிகவும் அதிகரிப்பது போன்றவை இதற்கான அறிகுறிகளாகும். உடலில் ஆக்சிஜன் அளவு குறைவது தெரிய வந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவது அவசியம்.
தென் ஆப்பிரிக்காவில் வேறு வைரஸ் பிரச்சினை
இங்கிலாந்தில் பரவிவரும் உருமாற்றம் பெற்ற வைரஸ் முந்தைய வைரஸ்களை விடவும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துமா என்பது தெரியாது. ஆனால் தென் ஆப்பிரிக்காவின் கடலோரப் பகுதிகளில் பரவிவரும் புதிய வகை வைரஸ், உடலில் அதிக அளவுக்கு சேருவதாக கூறப்படுகிறது. அதாவது வைரஸ் லோட் அதிக அளவில் காணப்படுகிறது. எனவே, குணப்படுத்துவதில் மருத்துவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.
தடுப்பூசி பலன் தருமா?
இப்போது உலகம் முழுக்க உள்ள மக்களின் பெரும்பான்மையானவர்களின் கேள்வி, புதிய வகை வைரஸ், தடுப்பூசியின் செயல்திறனை கட்டுப்படுத்தி விடுமா என்பது தான். ஆனால் இதுவரை பல்வேறு மருந்து நிறுவனங்களும் விஞ்ஞானிகளும் கூறும் ஒரே கருத்து, ஏற்கனவே உருவாகியுள்ள தடுப்பூசிகள் இந்த வைரசையும், கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது என்பதுதான். தடுப்பூசிகள் உருவாக்கக்கூடிய ஆன்டிபாடிகள் ஸ்பைக் நுனியில் ஒட்டிக் கொண்டு இருக்கும். எனவே, இந்த வைரஸ் உள்ளே செல்ல முடியாது என்பதுதான் மாடர்னா மற்றும் பைசர் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசியின் சிறப்பம்சமாகும்.