மொத்தமாக மாறும் அரசு நிர்வாகம்.. பிரிட்டன்- இந்தியா உறவு என்னவாகும்? எதிர்பார்க்காத ட்விஸ்ட்
லண்டன்: பிரிட்டன் நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது. இதில் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வி அடையும் நிலையில், தொழிலாளர் கட்சி 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் நிலையில், சில முக்கிய வெளியுறவுக் கொள்கைகளும் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பிரிட்டன் நாட்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ரிஷி சுனக் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அங்குத் தொழிலாளர் கட்சி சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடிக்கிறது. அக்கட்சியினர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்கிறார்.

தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் நிலையில், அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளும் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக நாம் பார்க்கலாம்.
இந்தியா: இந்தியா உடனான உறவு தொடர்பாகத் தொழிலாளர் கட்சி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் உட்பட இந்தியாவுடன் புதிய strategic கூட்டாண்மையை விரும்புவதாகத் தொழிற்கட்சி தெரிவித்துள்ளது. குறிப்பாகப் பாதுகாப்பு, கல்வி, தொழில்நுட்பம் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் தொழிலாளர் கட்சி திட்டமிட்டுள்ளது. இந்தியா உடனான உறவுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றே தொழிலாளர் கட்சியின் தலைவரும் பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்க உள்ளவருமான ஸ்டார்மர் தெரிவித்திருந்தார்.
அப்போது அவர் மேலும் கூறுகையில், "இரு நாடுகளின் வரலாறு பின்னிப் பிணைந்து இருக்கிறது. இந்தியா உடனான உறவில் நோக்கி ஒரு புதிய அணுகுமுறை தேவை.. வரலாற்றில் இருக்கும் கசப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நவீன இந்தியா உடன் நல்லுறவை ஏற்படுத்த வேண்டும். தொழிலாளர் கட்சியில் நிறையச் சிக்கல்கள் இருந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளில் பேச்சுவார்த்தை மூலம் பல முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளோம். அதேபோல உலக நாடுகள் உடனான உறவுகளைச் சீராக்குவோம்" என்றார்.
சீனா: அதேபோல சீனா உடனான உறவு குறித்தும் முக்கிய நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். சீனாவுடனான இங்கிலாந்தின் உறவு தொடர்பாக அனைத்து அரசுத் துறைகளிலும் தொழிற்கட்சி விரிவான ஆய்வு நடத்தும் என்றும் அதன் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளது. காலநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகளில் இங்கிலாந்து- சீனா ஒத்துழைப்பு தேவை என்ற போதிலும், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற விஷயங்களில் சீனாவைச் சார்ந்து இருப்பதைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இஸ்ரேல் பாலஸ்தீன விவகாரம்: காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்குப் போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வர வேண்டும் என்றே தொழிலாளர் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதேபோல இஸ்ரேல் பாலஸ்தீனம் இடைய சமாதான முன்னெடுப்பின் ஒரு பகுதியாக பாலஸ்தீனிய அரசை அங்கீகரிப்பதில் கட்சி உறுதி பூண்டுள்ளது. பாலஸ்தீனிய அரசு என்பது பாலஸ்தீன மக்களின் பிரிக்க முடியாத உரிமை என்றும் தொழிலாளர் கட்சி குறிப்பிட்டுள்ளது.
உக்ரைன்: கடந்த காலங்களில் பிரிட்டன் அரசு உக்ரைனுக்கு முழு ஆதரவைக் கொடுத்து வந்துள்ளது. ரஷ்யாவின் படையெடுப்பை முறியடிக்க நிதி, ஆயுதங்கள் மற்றும் ராணுவ பயிற்சிகளை அளித்துள்ளது. தொழிலாளர் கட்சியும் இதைத் தொடர்ந்து செய்வோம் என்றே கூறியிருக்கிறது. அவர் விரைவில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை நேரில் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications