சத்தமின்றி பிரிட்டன் செய்த காரியம்! காத்திருக்கும் அடுத்த "பெருந்தொற்று.." எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!
லண்டன்: கடந்த 2019ல் பரவிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் மொத்தமாக முடக்கியது. அதில் இருந்து மீண்டு வரவே நமக்கு பல ஆண்டுகள் ஆனது. இதற்கிடையே இந்த 2025ம் ஆண்டு கொரோனாவை போல வேறு ஒரு வைரஸ் பாதிப்பும் கூட பெருந்தொற்றாக வெடிக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். இதற்குத் தயாராகும் வகையில் பிரிட்டன் ஏற்கனவே தடுப்பூசிகளையும் கூட வாங்கி குவிக்கிறதாம். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த 2019 இறுதியில் சீனாவில் முதல்முதலில் கொரோனா வைரஸ் பரவியது. அதன் பிறகு உலகின் மற்ற பகுதிகளுக்கும் பரவிய கொரோனா மிக மோசமான ஒரு பெருந்தொற்றை ஏற்படுத்தியது.

கொரோனா பெருந்தொற்று:
வல்லரசு நாடுகள், வளரும் நாடுகள், பின்தங்கிய நாடுகள் என அனைத்துமே கொரோனா வைரசால் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்தது. இதனால் உயிரிழப்புகள் மட்டுமின்றி மிக மோசமான பொருளாதார இழப்புகள் கூட ஏற்பட்டது. அந்தளவுக்கு அது மிக மோசமான மற்றும் நீடித்த ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா பரவ தொடங்கி 5 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், இன்னும் அது ஏற்படுத்திய வடு அப்படியே இருக்கிறது.
இதற்கிடையே இந்த 2025ம் ஆண்டில் வேறு வைரஸ்கள் கூட பெருந்தொற்றாக வெடிக்கும் அபாயம் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். எந்தவொரு வைரஸ் வேண்டுமானாலும் திடீரென பெருந்தொற்றாக மாறும் ஆபத்து இருந்தாலும், சில வகை வைரஸ்கள் மற்றவற்றைக் காட்டிலும் அதிக ஆபத்தானதாக இருக்கிறது. அதில் சில குறிப்பிட்ட இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களும் அடங்கும்.
அடுத்த பெருந்தொற்று இது:
குறிப்பாக இன்ஃப்ளூயன்ஸா A துணை வகை H5N1 வகை ஆபத்தானதாக மாறலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். H5N1 வைரஸ், அதாவது பறவை காய்ச்சலில் ஒரு வகை. இப்போது காடுகளில் இருக்கும் பறவைகள் மற்றும் வளர்க்கப்படும் கோழி உள்ளிட்ட பறவைகளுக்கு இடையே வேகமாகப் பரவி வருகிறது. மேலும், அமெரிக்காவில் கறவை மாடுகள், மங்கோலியாவில் குதிரைகளையும் கூட இது தாக்கியுள்ளது.
இத்தனை ஆண்டுகள் H5N1 வைரஸ் மனிதர்களைத் தாக்காமல் இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இது மனிதர்களையும் தாக்க ஆரம்பித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 61 பேருக்கு H5N1 வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் பறவை பண்ணைகளில் வேலை செய்தவர்கள் ஆகும். மேலும், இந்த பறவை காய்ச்சல் 30% உயிரிழப்பை ஏற்படுத்துவதும் கவலையளிக்கும் விஷயமாகும்.
பரவும் முறை:
கொரோனாவை போல H5N1 வைரஸ் பாதிக்கப்பட்ட நபரில் இருந்து மற்றொருவருக்குப் பரவாது என்பது மட்டுமே ஒரே ஆறுதல் தரும் விஷயம். இது பாதிக்கப்பட்ட விலங்கிடம் இருந்து மட்டுமே மனிதர்களுக்குப் பரவக்கூடியது.
பொதுவாக எல்லா வைரஸ்களிலும் ஏற்பிகள் இருக்கும். செல்களில் பிணைப்பை ஏற்படுத்த இந்த ஏற்பிகள் தான் உதவும். H5N1 வைரஸின் சியாலிக் ஏற்பிகள் பறவைகளின் வைரஸ்களுடன் எளிதாகப் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்கிறது. இருப்பினும், இந்த சியாலிக் ஏற்பிகளால் மனித செல்களுடன் எளிதாகப் பிணைப்பை ஏற்படுத்த முடியவில்லை. இதன் காரணமாகவே மனிதர்களிடையே H5N1 வைரஸால் பரவ முடிவதில்லை.
எச்சரிக்கை ஏன்:
இருப்பினும், இது அப்படியே தொடரும் எனச் சொல்ல முடியாது. எந்தவொரு வைரஸும் தன்னை தானே மாற்றிக்கொண்டே இருக்கும். அதன்படி எதாவது ஒரு H5N1 வைரஸ் வேரியண்ட்டின் ஏற்பிகள் மாறினால், அது எளிதாக மனிதர்களிடையே பரவ தொடங்கும். அது அடுத்த பெருந்தொற்றை ஆரம்பித்து வைக்கும்.
உலகின் சில நாடுகள் H5N1 வைரஸ் பெருந்தொற்றாக மாறும் என்பதைக் கணித்து அதற்கேற்ப நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரிட்டன் 50 லட்சம் பறவை காய்ச்சல் தடுப்பூசிகளை வாங்கி தயார் நிலையில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல உலகின் அனைத்து நாடுகளும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஏனென்றால் கொரோனாவை போல மீண்டும் பாதிப்பை உலக நாடுகளால் தாங்க முடியாது. எனவே, நிலைமை கையை விட்டுப் போகும் முன்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.












Click it and Unblock the Notifications