'சமூக நீதி' தலைவர்..பள்ளிகளில் இலவச காலை உணவு.. பிரிட்டன் புதிய பிரதமராகும் கீர் ஸ்டார்மர்! யார் இவர்?
லண்டன்: பிரிட்டன் நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி வெல்லும் சூழல் உருவாகி இருக்கிறது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வியைச் சந்திக்க உள்ளது. இதன் மூலம் அந்நாட்டின் புதிய பிரதமராகத் தொழிலாளர் கட்சியினர் கெய்ர் ஸ்டார்மர் தேர்வாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. யார் இவர்.. பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பிரிட்டன் நாட்டின் நாடாளுமன்றம் அடுத்தாண்டு தொடக்கத்தில் தான் நிறைவடைவதாக இருந்தது. இருப்பினும், கடந்த மே மாதம் பிரிட்டன் அதிபர் தேர்தல் தொடர்பான அறிவிப்பை அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் திடீரென அறிவித்தார். உட்கட்சியில் அவருக்கு எதிராக அதிகரித்த அழுத்தமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்தது. தொடக்கம் முதலே இந்தத் தேர்தலில் தொழிலாளர் கட்சியே வென்று ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறப்பட்டது. ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி வரலாற்றில் இல்லாத மிகப் பெரிய தோல்வியைச் சந்திக்கும் என்றே கூறப்பட்டது.
யார் புதிய பிரதமர்: அதன்படி நேற்று தேர்தல் நடந்த நிலையில், அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.. சர்வேக்களில் கூறப்பட்டது போலவே கன்சர்வேடிவ் கட்சிக்கு மிகப் பெரிய அடி கிடைத்துள்ளது. சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி அங்கு ஆட்சியைப் பிடித்துள்ளது. ரிஷி சுனக் பிரதமர் பதவியை இழந்துள்ள நிலையில், அடுத்த பிரதமர் யார் என்பதில் கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வென்று ஆட்சியைப் பிடிக்கும் நிலையில், தொழிலாளர் கட்சியின் வேட்பாளர் கெய்ர் ஸ்டார்மர் அடுத்த பிரதமராகப் பதவியேற்க உள்ளார். 61 வயதான ஸ்டார்மர் ஒரு நிலையான மற்றும் நம்பகமான தலைவர் என்றே அவரது கட்சியினர் கூறுகிறார்கள்.
கெய்ர் ஸ்டார்மர்: இந்த கெய்ர் ஸ்டார்மர் 1962ம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி அங்குள்ள சர்ரே ஆக்ஸ்டெட் பகுதியில் ஒரு தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தார். அவரது அம்மா அந்நாட்டு அரசின் தேடிய மருத்துவ சேவைகள் பிரிவில் நர்ஸ்ஸாக வேலை செய்து வந்தார். அவரது தந்தை ஒரு டூல் மேக்கராக இருந்தார். பள்ளிப் படிப்பை முடித்த ஸ்டார்மர் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். இவர்தான் தனது குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரியாவர்.
சமூக நீதி: கெய்ர் ஸ்டார்மர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு, மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வழக்கறிஞராக இருந்தார். சமூக நீதிக்கான அவரது அர்ப்பணிப்பிற்காக அவரை இடதுசாரி வழக்கறிஞர் என்றே பலரும் குறிப்பிட்டனர். 1987ம் ஆண்டு முதல் இவர் வழக்கறிஞராக பணியாற்றிய இவர் மனித உரிமைகள் சார்ந்த வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றார்.
கரீபியன் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு செனே்று அங்கு மரண தண்டனையை எதிர்நோக்கும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும் வாதிட்டுள்ளார். டோனி பிளேயர் பிரதமராக இருந்த போது பிரிட்டன் அரசு ஈராக் மீது படையெடுத்த நிலையில், அதை மிகக் கடுமையாக எதிர்த்தவர்.
திருமணம்: மேலும் 2003 முதல் 2008 வரை ஐந்து ஆண்டுகள் வடக்கு அயர்லாந்து காவல் வாரியத்தின் சட்ட ஆலோசகராக இருந்தார். இந்தச் சமயத்தில் தான் அவர் தேசிய சுகாதார சேவையில் (NHS) பணிபுரிந்து வந்த அவரது மனைவி விக்டோரியாவை முதலில் சந்தித்தார். இருவரும் சில ஆண்டுகள் காதலித்த நிலையில். 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
2008ஆம் ஆண்டில், ஸ்டார்மர் அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.. இந்த சமயத்தில் தான் அவர் பல முக்கிய கேஸ்களில் ஆஜரானார். இந்த காலகட்டத்தில் தான் அவரது புகழ் நாடு முழுக்க பரவியது. மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இவரது சேவையைப் பாராட்டும் வகையில் கடந்த 2014இல் மறைந்த ராணி எலிசபெத் இவருக்கு நைட்ஹுட் பட்டம் வழங்கினார்.
தேர்தல் அரசியல்: இந்த பட்டம் பெற்ற மறு ஆண்டே, அதாவது 2015இல் இவர் தேர்தல் அரசியலுக்குள் நுழைந்தார். ஹோல்போர்ன் மற்றும் செயின்ட் பான்க்ராஸ் தொகுதியில் போட்டியிட்ட இவர் எம்பியாக தேர்வானார். உடனடியாக தொழிலாளர் கட்சியில் முக்கிய பதவிகள் கிடைத்தன. கடந்த 2019இல் ஜெர்மி கோர்பின் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஸ்டார்மர் 2020இல் தொழிலாளர் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியை விட நாடு பெரியது என்பதே அவரது கொள்கை என முன்வைத்தார்.
ஐரோப்பிய ஒன்றியம்: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக முந்தைய கன்சர்வேடிவ் கட்சி எடுத்த முடிவை அவர் மிகக் கடுமையாக எதிர்த்தார். அதேநேரம் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வரும் போது மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேராது என்பதைத் தெளிவுபடுத்தினார். பிரிட்டன் பொருளாதார திண்டாட்டம் தொடங்கிப் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலையில், ஸ்டார்மர் ஸ்திரத்தன்மையையும் மாற்றத்தையும் கொண்டுவருவதாக உறுதியளிக்கிறார்.
6,500 புதிய ஆசிரியர்களை பணியமர்த்துதல், குழந்தைப் பராமரிப்பை விரிவுபடுத்துதல் மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் இலவச காலை உணவு வழங்குவது முக்கிய வாக்குறுதிகள் ஆகும். மேலும் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, பள்ளி மாணவர்களின் மனநலனை மேம்படுத்துவது, மாற்றுத்திறனாளிகள் மற்றும் LGBT+ சமூகத்திற்கான சிகிச்சை ஆகியவையும் முக்கிய வாக்குறுதிகள் ஆகும். இந்த வாக்குறுதிகளே தொழிலாளர் கட்சி 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை அமைக்க உதவி இருக்கிறது.












Click it and Unblock the Notifications