இங்கிலாந்து ராணியே நன்றி சொன்ன இந்தியர்.. பிரிட்டனில் இருந்து நாடுகடத்தப்படுகிறார்? நடந்தது என்ன
பிரிட்டன் ராணியால் பாராட்டப்பட்ட நபர், நாடு கடத்தப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
லண்டன்: இந்தியாவில் இருந்து தனது கல்வி படிப்பை மேற்கொள்ளப் பிரிட்டன் சென்ற விமல் பாண்டியா, கொரோனா சமயத்தில் அங்கு மிகப் பெரியளவில் உதவினார். இதற்காகப் பிரிட்டன் ராணியே அவரை பாராட்டியிருந்த நிலையில், இப்போது அவர் நாடு கடத்தப்படும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
கடந்த 2019 தொடங்கி 2,3 ஆண்டுகளுக்கு கொரோனா பெருந்தொற்று நம்மைப் படாதபாடு படுத்தியது அனைவருக்கும் தெரியும்.. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் தொடங்கிப் பின்தங்கிய நாடுகள் வரை யாருமே இதில் தப்பவில்லை.
உலக நாடுகளின் சுகாதார கட்டமைப்பு எந்தளவுக்கு மோசமாக இருந்தது என்பதை இது வெளிச்சம் போட்டுக் காட்டியது. வேக்சின் தொடங்கி பல்வேறு நடவடிக்கைகளால் இந்த பாதிப்பு இப்போது தான் கட்டுக்குள் வந்தது.

விமல்
கொரோனா உச்சத்தில் இருந்த போது அதன் பாதிப்புகள் மிக மோசமாக இருந்தது.. மருத்துவமனைகள் அனைத்துமே கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிந்தன.. அந்தச் சமயத்தில் மருத்துவர்களும் செவிலியர்களும்தான் தங்கள் உயிரைப் பெரிதாகக் கருதாமல் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். அப்போது பல நெகிழ்ச்சியான சம்பவங்களும் கூட நடைபெற்றன. அப்படித்தான் கொரோனா உச்சத்தில் இருந்த போது பிரிட்டனில் வசித்து வந்த இந்தியரான விமல், அங்குப் பல நூறு மக்களுக்குப் பெருமளவில் உதவினார்.

ராணி பாராட்டு
உதவி என்றால் எதோ சிறு உதவி இல்லை.. கொரோனா சமயத்தில் விமல், அங்கு உள்ளூர் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். ஊரடங்கு சமயத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்த நிலையில், அப்போது தனிமையில் இருந்த அனைவருக்கும் உணவுகள் கிடைப்பதை அவர் உறுதி செய்தார். இதற்காக ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் தீவிரமாக வேலை செய்தார். பல பேருக்கு அப்போது சரியான நேரத்தில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவும் காரணமாக இருந்தார். அவரது சேவையை பாராட்டிய கிரேட்டர் லண்டனின் லார்ட்-லெப்டினன்ட் சர் கென்னத் ஓலிசா, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் சார்பாக அவருக்குக் கடிதமும் எழுதினார்.

நாடு கடத்தப்படும் சூழல்
இந்தளவுக்குப் பிரிட்டன் மக்களுக்கு மிகப் பெரிய உதவி செய்த அவர், விசா விவகாரம் காரணமாக இப்போது பிரிட்டனில் இருந்து நாடு கடத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.. விமல் பாண்டியா மாணவர் விசாவில் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு படிக்கச் சென்றிருந்தார்.. இருப்பினும், திடீரென அவர் படிக்கச் சென்ற கல்வி நிறுவனம் வெளிநாட்டு மாணவர்களுக்கு நிதியுதவி செய்வதற்கான உரிமத்தை இழந்ததால் இக்கட்டான சூழலுக்கு விமல் பாண்டியா தள்ளப்பட்டார்.. 42 வயதான விமலின் வழக்கு அங்கு இம்மிகிரேஷன் கோர்டில் நடந்தது. இருப்பினும், அதில் அவர் தோல்வியடைந்தார்.

பிரிட்டன் மக்கள் அதிருப்தி
இதனால் அவர் நாடு கடத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. இருப்பினும், அவரை நாடு கடத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தைச் சிலர் தொடங்கியுள்ளனர். அதில் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் இதுவரை கையெழுத்திட்டுள்ளனர்.. இது தொடர்பாகப் பிரிட்டன் மக்கள் கூறுகையில், "நாங்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறோம். அவரும் ஏமாற்றத்தில் இருக்கிறார்.. இருப்பினும், நாங்கள் போராட்டத்தைக் கைவிட மாட்டோம். இப்போது எங்கள் முன்னிருக்கும் அனைத்து ஆப்ஷன்களையும் ஆராய்ந்து வருகிறோம்.

உதவ வேண்டும்
11 வருடங்களாக அவர் இங்கு வாழ்ந்து வருகிறார். இங்குள்ள மக்கள் மீது விமல் எந்தளவுக்கு அக்கறை கொண்டுள்ளார் என்பதைப் பல நேரங்களில் காட்டியுள்ளார். பல ஆண்டுகளாக அவரது உதவியால் நாங்கள் பயனடைந்துள்ளோம்.. அதனால்தான் அவர் அநியாயமாக நாடு கடத்தப்படுவதைத் தடுக்க நாங்கள் போராடுகிறோம். அவர் இப்போது தனது படிப்பிற்காகப் போராடி வருகிறார். ஆனால், அதற்குள் அவர் எங்களில் ஒருவராகிவிட்டார். அவர் வெளியேறுவதை நாங்கள் விரும்பவில்லை" என்று தெரிவித்தனர்.

என்ன நடந்தது
கடந்த 2011இல் விமல் படிப்பிற்காக இங்கிலாந்துக்குச் சென்றிருந்தார். அப்போது ஒரு நாள் அவர் படித்து வந்த கல்லூரி வெளிநாட்டு மாணவர்களுக்கான ஸ்பான்சர்ஷிப் உரிமையை இழந்துவிட்டதாகப் பிரிட்டன் அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், அவரது கல்லூரி அல்லது உள்துறை அலுவலகம் மூலம் அவருக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.. அவரது ஒரிஜினல் பாஸ்போர்ட்டும் கல்வி நிறுவனத்திடம் சிக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. இதனால் பாஸ்போர்ட் உள்ளிட்ட பிற ஆவணங்கள் கிடைக்காமல் அவர் பிரச்சினையைத் தீர்க்க போராடி வருகிறார்.

எம்பி சொல்லியும் மாறவில்லை
இது குறித்து மற்றொருவர் கூறுகையில், "இதில் அனைத்துமே சட்ட வரம்புகளைக் கடந்துவிட்டன, நாட்டின் முடிவை நாம் மதிக்க வேண்டும், ஆனால் அவர் நாட்டிற்கு இந்தளவுக்கு உதவியுள்ளார்.. பிரிட்டன் ராணியால் பாராட்டப்பட்டுள்ளார். அப்படியிருக்கும் போது அவரை ஏன் நாடு கடத்துகிறார்கள் எனத் தெரியவில்லை" என்றார். தெற்கு லண்டனின் பழைய சவுத்வார்க் எம்பியும் விமலுக்கு ஆதரவாக இம்மிகிரேஷன் கோர்டில் கூட வந்து பேசினார். எம்பி கூறினாலும், சட்டப்படியே இந்த முடிவை எடுத்துள்ளதாக இம்மிகிரேஷன் கோர்ட் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.












Click it and Unblock the Notifications