மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா: கோஹினூர் வைர கிரீடத்தை அணிய மறுக்கும் ராணி கமீலா.. இதுதான் காரணமா?
லண்டன்: இங்கிலாந்து மன்னராக சார்லஸ் முடிசூட்டிக் கொள்ளும் விழாவில் ராணி கமீலா பார்க்கர் கோஹினூர் வைரம் பதித்த கிரீடத்தை தவிர்ப்பது ஏன் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தவர் ராணி இரண்டாம் எலிசபெத். இவரது ஆட்சி மக்களின் மனங்களை கவர்ந்தது. இப்படிப்பட்ட ராணி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்காட்லாந்தில் உள்ள மோரல் கோட்டையில் உடல்நல குறைவால் காலமானார்.

இவரது உடலும் ஏற்கெனவே பதப்படுத்தி வைக்கப்பட்ட இவருடைய கணவர் உடலும் சேர்ந்து நல்லடக்கம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து எலிசபெத்தின் மகனும் பட்டத்து இளவரசருமான சார்லஸ் அந்த நாட்டின் மன்னராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
இவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுவார். இந்த நிலையில் இன்று மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா லண்டனில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கோஹினூர் வைரம் பதித்த கிரீடத்தை முடிசூட்டு விழாவில் ராணி கமீலா அணிவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் அதை அணிய போவதில்லையாம். ராணி எலிசபெத் அணிந்திருந்த கிரீடத்திற்கு பதிலாக ராணி பேரி அணிந்திருந்த கிரீடத்தைத்தான் ராணி கமீலா அணிய போகிறாராம். இதற்கு என்ன காரணம் என்ற பரபரப்பான விவாதம் நடந்து வருகிறது. பாரம்பரிய விழாவில் கமீலா ஏன் மரபை மாற்றிக் கொள்கிறார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த கோஹினூர் வைரம் இந்தியாவின் பழைய பிரிக்கப்படாத ஆந்திர மாகாணத்தில் கோல்கொண்டாவிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டது. இதன் எடை 105.6 கேரட் இருக்கும். இந்த வைரத்தை சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங் வைத்திருந்தாராம். அது 1857 ஆம் ஆண்டு நடந்த கிளர்ச்சிக்கு பிறகு விக்டோரியா மகாராணிக்கு வழங்கப்பட்டது.
இந்தியாவுக்கு சொந்தமான இந்த வைரத்தை மீட்டு கொண்டு வர வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டது. ஆனால் இந்த வைரத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என இங்கிலாந்து திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதனால்தான் ராணி கமீலா கோஹினூர் கிரீடம் அணிவதை தவிர்த்துள்ளார் என்கிறார்கள். ராணி எலிசபெத் இறந்த போதுகூட நெட்டிசன்கள் கோஹினூர் வைரத்தை திருப்பி கேட்டு டிவிட்டரில் கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.
இதுகுறித்து பத்திரிகையாளர் ஒருவர் கூறியிருப்பதாவது: கோஹினூர் வைரம் சர்ச்சைக்குரியதாக இருக்கிறது என்பதை அரண்மனை அறிந்துள்ளது. எனவே முடிசூட்டும் விழாவில் ராணி கமீலா அந்த கிரீடத்தை அணிந்து அது மேலும் சர்ச்சையாகவிட கூடாது என்பதற்காகத்தான் முடிசூட்டு விழாவில் வைர கிரீடத்தை கமீலா அணிய மாட்டார் என்றார்.












Click it and Unblock the Notifications