உ.பி. முதல்வர் யோகி நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்- 4 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்
லக்னோ: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் மர்ம நபர் நுழைந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இது தொடர்பான விசாரணையில் பணியில் அலட்சியமாக இருந்ததாக 4 போலீசார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைத் தக்க வைக்க தீவிரம் காட்டி வருகிறது.

குஷிநகர் விமான நிலையம்
இம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள் துரித கதியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அண்மையில் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அத்துடன் பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இன்னொரு பக்கம் விவசாயிகள் படுகொலை, லாக்கப் மரணங்கள் என ஆளும் பாஜக அரசுக்கு நெருக்கடியும் அதிகரித்து வருகிறது.

துப்பாக்கியுடன் மர்ம நபர்
இதனிடையே முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் மர்ம நபர் அமர்ந்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உ.பி.யின் பஸ்தி மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்க இருந்தார். அவரது வருகைக்கு முன்னதாக பொதுமக்கள் இருக்கைகளில் அமர அனுமதிக்கப்பட்டிருந்தனர். அப்போது நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் கைத்துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவர் அமர்ந்திருந்ததை போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

மர்ம நபரிடம் விசாரணை
இதையடுத்து அந்த மர்ம நபர் அரங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் உரிமம் பெற்ற துப்பாக்கியைத்தான் வைத்திருந்தார். ஆனால் துப்பாக்கியுடன் ஏன் முதல்வர் நிகழ்ச்சிக்கு வந்தார் என துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது. அதேநேரத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் நிகழ்ச்சியின் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரின் அலட்சியத்தால்தான் மர்ம நபர் துப்பாக்கியுடன் உள்ளே நுழைய முடிந்தது என்கிற விமர்சனமும் எழுந்தது.

போலீசார் சஸ்பெண்ட்
இதனடிப்படையில் பணியில் இருந்த 7 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த 7 போலீசாரில் 4 பேர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 3 பேர் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார் பஸ்தி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ஶ்ரீவத்ஸவா.












Click it and Unblock the Notifications