சிறுநீர் கழித்த இடத்தை நக்கவைத்து.. தலித் முதியவருக்கு நேர்ந்த கதி.. கோவில் வளாகத்தில் ஷாக் சம்பவம்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உடல்நலக்குறைவால் கோவில் வளாகத்தின் அருகே சிறுநீர் கழித்த 65 வயது தலித் முதியவரை அங்கிருந்தவர்கள் துன்புறுத்தி அவரை சுத்தம் செய்ய வைத்தனர். மேலும் அவர் சிறுநீர் கழித்த இடத்தை நாக்கால் நக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோ அருகே உள்ள ஹடா ஹஸ்ரத் சாகேப் என்ற பகுதியை சேர்ந்தவர் ராம்பால். இவருக்கு வயது 65. இவர், தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். குறிப்பாக சுவாச கோளாறு பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறார்.

அவரால் நீண்ட தூரம் வேகமாக நடக்க முடியாது. சிறிது தூரம் நடந்தாலே அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு விடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ராம்பால், ககோரி டவுனுக்கு சென்றார். அங்கு பிரசித்திப்பெற்ற ஷீட்லா மாதா கோவில் உள்ளது. அந்த கோவிலில் ராம்பால் அமர்ந்து இருந்தார்.
அப்போது திடீரென்று அவருக்கு உடல்நல பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கோவில் வளாகத்திற்கு அருகே சிறுநீர் கழித்துள்ளார்.
இதை அங்கிருந்தவர்கள் பார்த்து கோபமடைந்தனர். கோயிலின் புனிதத்தை ராம்பால் கெடுத்ததாக கூறியதோடு, அவரை பிடித்து தாக்கி உள்ளனர். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர் என்பதை கூட பாராமல் அவரை அடித்து உதைத்துள்ளனர். மேலும் கோவிலை சுத்தம் செய்யும்படி கூறி துன்புறுத்தி உள்ளனர். அதுமட்டுமின்றி அவர் சிறுநீர் கழித்த இடத்தை நாக்கால் நக்க வைத்து அதன்பிறகு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய வைத்துள்ளனர்.
இதுதொடர்பான போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்வாமிகாந்த் என்ற பம்மு என்பவரை கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications