5 ஸ்டார் ஹோட்டல் தெரியும்.. 5 ஸ்டார் ஜெயில் தெரியுமா.. உ.பி.யில் இருக்கே.. மேட்டர் இதுதான்!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் உள்ள பருக்காபாத் சிறைச்சாலையில் உயர்தரத்தில் உணவுகள் வழங்கப்படுவதால் அந்த சிறைச்சாலைக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் 5 நட்சத்திர அந்தஸ்து வழங்கியுள்ளது.
ஜெயிலுக்கு போய் களி சாப்பிட போற... என்று நம்மூரில் பேச்சு வழக்கு உண்டு.
ஜெயிலில் கொடுக்கப்படும் உணவுகளின் தரம் மோசமாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டி , தப்பு பண்ணினால் ஜெயிலில் போய் கஷ்டப்பட வேண்டும் என்பதை உணர்த்த இப்படி பெரியவர்கள் சொல்வார்கள்.
கேஜிஎஃப் ராக்கியாக ஆசையாம்.. அடுத்தடுத்து வான்டடாக செய்த 5 கொலைகள்.. 19 வயது இளைஞரால் ஷாக்
உணவின் தரம்
ஆனால், உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு சிறைச்சலை உணவுக்கு பைவ் ஸ்டார் ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுத்தம் போன்றவற்றை வைத்து சிறைச்சாலைக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இந்த 5 நட்சத்திர அந்தஸ்தை அளித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பதேகர் மாவட்டத்தில் உள்ள பருக்காபாத் சிறைச்சாலைக்கு தான் இந்த 5-ஸ்டார் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.
உயர்தர அளவில்
சுமார் 1,144 கைதிகள் உள்ள இந்த சிறைச்சாலையில் பாதுகாப்பான வகையில் உணவுகள் வழங்கப்படுகின்றன. மேலும் உணவுகளும் வித விதமாக சத்து மிக்கதாக, அருமையான பக்குவத்தில் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் உணவு தயார் செய்பவர்களும் சுகாதாரத்தோடு பணிபுரிவதாகவும் அதனை அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு உயர்தர அளவில் அங்கு உணவு சமைத்து வழங்கப்படுவதால் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆய்வு நடத்தி இந்த சான்றிதழை வழங்கியுள்ளது.
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு
தற்போது கொடுக்கப்பட்டுள்ள 5 நட்சத்திர அந்தஸ்து மதிப்பீடு ஆகஸ்ட் 18, 2024 ஆம் ஆண்டு வரை செல்லுபடியாகும். இது குறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், ''இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறையில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் வழங்கப்படும் முன்பாக சிறை ஊழியர்கள் சிலருக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு தர நிர்ணய அதிகாரிகள், உணவு பொருட்கள் கொள்முதல் செய்யப்படும் இடம், உணவின் தரம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர்.
வகைவகையான உணவுகள்
வாரத்தில் 7 நாட்களும் வகை வகையான உணவுகள் சிறைக்கைதிகளுக்கு வழங்கப்படுகிறது. பருப்பு வகைகள், கொண்டைக் கடலை உள்ளிட்ட வைகளில் உணவுப்பண்டங்கள் செய்யப்பட்டு சுழற்சி முறையில் கைதிகளுக்கு அளிக்கப்படுகிறது. காலை உணவாக இரண்டு நாட்கள் கொண்டைக்கடலை, பாவ் ரொட்டி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
பூரி, சப்ஜி, அல்வா
3 நாட்களுக்கு கோதுமை கஞ்சி வழங்கப்படுகிறது. மதிய உணவுக்கு பல்வேறு வகையான பருப்புகளில் செய்யப்படும் தால்கள் வழங்கப்படுகின்றன. மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை வேளையில் பூரி, சப்ஜி, அல்வா ஆகியவை வழங்கப்படுகிறது. 30-35 சிறைக்கைதிகள் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒவ்வொரு நாள் வழங்கப்படும் உணவின் தரமும் பரிசோதிக்கப்படுகிறது. சிறையில் அளிக்கப்படும் உணவு வகைகள் சிறைக்கைதிகளுக்கு முழு திருப்தி அளிக்கிறது'' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.