இருளில் நீண்ட கைகள்! தலித் சிறுமியை சிதைத்து வீடியோ! பேஸ்புக்கில் பரப்பி ஆணவம்! உபியில் வெட்கக்கேடு
லக்னோ : உத்திரபிரதேச மாநிலம் ஜான்பூரில் மைனர் சிறுமியை நான்கு பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அந்த கொடுமையான சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து பேஸ்புக், வாட்ஸாப் போன்ற சமூக வலைதளங்களில் பரப்பிய நிலையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய தகவலை, தேசிய குற்ற ஆவண காப்பகம், 'இந்தியாவில் குற்றம்' என்ற இதழில் வெளியிடுகிறது. அதில் உள்ள தகவல்களின்படி, நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக கடந்த 2019ம் ஆண்டில் 4,05,326 குற்றங்களும், 2020ம் ஆண்டில், 3,71,503 குற்றங்களும் பதிவாகியுள்ளன.
நாட்டிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக ஆளும் உத்தரபிரதேசம்தான் முதலிடத்தில் உள்ளது.
கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 31,000 புகார்கள் தேசிய மகளிர் ஆணையத்தால் பெறப்பட்டன.

உபியில் அதிர்ச்சி
இந்த எண்ணிக்கை 2014 க்குப் பிறகு அதிகபட்சமாக உள்ளது. அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவை. அதிக மக்கள்தொகை கொண்ட அந்த மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அதிகபட்சமாக 15,828 புகார்கள் பதிவாகியுள்ளன. அங்கு இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் பதவியேற்றுள்ள நிலையில், காவல்துறை மற்றும் நிர்வாகத்தில் பல்வேறு நடவடிக்கைகள் இருந்தும், உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முடிவே இல்லை.

பாலியல் பலாத்காரம்
இந்நிலையில் மாநிலத்தில் நடைபெற்றுள்ள மற்றொரு வெட்கக்கேடான சம்பவத்தில், ஜான்பூர் மாவட்டத்தில் ஒரு சிறுமியை நான்கு பேர் கும்பல் பலாத்காரம் செய்ததோடு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த கொடுமையை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். ஜன்பூரின் பத்லாபூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வியாழக்கிழமை மாலை இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்ததாக ஹிந்துஸ்தான் என்ற இந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

வீடியோ எடுத்து அராஜகம்
குற்றம் சாட்டப்பட்ட உத்தம் உபாதயா , தீபக் உபாதயா, சச்சின் உபாதயா மற்றும் சூரஜ் ஆகிய நான்கு பேர், கடந்த மே 23 அன்று இரவு, 17 வயது சிறுமி தனது வீட்டிற்கு அருகில் இருந்த போது சிறுமியை பணயக் கைதியாக பிடித்து கூட்டு பலாத்காரம் செய்தனர். மேலும் இதனை வீடியோவும் எடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சிறுமி, இரண்டு நாட்களாக நடந்த குற்றத்தை பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை.

போலீசார் வழக்கு
இந்நிலையில் குற்றவாளிகள் பலாத்கார வீடியோவை இணையத்தில் வைரலாக்கியதால் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சிறுமியிடம் கேட்டபோது, பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். உன்னாவ் மாவட்டத்தில் பதிவாகியுள்ள மற்றொரு சம்பவத்தில், 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வீட்டின் மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டார். பின்னர் குற்றவாளியை போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications