என்னம்மா இப்படி பன்றீங்களே.. உ.பியில் ஆட்டோ டாப்பில் உட்கார்ந்து செல்லும் மாணவர்கள்.. பரவும் வீடியோ
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் ஆட்டோவின் டாப்பில் அமர வைத்து சிறார்களை அழைத்து செல்லும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருவதோடு, விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
கல்லூரி மாணவர்களும், பள்ளி செல்லும் மாணவர்களும் பல இடங்களில் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்வதை நாட்டின் பல இடங்களில் காண முடிகிறது.
பல இடங்களிலும் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் இந்த ஆபத்தான பயணங்கள் முடிவுக்கு வந்தபாடில்லை என்றே சொல்லலாம்.

உத்தர பிரதேசத்தில் இந்த நிலைமை..
போதிய பேருந்துகள் இல்லை என்றும் மாணவர்கள் கேட்பதில்லை என்றும் இதற்கு பலவாறாக காரணங்கள் வந்தாலும் ஆபத்தை உணராத இந்த பயணங்களுக்கு முடிவு கட்ட முடியவில்லையே என்பதே சமூக ஆர்வலர்களின் கவலையாக உள்ளது. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இதுபோன்ற ஆபத்தான பயணங்களை மாணவர்கள் செல்வதாக கூறப்பட்டாலும் உத்தர பிரதேசத்தில் இந்த நிலைமை கொஞ்சம் மோசம்தான் என்று சொல்ல வேண்டும்.

ஆட்டோ ரிக்ஷாவின் மேல் பகுதியில்..
நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமாக உள்ள உத்தரபிர தேசத்தில் அடிக்கடி இது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி விமர்சனத்திற்கு உள்ளாகி வரும். பெரும்பாலும் ஓரளவு வயது வந்த மாணவர்கள் ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் காட்சிகள் வெளியாகும் நிலையில், உத்தர பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் பள்ளி செல்லும் சிறார்கள் ஆட்டோ ரிக்ஷாவின் மேல் பகுதியில் உக்கார வைக்கப்பட்டு அழைத்து செல்லப்படும் வீடியோக்கள் காண்போரை பதை பதைக்க வைத்துள்ளது.

டிரெண்ட் ஆகும் வீடியோ
ஒன்றும் அறியாத அப்பாவி சிறு பிள்ளைகள், ஆட்டோவின் டாப்பில் அமர்ந்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டு பள்ளிக்கு செல்கின்றனர். இந்த ஆபத்தான பயணத்தில் சிறார்களை எந்த பயமும் இன்றி அழைத்துச்செல்வதுதான் கொடுமையிலும் கொடுமை. பரேலியில் உள்ள பிரதான சாலையில் செல்லும் ஆட்டோவை பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்தவர் படம் பிடித்துள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்த பதிவுக்கு கீழே நெட்டிசன்கள் தங்கள் கோபத்தையும்...ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

போலீசார் நடவடிக்கை
தற்போது இந்த வீடியோ பதிவு பரேலி மாவட்ட போலீசின் கவனத்துக்கு சென்றுள்ளது. இதையடுத்து, ட்விட்டரில் பதிவிட்ட பரேலி மாவட்ட போலீசார், இந்த ஆட்டோ டிரைவரை கண்டறிந்து அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷேர் ஆட்டோ ஒன்றில் 27 பேரை ஏற்றிக்கொண்டு செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி இருந்தது. உத்தர பிரதேசத்தின் பேட்பூர் பகுதியில், நத்தை போல சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோவை மடக்கிய போலீசார் அதில் இருந்த பயணிகளின் எண்ணிக்கையை கண்டு மிரண்டனர்.

ஒரு ஆட்டோவில் 27 பேரா...
ஒவ்வொருவராக வெளியே வரவழைத்து எண்ணிய போது, மொத்தம் 27 பேர் அந்த ஷேர் ஆட்டோவில் இருந்தனர். ஒரு வேனில் அழைத்து செல்ல வேண்டிய பயணிகளை இப்படி ஷேர் ஆட்டோவில் அழைத்து செல்கின்றார்களே என்று நொந்து கொண்ட போலீசார் பயணிகளை எச்சரித்தும் ஷேர் ஆட்டோ மீது அபராதமும் விதித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications