உ.பி: 50% தேசிய பாதுகாப்பு சட்ட வழக்குகள் பசுவதை குற்றத்துக்காக மட்டும்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் நடப்பாண்டில் தேசிய பாதுகாப்புச் சட்டம் (என்.எஸ்.ஏ) பாய்ந்த 139 பேரில் 76 பேர் பசுவதை குற்றத்துக்காக மட்டும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநில செயலாளர் (உள்துறை) அவானிஷ் குமார் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், இம்மாநிலத்தில் ஆகஸ்ட் 31-ந் தேதி வரை மொத்தம் 139 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
பரேலி காவல்துறைக்குட்பட்ட பகுதியில் மட்டும் மொத்தம் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 44 வழக்குகள் பதிவாகி உள்ளன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தின் கீழ் 6 பேர் மீது என்.எஸ்.ஏ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களை நடத்தியவர்களில் 13 பேர் மீதும் என்.எஸ்.ஏ. பாய்ந்துள்ளது. பசுவதை குற்றங்களுக்காக மட்டும் மொத்தம் 76 பேர் மீது என்.எஸ்.ஏ.-ல் வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன..
கடைசியாக செப்டம்பர் 6-ந் தேதியன்று பரெய்ச் மாவட்டத்தில் கீழ் சலீம் குரேசி என்பவர் மீது பசுவதை குற்றத்துக்காக என்.எஸ்.ஏ.-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சலீம் குரேசியை போலீசார் கொடூரமாக தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டால் எந்த ஒரு விசாரணையுமே இல்லாமல் ஓராண்டுவரை தடுத்து வைக்க முடியும்.
இதுதவிர பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் மட்டும் ஆகஸ்ட் 26- ந்தேதி வரை உத்தரப்பிரதேசத்தில் 1,716 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இச்சட்டத்தின் கீழ் 4,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.