சிஏஏ போராட்டத்தை கையாண்ட விதத்தால் கடும் அதிருப்தி.. யோகி அரசுக்கு அலகாபாத் ஹைகோர்ட் சரமாரி கேள்வி
லக்னோ: குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை கையாண்ட விதத்திற்காக உத்தரபிரதேச அரசு மீது பெருகிய அதிருப்திக்கு மத்தியில், அலகாபாத் உயர்நீதிமன்றம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவது குறித்த குற்றச்சாட்டுகளை அறிந்துகொள்ள அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் கடந்த மாதம் பல்வேறு இடங்களில் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. இந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், முஷாபர் நகர், வாரணாசி உள்பட பல்வேறு இடங்களில் நடந்த வன்முறையில் சுமார் 22 பேர் வரை உயிரிழந்தனர்.

முஸ்லீம்கள் சொத்துக்கள்
இதனிடையே முஸ்லீம்கள் பலரது வீடுகளை போலீசார் தாக்கியதாக புகார்கள் எழுந்தது. போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி பல முஸ்லீம்களின் சொத்துக்களை போலீசார் அழித்ததாகவும் புகார்கள் எழுந்தது.

வழக்கறிஞர் கடிதம்
உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தை ஒடுக்க போலீசார் கடுமையாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகளும் அதிருப்திகளும் எழுந்தன. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் நடந்த வன்முறை, இணையங்கள் முடக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டிருந்த செய்திகளை குறிப்பிட்டு மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் அஜய் குமார் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதி இருந்தார்.

மூன்று உத்தரவுகள்
அந்த கடிதத்தை ஏற்று அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோவிந்த் மதூர், நீதிபதிகள் விவேக் சர்மா ஆகியோர் அமர்வு தனாக முன்வந்து மூன்று உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

மனித உரிமைகள் ஆணையம்
கடந்த ஒரு மாதத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிரான போராட்டங்களின் போது அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நடந்த போலீஸ் வன்முறைகள் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. போலீசின் வன்முறைகள் குறித்து அறியவும், மாநிலத்தில் இணையம் முடக்கப்பட்டது குறித்து இன்னொரு உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை
மூன்றாவதாக சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து பதில் அளிக்குமாறு உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் தலைமையிலான அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications