பாபர் மசூதி இடிப்பு.. எல்கே அத்வானி உள்பட பாஜக தலைவர்களுக்கு எதிரான மேல்முறையீடு..நீதிமன்றம் அதிரடி
லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட எல்கே அத்வானி, உமாபாரதி, கல்யாண் சிங் உள்பட பாஜக தலைவர்களுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 1992ம் ஆண்டு எழுந்த பிரச்சனையை தொடர்ந்து இந்த நாள் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்தியாவில் மிகப்பெரிய பிரச்சனையாக பாபர் மசூதி இடிப்பு விவகாரம் இருந்தது. பாஜக மூத்த தலைவர்கள் ஏராளமானவர்களின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
சிஏஏக்கு “நோ என்ட்ரி”.. குடிமக்களை தீர்மானிக்க பாஜக யார்? குஜராத் தேர்தல் வருதில்ல - மம்தா கேள்வி
பாபர் மசூதி இடிப்பு சர்ச்சை
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர்களான எல்கே அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி, சாத்வி ரிதம்பரா, ராமர் கோவில் அறக்கட்டளை தலைவர் நிருத்யா கோபால் தாஸ், பாஜக தலைவர் வினய் சிங் உள்ளிட்ட 32 பேர் குற்றம்சாட்டப்பட்டனர். இவர்கள் தான் ராமர் கோவில் இயக்கம் என்ற பெயரில் மசூதியை இடிக்க காரணமாக இருந்ததாக கூறப்பட்டது.
விடுதலை செய்த சிறப்பு நீதிமன்றம்
மேலும் இவர்கள் தான் திட்டமிட்டு பாபர் மசூதியை இடித்தததாக சர்ச்சைகள் எழுந்தன. தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதுதொடர்பான வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரணை நடத்திய சிறப்பு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 32 பேரையும் விடுதலை செய்து 2020ல் உத்தரவிட்டது. மேலும் பாபர் மசூதி இடிப்பு முன்கூட்டியே திட்டமிடப்படவில்லை என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மேல்முறையீட்டு மனு
இந்நிலையில் தான் பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் பாஜக தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்தும், இதுதொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவும், உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த இரு முஸ்லிம்கள் சார்பில் உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தள்ளுபடி செய்த நீதிமன்றம்
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ரமேஷ் சின்ஹா, நீதிபதி சரோஜ் யாதவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பாஜக தலைவர்களுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதன்மூலம் பாஜக தலைவர்கள் விடுதலை செய்து 2020ல் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதை அலகாபாத் உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அயோத்தி வழக்கு..
முன்னதாக அயோத்தி ராமர் கோவில் மசூதி சர்ச்சை தொடர்பான வழக்கில் 2019 ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம், மசூதி கட்டுவதற்காக சன்னி வக்பு வாரியத்துக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து அயோத்தியில் தற்போது ராமர் கோவில் கட்டுமான பணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.