ஞானவாபி மசூதி வழக்கில் கார்பன் டேட்டிங்.. அடம் பிடித்த இந்து அமைப்பினர்.. கை விரித்த தொல்லியல் துறை
லக்னோ: ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட பொருளின் வயதை 'கார்பன் டேட்டிங்' மூலம் கணிக்க முடியாது என்று இந்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த பொருள் சிவலிங்கம் என்றும், எனவே இதன் உண்மையான வயது கார்பன் டேட்டிங் மூலம் கணிக்கப்பட வேண்டும் என்றும் இந்து அமைப்பினர் நீதிமன்றத்தை அணுகியிருந்தனர்.
அதேபோல மசூதியில் இந்துக்கள் வழிபாடு செய்வதற்கும் அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியிருந்தனர். இந்நிலையில் தொல்லியல் துறை தனது பதிலை தாக்கல் செய்திருக்கிறது.
ஞானவாபி மசூதியில் சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரும் வழக்கு: இன்று வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பு!
ஞானவாபி
உத்தரப் பிரதேசம் வாரணாசியில் அமைந்திருக்கிறது இந்த ஞானவாபி மசூதி. முகலாய மன்னர்கள் காலத்தில் இங்கிருந்த கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டிவிட்டார்கள் என்றும், மசூதி சுற்று சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை இருப்பதாகவும் எனவே இதனை வழிபட எங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று 5 இந்து பெண்கள் மாவட்ட நீதிமன்றத்தை நாடியிருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக மசூதியில் ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்படி நடத்தப்பட்ட ஆய்வில் மசூதிக்கு உள்ளே சிவ லிங்கம் போன்ற பொருள் இருப்பதாக சொல்லப்பட்டது.
கார்பன் டேட்டிங்
ஆனால் மசூதி நிர்வாகம் இதனை உறுதியாக மறுத்துவிட்டது. மேலும், இது நீரூற்று என்றும் விளக்கமளித்தது. இதனையடுத்து இந்த பொருள் இருக்கும் இடத்தை சீல் வைக்க கடந்த மே மாதம் உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து இந்த மர்ம பொருளை கார்பன் டேட்டிங் செய்து அதன் உண்மையான வயதை கண்டறிய வேண்டும் என்று 5 பெண்களும் கடந்த செப்டம்பரில் நீதிமன்றத்தை நாடியிருந்தனர். இதில் ஒரு பெண் மட்டும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இவ்வாறு இருக்கையில் சம்பந்தப்பட்ட பொருளை கார்பான் டேட்டிங் செய்ய முடியுமா? என்று இந்திய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் கேள்வியெழுப்பியிருந்தது.
உயிருள்ளவற்றிக்கு மட்டும்
இது குறித்து தொல்லியல் துறை இன்று தனது பதிலை தாக்கல் செய்திருந்தது. அதில் "சம்பந்தப்பட்ட பொருளை கார்பன் டேட்டிங் செய்ய முடியாது. அவ்வாறு செய்வதன் மூலம் அப்பொருளுக்கு பாதிப்பு ஏற்படலாம். உயிருள்ள பொருட்களுக்கு மட்டுமே இவ்வாறு வயதை கணிக்க முடியும்" என்று தொல்லியல் துறை வழக்கறிஞர் மனோஜ் குமார் சிங் நீதிமன்றத்தில் விளக்கமளித்திருந்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட பொருளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜே.ஜே.முனீர் அடங்கிய அமர்வு கூறியிருந்தது.
பாதிப்பு ஏற்படாத வகையில்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த எதிர் தரப்பினர், சம்பந்தப்பட்ட பொருளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஆய்வுகளை மேற்கொள்ள தொல்லியல் துறை முயற்சிக்க வேண்டும் என்று கூறினர். இதனையடுத்து இது குறித்து ஆலோசனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய 3 மாத காலம் அவகாசம் வேண்டும் என்று தொல்லியல் துறை கூறியது. இதற்கு அனுமதி மறுத்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் 30ம் தேதி ஒத்தி வைத்துள்ளது. பொதுவாக பழங்காலத்து எலும்பு கூடுகள், மண் பாண்டங்கள் ஆகியவைதான் கார்பன் டேட்டிங் செய்ய உட்படுத்தப்படும். ஏனெனில் இதில் கார்பன் இருக்கிறது. இதனை பகுப்பாய்வு செய்யும் போது இப்பொருட்களின் வயதை சராசரியாக நம்மால் தெரிந்துகொள்ள முடியும். இவ்வாறு இருக்கையில் இது நீரூற்றாக இருந்தால் உயிரினங்கள் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. அதேபோல சிவலிங்கமாக இருந்தாலும் அதன் மீதும் உயிர்கள் இருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு இருக்கையில் எப்படி கார்பன் டேட்டிங் செய்ய முடியும் என்று சிலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.