"நாங்க இருக்கோம்.." ஓவைசி கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களுக்கு பாஜக அமைச்சர் சப்போர்ட்
லக்னோ: உத்தரபிரதேசத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் ஓவைசி எம்.பி., கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இருவருக்கு பாஜக அமைச்சர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் உத்தர பிரதேசம். இங்கு பாஜக ஆட்சி நடக்கிறது. யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக உள்ளார். மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பிப்.,10, 14, 20, 23, 27, மார்ச் 3, 7 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் மார்ச் 10ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
பிப்.,10, பிப்.,14ல் இரண்டு கட்ட தேர்தல்கள் நடந்துள்ளன. இன்னும் 5 கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளது. மாநிலத்தில் பாஜக, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன்சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே களம் காண்கின்றன. ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்.பி.,யுமான ஓவைசி கட்சியும் வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது.

துப்பாக்கிச்சூடு
இதனால் வேட்பாளர்களை ஆதரித்து ஓவைசி உத்தர பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பிப்ரவரி 4ம் தேதி மீரட்டில் பிரசாரத்தை முடித்து டெல்லிக்கு காரில் திரும்பி கொண்டிருந்தார். ஹப்பூரில் சிலர் அவரது கார் மீது துப்பாக்கியால் சுட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இருவர் கைது
இதுகுறித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சச்சின் சர்மா, சுபம் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கைதான இருவருக்கும் உத்தர பிரதேச மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சுனில் பரலா ஆதரவு தெரிவித்துள்ளார்.

முழு ஆதரவு
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஹிந்தி மொழியில் குறிப்பிட்டுள்ளார். அதில், ‛‛சச்சின், சுபம் ஆகியோரின் குடும்பத்துக்கு அனைத்து வழிகளிலும் முழு ஆதரவு கொடுப்போம். இந்த விவகாரத்தில் நேர்மையான விசாரணை நடக்கும்'' என குறிப்பிட்டுள்ளார்.

உண்மை தெரியவரும்
முன்னதாக கவுதம் புத்தா நகரில் உள்ள சச்சின் சர்மாவின் வீட்டுக்கு அவர் சென்று குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். மேலும் கைது செய்யப்பட்டுள்ள இருவரும் தவறாக வழக்கில் இணைக்கப்பட்டுள்ளனர். இது விசாரணை முடிவில் உண்மை தெரியவரும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications