உ.பி. தேர்தல்: மீண்டும் பிராமணர் வாக்குகளுக்கு குறி- அயோத்தியில் மாயாவதியின் பி.எஸ்.பி பிரசாரம்
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பிராமணர் வாக்குகளுக்கு குறிவைத்து அயோத்தியில் இருந்து மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி பிரசாரத்தை தொடங்கி உள்ளது.
உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. பிரதான கட்சிகளான பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்டவை தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.
பிரதான கட்சிகள் அல்லாமல் ஓவைசியின் மஜ்லிஸ்ட் கட்சி 100 இடங்களில் போட்டியிடுகிறது. ஓவைசி மாநில கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணியையும் உருவாக்கி வருகின்றன.

அயோத்தியில் இருந்து..
இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி தமது தேர்தல் பிரசாரத்தை அயோத்தி ராமஜென்ம பூமியில் இருந்து தொடங்கி உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் வாக்கு வங்கியாக இருந்த 13% பிராமணர்கள் அண்மைக்காலமாக அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இதனை சரிகட்ட பாஜக பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பகுஜன் சமாஜ் கணக்கு ஓகே?
இதனையே தங்களுக்கு சாதகமாக்க முயற்சிக்கிறது பகுஜன் சமாஜ். 2007 சட்டசபை தேர்தலில் பிராமணர்கள் பிளஸ் தலித்துகள் வாக்குகளுடன் வெற்றி பெற்ற கணக்கை இப்போதும் போடுகிறது பகுஜன் சமாஜ். ஆனால் களநிலவரமோ இந்த கணக்குக்கு எதிராக இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

அடம்பிடிக்கும் பகுஜன் சமாஜ்
அன்று பகுஜன் சமாஜ் கட்சியை ஆதரித்த தலித்துகள், பிராமணர்களில் கணிசமானோர் பாஜகவின் வாக்கு வங்கியாக இருக்கின்றனர். இதனால்தான் பகுஜன் சமாஜ் கட்சியால் தேர்தல்களில் வெல்வது கடும் சவாலானதாகவே இருந்து வருகிறது. ஆனாலும் எப்படியும் மீண்டும் பிராமணர் பிளஸ் தலித்துகள் வாக்கு வங்கியை தக்க வைக்க முடியும் என நினைக்கிறது பகுஜன் சமாஜ்.

வெற்றி நிச்சயம்
இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச்செயலாளர் சதீஸ் மிஸ்ரா கூறுகையில், அயோத்தியும் ராமரும் பாஜகவுக்கு என காப்பிரைட்டா கொடுக்கப்பட்டுள்ளது? ராமஜென்மபூமியில் வழிபாடு நடத்த பாஜகவிடமா அனுமதி பெற வேண்டும்? 13 சதவீத பிராமணர்களும் 23 சதவீத தலித்துகளும் கை கோர்த்தால் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வெற்றி நிச்சயம் என நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.

மாயாவதியின் பிராமணர்கள் மாநாடு
இதனால்தான் அயோத்தி, மதுரா, காசி, சித்தரகூட் ஆகிய இடங்களில் பிராமணர்கள் மாநாடுகளை நடத்துகிறது பகுஜன் சமாஜ். இதில் அயோத்தி பிராமணர்கள் மாநாடு முடிவடைந்துள்ளது. அடுத்தடுத்து பிராமணர் பிளஸ் தலித் வாக்குகள் என்ற அடிப்படையில் பிரசாரத்தை முன்னெடுக்க இருக்கிறது பகுஜன் சமாஜ். ஆனால் இது சந்தர்ப்பவாத அரசியல் என்று சாடுகிறது சமாஜ்வாதி கட்சி. பகுஜன் சமாஜ் ஆட்சியில்தான் பிராமணர்கள் மீது ஏராளமான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் போடப்பட்டன என்கிறார் சமாஜ்வாதி கட்சியின் அபிஷேக் மிஸ்ரா.












Click it and Unblock the Notifications