பதற்றத்தில் உத்தராகண்ட்.. இன்று பொதுசிவில் சட்டம் சட்டசபையில் தாக்கல்! முதல் மாநிலமாக நிறைவேற்றுமா?
லக்னோ: உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்துக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கும் நிலையில் இன்று அம்மாநில சட்டசபையில் அதன் மீது விவாதம் நடைபெற உள்ளது.
பாஜகவின் பல ஆண்டுகால கனவு திட்டமாக பொது சிவில் சட்டம் இருந்து வருகிறது. பொது சிவில் சட்டத்தை இந்தியாவில் அமல்படுத்தும் முயற்சியில் பல ஆண்டுகளாக பாஜக ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசு கடந்த ஆண்டு இதற்கான பணிகளை தொடங்கியது. கடிதம் மூலமாகவும் இணையம், ஈ மெயில் மூலமாகவும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கலாம் என்று மக்களிடம் மத்திய அரசு கருத்து கேட்டது. இதற்காக பல லட்சக்கணக்கானோர் கருத்து தெரிவித்தனர்.

எதிர்கட்சிகள், இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகள் ஆரம்பத்தில் இருந்தே மத்திய அரசு கொண்டு வரும் பொதுசிவில் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஜெயினர்கள், பார்ஸிக்கள், பௌத்த மதத்தினர் திருமணம், சொத்து போன்ற சிவில் விவகாரங்களில் தங்கள் மத சட்டங்களை பின்பற்றி வருகின்றனர். இந்த நிலையில் அனைவருக்கும் சமமான பொது சிவில் சட்டமாக மாற்றுவது அனைத்து மதத்தினரையும் பாதிக்கும் என சட்ட வல்லுநர்கள் எச்சரித்தனர்.
பொது சிவில் சட்டம் காரணமாக சிறுபான்மையின மக்களின் மத சுதந்திரம் பாதிக்கப்படும் என்ற குற்றச்சாட்டு உள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் உத்தராகண்ட் மாநிலத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக பொதுசிவில் சட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ளது. மத்திய அரசு கருத்து கேட்பதற்கு முன்பே உத்தராகண்ட் பொது சிவில் சட்டத்தை உருவாக்கி அமல்படுத்துவதற்கான குழுவை கடந்த 2022 ஆம் ஆண்டே அமைத்தார் அம்மாநில முதலமைச்சர்.
கடந்த மாதம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "உத்தராகண்ட் மாநில சட்டப் பேரவையில் விரைவில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும். அனைத்து மதத்தினருக்கும் பொது சிவில் சட்டம் பொதுவான மதமாக இருக்கும்." என்றார். இந்த நிலையில் உத்தராகண்டில் சட்டசபையில் இதை கொண்டு வந்து சட்டமாக அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்த நிலையில், இந்த சட்டத்துக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதனை அடுத்து இன்று சட்டசபையில் இந்த மசோதா தொடர்பான விவாதம் நடைபெற உள்ளது. இதற்கு கடும் எதிர்ப்புகள் தொடர்ந்து வரும் நிலையில் அசம்பாவீதங்கள் நிகழாமல் இருக்க சட்டசபை வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications